Wednesday, July 30, 2014

அபிவிருத்திக்குப் பின்னர் சாய்ந்தமருது தோணாவின் அவல நிலை 13 இலட்சம் செலவு செய்து ஆற்றுவாழை செய்கை பண்ணப்பட்டிருப்பதாக மக்கள் புகார் (படங்கள்)



அபிவிருத்திக்குப் பின்னர் சாய்ந்தமருது தோணாவின் அவல நிலை

13 இலட்சம் செலவு செய்து ஆற்றுவாழை செய்கை பண்ணப்பட்டிருப்பதாக
மக்கள் புகார்

சாய்ந்தமருது தோணா சுமார் 13 இலட்சம் ரூபா செலவு செய்து அபிவிருத்தி செய்யப்படுவதாக ஊடகங்களில் பகிரங்கப்படுத்தப்பட்டது. இப்பணிக்காக கரையோர பாதுகாப்பு திணைக்களம் 13 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்நிதி கொண்டு தோணாவில் ஆற்றுவாழை செய்கைபண்ணப்பட்டிருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்
சாய்ந்தமருது தோணாவை சுத்தம் செய்து ஆழமாக்கும் வேலைத் திட்டம் கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் பணிப்புரையின் பேரில் துரிதப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் குறித்த பகுதிக்கு சென்று இத்தோணாவை சுத்தம் செய்து ஆழமாக்கும் பணிகளை பார்வையிட்டார். இதன்போது இவ்வேலைத் திட்டத்தை நேர்த்தியாகவும் துரிதமாகவும் செய்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய முதல்வர், தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார் எனவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இப்பகுதி பொது மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் முதல்வர் கேட்டறிந்து கொண்டார் எனவும் கூறப்பட்டிருந்தது.
கடந்த பல வருடங்களாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாகவும் துர்நாற்றம் வீசும் நிலையிலும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலும் சல்பீநியாக்கள் மற்றும் குப்பை கூளங்களால் நிரம்பிக் காணப்படுகின்ற இத்தோணாவை சுத்தம் செய்து ஆழமாக்கும் பொருட்டு கரையோர பாதுகாப்பு திணைக்களம் 13 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது.
இதற்கு மேலதிகமாக தேவைப்படும் நிதியை கல்முனை மாநகர சபை பொறுப்பேற்றுள்ளதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் அறிவித்துமிருந்தார்..
சாய்ந்தமருது தோணாவை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற்கட்டப் பணியாகவே அதனை சுத்தம் செய்து ஆழமாக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் எதிர்காலத்தில் அதனை நவீன முறையில் அபிவிருத்தி செய்து அழகு படுத்துவதற்கான பாரிய வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. இப்பிரதேச மக்களும் இத்திட்டத்தை பெரிதாக எண்ணி சந்தோசமடந்தனர்.
இப்படியாக 13 இலட்சம் ரூபா செலவிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சாய்ந்தமருது தோணா தற்பொழுது  .புதிய வடிவத்தில் காட்சி தருகின்றது.
அதாவது சாய்ந்தமருது தோணாவில் பசளை இடப்பட்டு ஆற்றுவாழை செய்கைபண்ணப்பட்டிருப்பது போன்று காட்சி தருகின்றது. ஆற்றுவாழையும் மிகவும் செழிப்பாக வளர்ந்திருக்கின்றது. 13 இலட்சம் ரூபா பணம் செலவு செய்து அபிவிருத்தி செய்த பின்னர் தண்ணீர் கடலுக்கு வடிந்து ஓடமுடியாதவாறு தோணாவில் ஆற்றுவாழை செய்கைபண்ணிவிட்டு சென்றிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தோணா அபிவிருத்தி என்று கூறி காலத்திற்கு காலம் மக்கள் பணத்திற்கு மண்போடும் (வீண்விரயமாக்கும்) செயல்பாடுகளில் சம்மந்தப்பட்டவர்கள் இறங்காமல் நிரந்தர தீர்வுக்கு திட்டம் வகுக்க வேண்டும் என்பதே

                              மக்கள் விருப்பமாகும் .













No comments:

Post a Comment