Friday, August 29, 2014

சிரியா உள்நாட்டுப் போரால் சீர்குலைவு 30 லட்சம் பேர் அகதிகள் ஆன பரிதாபம் ஐ.நா. பரபரப்பு தகவல்கள்

சிரியா உள்நாட்டுப் போரால் சீர்குலைவு
30 லட்சம் பேர் அகதிகள் ஆன பரிதாபம்

ஐ.நா. பரபரப்பு தகவல்கள்

உள்நாட்டுப் போரால் சீர்குலைந்து வரும் சிரியாவில் 30 லட்சம் பேர் அகதிகள் ஆகி விட்டனர். இது தொடர்பான பரபரப்பு தகவல்களை .நா. அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
எண்ணெய் வளமிக்க ஆசிய நாடான சிரியாவில் 30 ஆண்டு காலம் அபேஸ் அல் ஆசாத் ஆட்சி நடத்தினார். அவருக்கு பின்னர் அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் அவருக்கு எதிராக கடந்த 2011–ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப்போர் மூண்டது. தொடர்ந்து 4–வது ஆண்டாக இந்தப் போர் நீடித்து வருகிறது.
முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது சிரியாவில் உள்நாட்டுப் போர் உக்கிரம் அடைந்துள்ளது. இதில் இதுவரை 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக .எஸ்..எஸ். போராளிகளின் ஆதிக்கத்தால் சிரியாவின் நிலைமை மேலும் மோசமாகி உள்ளது.
இந்த உள்நாட்டுப் போரினால், நாட்டில் அகதிகளாகி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலோர் அண்டைநாடுகளுக்கு சென்று விட்டனர். 8–ல் ஒருவர் எல்லை தாண்டி சென்று விட்டதாக .நா. அகதிகள் அமைப்பு புள்ளிவிவரம் கூறுகிறது. 65 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து விட்டனர். ஒரு வருடத்துக்கு முன்னைய நிலவரப்படி பதிவு செய்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 20 லட்சம் ஆகும். சிரியாவின் அண்டை நாடுகளில் உள்ள அகதிகள் முகாமுக்கு குடும்பம், குடும்பமாக அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை, அந்த நாட்டினரை கதிகலங்க வைத்துள்ளது.
சிரியாவில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் எத்தனை பேர் அகதிகளாக உள்ளனர் என்பது பற்றிய புள்ளி விவரம்வருமாறு:–
லெபனான்– 11,75,504
துருக்கி– 8,32,508
ஜோர்டான்– 6,13,252
ஈராக் – 2,15,369
எகிப்து – 1,39,090
வட ஆப்பிரிக்கா– 23,367
.நா. அகதிகள் அமைப்பில் பதிவு செய்துள்ள அகதிகள், புகலிடம் கேட்டு பல்வேறு நாடுகளிடம் விண்ணப்பித்துள்ளனர். இந்த தகவல்களை .நா. அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சிரியா பிரச்சினை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, ‘‘சிரியா விவகாரத்தில் ஒரு தீர்வு காண்பதற்கு மேற்கத்திய நாடுகள் தவறி விட்டன. பஷார் அல் ஆசாத்தின் அடக்குமுறை ஆட்சி எந்தவித தடையுமின்றி தொடர்கிறது. அங்கு அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராளிகள் கூடுதல் பகுதிகளை கையகப்படுத்தி வருகின்றனர்’’ என கூறினார்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ‘‘சிரியாவில் போராளிகளுக்கு எதிராக அதிபர் பஷார் அல் ஆசாத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து மேற்கத்திய நாடுகள் சிந்திக்காது’’ என கூறி விட்டார்.

No comments:

Post a Comment