Friday, August 29, 2014

50 மொழிகளில் தட்டச்சு செய்யும் 8 வயது தமிழக முஸ்லீம் சிறுவன் அக்ரம்! உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்தார்


50 மொழிகளில் தட்டச்சு செய்யும்
8 வயது தமிழக முஸ்லீம் சிறுவன் அக்ரம்!
உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்தார்

சென்னையை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் சுமார் 50 மொழிகளில் தட்டச்சு செய்யும் தனது அபார திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றார்..
சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது, ஆமினா பேகம் ஆகியோரின் மூத்த மகன் மஹ்மூத் அக்ரம். சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் ஆற்றலை சிறு வயதிலேயே பெற்ற  அக்ரம்   சுமார் 50 இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் சரளமாக தட்டச்சு செய்யும் திறனை பெற்றார்.
அக்ரமின்  திறமையை அறிந்த, யுனிக் உலக சாதனைகள் (Unique World Records) அமைப்பு, தங்களுடைய 2014 ஆம் ஆண்டுக்கான சாதனையாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு, அக்ரமின் திறமையை வெளிக்காட்டுமாறு அழைப்பு விடுத்தனர்.இதனை ஏற்ற  சிறுவன் மஹ்மூத் அக்ரம் கடந்த ஆகஸ்ட் 24 அன்று பஞ்சாபின் பதிண்டா (Bathinda) என்ற இடத்தில் நடைபெற்ற யுனிக் உலக சாதனைகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் .
இதில் யுனிக் வேர்ல்ட் ரிக்கார்ட்ஸ் அமைப்பின் பெயரை 50 மொழிகளில் தட்டச்சு செய்து அக்ரமின் திறமையை வெளிக்காட்டுமாறு நிகழ்ச்சியாளர்கள் கோரினார். அக்ரமின் திறமையை எல்லாரும் அறிய பெரிய திரையில் திரையிட்டு காட்டப்பட்டது. அதன்படி கூடியிருந்த அனைத்து மீடியாவின் முன்பும், விழாவிற்கு வந்திருந்த அனைவரின் முன்பாகவும் மஹ்மூத் அக்ரம் டைப்பிங் செய்து எல்லோரையும் ஆச்சரியத்தில் அசத்தினார்.
இதையடுத்து ‘WORLD’S YOUNGEST MULTILINGUAL TYPIST’ என்ற சாதனையாளர் விருதினை யுனிக் வேல்ர்ட் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் அக்ரமிற்கு வழங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு  பதிண்டா தொகுதியின் எம்.எல். ஸ்ரீ சாருப் சந்த் சிங்லா மற்றும் கேரள மற்றும் லட்சத்தீவின் சாரணர் படையின் கமிஷ்னரும், செம்மனூர் இண்டர்நேசனல் ஜூவல்லர்ஸின் இயக்குநருமான ஹிஷாம் ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் 12 மொழிகளில் அக்ரமுக்கு எழுதவும், படிக்கவும் தெரியுமாம், பேசுவதற்கு உண்டான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளாராம்.இச்சிறுவனின் தந்தை அப்துல் ஹமீது வளைகுடாவில் பணி புரிந்து வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment