Wednesday, September 3, 2014

திரிபோலி விமான நிலையத்தில் 11 விமானங்கள் மாயம் போராளிகள் தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமாம் - அமெரிக்கா எச்சரிக்கை

திரிபோலி விமான நிலையத்தில் 11 விமானங்கள் மாயம்
போராளிகள் தாக்குதலுக்கு பயன்படுத்த திட்டமாம்
-    அமெரிக்கா எச்சரிக்கை

ஆபிரிக்க நாடான லிபியாவில், 34 ஆண்டுகளாக நடந்து வந்த கடாபியின்  ஆட்சியை, 2011 ஆம் ஆண்டு உள்ளூர் போராட்டக்குழுக்களின் உதவியுடன் இராணுவம் முடிவுக்கு கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு தேசிய இடைக்கால பேரவை ஆட்சி நிறுவப்பட்டது. பின்னர் கடந்த ஜூன் மாதம் பாராளுமன்றத்தேர்தல் நடந்தது. அதன்பிறகு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட்டது.
ஆனாலும் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட பல நகரங்களில் போராட்ட குழுக்கள் இடையே மோதல்கள் நடந்து வருவதால், டாப்ரக் நகரில் பாராளுமன்றம் செயல்பட்டு வருகிறது.
திரிபோலியில் உள்ள விமான நிலையம், கடந்த 3 ஆண்டுகளாக ஜிண்டான் போராட்டக்குழுவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த விமான நிலையத்தை கைப்பற்றுவதற்காக மிஸ்ரதா இஸ்லாமிய போராட்டக்குழு முயற்சி செய்து வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக ஜிண்டான் போராட்டக்குழுவுக்கும், இஸ்லாமிய போராட்டக்குழுவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வந்தது. இந்த சண்டையில் நூற்றுக்கணக்கானோர் பலியாயினர். விமான நிலையமும் ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விமான நிலைய சொத்துகளும் சேதம் அடைந்தன. இந்த நிலையில், விமான நிலையத்தின் கட்டுப்பாட்டினை மிஸ்ரதா இஸ்லாமிய போராட்டக்குழு கைப்பற்றி விட்டது என கூறப்பட்டது.

இரண்டு நாடுகளுக்கு சொந்தமான  11 விமானங்கள் கடந்த மாதம் காணவில்லை இந்த விமான நிலையத்தில் இருந்த 11 பயணிகள் விமானங்களை  காணவில்லை என்றும் இந்த விமானங்கள்  அமெரிக்காவில் 2001 செப்டம்பர் மாதம் 11 நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலை போன்று  மற்ற தாக்குதலுக்கு பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா கடந்த 2 வாரங்களாக  எச்சரித்து வருகிறது.

2001 செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது பயணிகள் விமானத்தை கடத்தி மோதினர்.

No comments:

Post a Comment