Tuesday, April 7, 2015

ஐபிஎல் தொடக்க விழா குழந்தையுடன் சென்றுள்ள சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி!

ஐபிஎல் தொடக்க விழா

குழந்தையுடன் சென்றுள்ள சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி!



ஐபிஎல் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் தோனி, மனைவி-குழந்தையுடன் கொல்கத்தாவுக்கு சென்றுள்ளார்.
எட்டாவது ஐபிஎல் போட்டியின் தொடக்க விழா, கொல்கத்தாவில் இன்று இரவு பாலிவுட் பிரபலங்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது.
தொடக்கவிழாவை பிரபலப்படுத்தும் வகையில் சைஃப் அலி கான் தொகுத்து வழங்கும் கலை நிகழ்ச்சியில் திரையுலகினர் கலந்து கொள்கின்றனர். ஃபர்ஹான் அக்தர், ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மாவுடன் இசையமைப்பாளர் பிரிதம் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. எட்டு அணிகளின் கேப்டன்களும் பங்கேற்று, 2008-லிருந்து பின்பற்றப்பட்டு வரும் போட்டி உறுதிமொழியை எடுத்துக் கொள்வர். நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கௌதம் கம்பீர் கோப்பையை அறிமுகப்படுத்துவார். பாலிவுட் நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ள மேடைக்கு எதிரே 30 ஆயிரம் பேர் மட்டுமே அமரும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்ள தன் மனைவி-மகளுடன் கொல்கத்தாவுக்கு வருகை தந்துள்ளார் தோனி. ராஞ்சி விமான நிலையத்தில், குழந்தையை ஏந்தியபடி தோனி வந்த காட்சி அவருடைய ரசிகர்களை மிகவும் பரவசப்படுத்தும் வகையில் அமைந்தது. தோனியின் மகள் ஜிவாவை (Ziva) முதல்முறையாக காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இதேபோல இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கொல்கத்தாவுக்கு வந்துள்ளார்.
 ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டம் நாளை தொடங்குகிறது. இதில் கொல்கத்தா - மும்பை அணிகள் மோதுகின்றன.

No comments:

Post a Comment