Friday, September 4, 2015

ஊழல் மோசடியற்ற கலாசாரமே மக்களின் எதிர்பார்ப்பு புதிய அமைச்சர்கள் மத்தியில் ஜனாதிபதி

ஊழல் மோசடியற்ற கலாசாரமே மக்களின் எதிர்பார்ப்பு

புதிய அமைச்சர்கள் மத்தியில்  ஜனாதிபதி

ஊழல் மோசடியற்ற ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி மலர இறைவனின் அருள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த 8 மாதங்களில் நாம் இலங்கை அரசியலில் புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ளோம். கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஐக்கிய தேசிக் கட்சி உட்பட பலரின் முயற்சியினால் இந்த நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டதுடன், புதிய அரசாங்கத்தினால் 100 நாள் வேலைத்திட்டமொன்றும் முன்வைக்கப்பட்டன.
இதன்போது நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எமக்கு ஆதவிரனைக் கொடுத்தது.
குறிப்பாக 100 நாள் வேலைத்திட்டத்தின் 19 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும், வரவுசெலவுத் திட்டத்தைநிறைவேற்றுவதற்கும் ஒத்துழைப்பு கொடுத்தது.கடந்த காலங்களில் ஒரே கட்சியனரே ஆட்சி அமைத்தனர்இதன்போது அமைச்சுக்களைப் பகிர்வதில் ஒரே கட்சியிலும் பல சவால்களும், அழுத்தங்களும் இருந்தன. இதனை ஒரு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் நன்கு அறிவேன்.
தற்போது தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அமைச்சுக்களைப் பகிரும் போது எவ்வாறான சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டும். இவ்வாறான பல அழுத்தங்களுக்கு மத்தியில் 48 அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களில் சுதந்திரக் கட்சிகு 15 அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன. இதனைத் தவிர பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுக்காளாக 18 அமைச்சுக்கள் வழங்கப்படவுள்ளன.
அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணிக்கு 33 அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், எனக்கு நினைவில் நிற்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 26 அமைச்சுக்களும், ஏனைய அமைச்சுக்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளன.அமைச்சுப் பொறுப்பு இருந்தால் மாத்திரமே மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்றல்ல. உறுப்பினர்கள் பல்வேறான சேவைகளை மக்களுக்கு வழங்கலாம்.நல்லாட்சி அரசாங்கம் எனும் போது நாம் கட்சி பேதம் மறந்து இந்த நாட்டு மக்களுக்காக சேவையாற்ற வேண்டும்.
ஜனவரி 8ஆம் திகதி கிடைத்த நல்லாட்சி அரசாங்கம் தொடரவேண்டும் எனவும், அரச நிறுவனங்களில் ஊழல் மோசடியற்ற ஒரு கலாச்சாரம் ஏற்பட வேண்டும் எனவுமே மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். ஊழல் மோசடியை இரகசியமாக செய்தாலும் வெளிப்படையாக செய்தாலும் அது எந்த நாளும் திரைமறைவில் இருக்காது மக்கள் முன் வெளிச்சத்திற்கு வரும். மக்கள் எதிர்ப்பார்க்கும் ஊழல் மோசடியற்ற ஒரு நேர்மையான நீதியான ஜனநாயகத்துடனான ஒரு நல்லாட்சியை ஏற்படுத்துவற்கான தகுதி, ஆளுமை என்பன உங்களிடத்தில் இருக்கின்றது.

எனவே இந்த நாட்டின் எதிர்க்காலத்திற்கும், மக்களின் எதிர்ப்பார்ப்பிற்கும் ஏற்றாற்போல் செயற்பட்டு ஊழல் மோசடியற்ற ஒரு நல்லாட்சியை ஏற்படுத்துவற்கு உங்களை வாழ்த்துவதுடன், கடவுளின் துணை கிடைக்க வேண்டும் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment