Wednesday, August 31, 2016

பாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும் சகோதரிகள் ஒரே விமானத்தை ஓட்டி சாதனை

பாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும்
சகோதரிகள் ஒரே விமானத்தை ஓட்டி சாதனை



பாகிஸ்தானில் விமானி ஆக பணிபுரியும் சகோதரிகள் (அக்கா- தங்கை) இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்துள்ளனர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர் மரியம் மசூத். இவர் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் விமானி ஆக இருக்கிறார். இவர் போயிங் 777 ரக விமானம் ஓட்டி வருகிறார்.

அவரது தங்கை எர்ரம் மசூத். இவரும் விமானி ஆனார். இவரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சில் பணிபுரிகிறார்.

இந்த நிலையில் எர்ரம் மசூத் பாகிஸ்தான் இன்டர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போயிங் 777 ரக விமானம் ஓட்டும் அளவுக்கு பதவி உயர்வு பெற்றார்.

 சகோதரிகள் இருவரும் ஒரேபோயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்தனர். இத்தகவலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் தன்யால் ஹிலானி தெரிவித்துள்ளார்.


சகோதரிகள் (அக்கா-தங்கை) இருவரும் லாகூர்-கராச்சி-மான் செஸ்டர், நியூயார்க் மற்றும் லண்டனுக்கு விமானம் ஓட்டியுள்ளனர்.

கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமான் படுகொலை! சடலத்தை கொண்டுசெல்ல உதவியோரில் இருவர் கைதாகலாம்?


கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமான் படுகொலை!

சடலத்தை கொண்டுசெல்ல உதவியோரில்
 இருவர் கைதாகலாம்?

இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர இளம் வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் ஜனாஸாவை மாவனெல்ல ஹெம்மாத்தகமவுக்கு எடுத்துச்செல்வதற்கு உதவியதாக கூறப்படும் இருவரை, விரைவில் கைதுசெய்யவுள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட பொலிஸ் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிராண்ட் பாஸ் மற்றும் சேதவத்தை பகுதியைச் சேர்ந்த இருவரே, இவ்வாறு உதவியிருப்பதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்களான அவ்விருவரும், பலமுறை அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் சிலர் தொடர்பில் விசாரணைகளை நடத்தப்பட்டுவருவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கோடீஸ்வர இளம் வர்த்தகரான முஹம்மட் சகீப் சுலைமானின் கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக கொழும்பிலிருந்து மாவனெல்ல, ஹெம்மாத்தகம பகுதி வரையுள்ள சீ.சீ.டிவி கமெராக்களை சோதனை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தனர்அதற்கு முன்னதாக கொழும்பு, பம்பலப்பிட்டிய சனநெரிசல் மிக்க இடங்களிலுள்ள சீ.சீ.டிவி கமெராக்களில் பதிவாக காட்சிகளை சோதனை செய்திருந்தனர்.

வியாபாரியின் தந்தையிடம் கப்பம் கோரி, கேகாலையிலிருந்து கிடைத்த அலைபேசி அழைப்பினை மேற்கொண்ட நபரை துல்லியமாக அடையாளம் காணுவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

குறித்த வர்த்தகர், கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்னால் வைத்து, இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டே படுகொலை செய்யப்பட்டார். அவரது சடலம், ஹெம்மாத்தகம பிரதேசத்திலிருந்து, 24 ஆம் திகதி புதன்கிழமை (24) இரவு மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வர்த்தகர் சுலைமானின் மரணம் தொடர்பில், பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும், வர்த்தகர்கள் ஐவர், இந்நாட்டை விட்டு வெளியேற முடியாத வகையில், கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸினால், தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று இரவு,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

நேற்று இரவு 7.40 அளவில் இலங்கையை வந்தடைந்த அவர், முதல் சந்திப்பாக பிரதமருடன்கலந்துரையாடல்களை நடத்தினார்.

இதன்போது இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் அபிவிருத்தி என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே ஐக்கிய நாடுகள் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், போர்க்குற்ற விசாரணைகளின்போது சர்வதேச நீதிபதிகளின் உள்ளடக்கம் குறித்த விடயத்தை இலங்கை தலைவர்களுடன் பேசுவார் என்று குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நேற்றைய சந்திப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை எதுவும்இதுவரை வெளியாகவில்லை.
இந்தநிலையில், இன்று பான் கீ மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.







ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை ஹேக் செய்த
இளைஞனுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு

ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய கடுகண்ணாவ பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது.

"இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த இணைய கம்பனிகளில் ஒன்றான எமது நிறுவனம் என்ற அடிப்படையில் அந்த இளைஞனை உடனடியாக விடுவித்து நல்லதொரு பாதைக்கு இட்டுச் செல்ல வழியமைத்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.




கல்முனை ஸாஹிறா மாணவனால் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இரசாயன விசிறல் சாதனம் கண்டு பிடிப்பு



கல்முனை ஸாஹிறா மாணவனால் சூரிய சக்தி மூலம்
இயங்கக்கூடிய இரசாயன விசிறல் சாதனம் கண்டு பிடிப்பு

( எம்..எம்.அஸ்ஹர். எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உயர்தர உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் ,எம், முஹம்மட் சவ்பாத் என்ற மாணவன் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய இரசாயன விசிறல் இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.
இம் மாணவன் சூழலுக்கு கழிவாக வீசப்படும் பொருட்களைப் பயன்படுத்தி இதனை கண்டு பிடித்துள்ளதுடன், இதனை உத்தியோகபுர்வமாக அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் இன்று ( 31 ) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது,
இந்நிகழ்வில் கல்லூரி அதிபர் பீ,எம்.எம்.பதுறுதீன் , பகுதித் தலைவர் ,ஆதம்பாவா , பிரதி அதிபர்கள் , உதவி அதிபர்கள் , தொழில்நுட்ப பிரிவு ஆசிரியை எஸ்.கஜேந்தினி உள்ளிட்ட ஆசிரியர்கள் . மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இம்மாணவன் கடந்த வருடம் கண்டு பிடித்த குறைந்த மின்சாரத்தில் இயங்கும் மாவரிக்கும் இயந்திரம் பிரபலம் பெற்று இலங்கை கண்டு பிடிப்பாளர் ஆணைக்குழுவால் பரிசில்களும் சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்டார்.
எதிர்காலத்தில் இப் பிரதேசத்தில் சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி பல புதிய கண்டு பிடிப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்த இயந்திரத்தை தயாரிப்பதற்கு உற்பத்திச் செலவு குறைவானதாகவும் , பாரம் குறைவானதாகவும், குறைந்த நேரத்தில் அதிக பரப்புள்ள பயிர் நிலங்களுக்கு விசிறல் செய்ய முடிவதோடு இதனை இயக்குவதற்கு எரிபொருள் அவசியமில்லை சூரிய சக்தியே போதுமானது. தனது கண்டு பிடிப்பை சந்தைப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதன் மூலும் கூடிய வருமானத்தைப் பெற முடியுமென இம் மாணவன் தெரித்தார்.

இம்மாணவன் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி ஒழுங்கு செய்திருந்த தேசிய மட்ட புத்தாக்க போட்டி , இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான போட்டி . இலங்கை பொறியிலாளர் நிறுவுகத்தால் நடத்தப்பட்ட போட்டி . சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தால் பாராட்டி கௌரவித்து சான்றிதழ் வழங்கப்பட்டமை . தேசிய இளைஞர் கழகத்தினால் நடத்தப்பட்ட “ The tellent ‘ என்ற போட்டியில் வெற்றி பெற்றமை தனக்கு கிடைத்த பெருமையாகவும் , தனது இம் முயற்ச்சிக்கு பெரிதும் உதவி புரிந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் .கல்லூரி அதிபர் பீ,எம்.எம்.பதுறுதீன் , பகுதித் தலைவர் ,ஆதம்பாவா ,வகுப்பாசிரியை திருமதி எஸ்.கஜேந்தினி , ஊடகங்கள் மூலும் தனது கண்டு பிடிப்புகளை பிரபலப்படுத்த உதவிய சிரேஸ்ட ஆசிரியர் எம்.,எம்.அஸ்ஹர் , தன்னை பல வழிகளிலும் ஊக்குவிக்கும் தனது பெற்றோருக்கும் சக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக இம் மாணவன் மேலும் தெரிவித்தார்.



இலங்கைக்கு புறப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு கைது வாரண்ட் பிறப்பித்ததுஅந்நாட்டு நீதிமன்றம்

இலங்கைக்கு புறப்பட்டு  வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும்
மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதிக்கு கைது வாரண்ட்
பிறப்பித்ததுஅந்நாட்டு  நீதிமன்றம்



இலங்கைக்கு புறப்பட்டு  வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிறைத் தண்டனைக் காலத்தின்போது சிகிச்சைக்காக லண்டன் சென்ற மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் நாடு திரும்பாததால் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலத்தீவில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முகம்மது நஷீத். இவர் தீவிரவாத குற்றச்சாட்டில் 13 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். அவரது தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி ஆபரேசன் செய்துகொள்வதற்காக பிரிட்டன் செல்ல அனுமதி கேட்டார். முதலில் மறுத்த அரசாங்கம், பின்னர் அவரது உடல்நிலை மோசமானதையடுத்து வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி அளித்தது.

ஆனால், சிகிச்சைக்காக லண்டன் சென்ற நஷீத், உடல் நலம் தேறியபோதும் மாலத்தீவுக்கு திரும்பி வரவில்லை. சமீபத்தில் அவருக்கு அரசியல் அகதியாக தஞ்சம் அளித்துள்ளது பிரிட்டன்.


இந்நிலையில், நஷீத் மாலத்தீவின் அண்டை நாடான இலங்கைக்கு புறப்பட்டு  வந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க அரசு அனுமதி கோரியது. இதனை ஏற்ற நீதிமன்றம், நஷீத்தை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

“புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு” தொடர்பான வடமாகாணசபை சார்பான தீர்மானம்...

புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பு” 

தொடர்பான வடமாகாணசபை சார்பான தீர்மானம்... 
(படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு ஊரதீவுப் பகுதியிலுள்ளதிருநாவுக்கரசு வித்தியாசாலையானது மிகவும் இடிந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பது தொடர்பாக ஊரதீவு மக்களினால்சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்திடம்தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களைத் தொடர்ந்து, சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்கள், வடமாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரட்ணம் அவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “புங்குடுதீவின் ஊரதீவு பகுதியில் அமைந்துள்ள மேற்படி திருநாவுக்கரசு முன்பள்ளியின் நிலைமைகள் தொடர்பிலும், அப்பகுதியிலுள்ள அதாவது கேரதீவு மற்றும் ஊரதீவு பகுதியிலுள்ள சிறுவர்கள் மிகவும் சிரமங்களுக்கு மத்தியில் நீண்டதூரம், நடந்து சென்று மடத்துவெளி கமலாம்பிகை பாடசாலையில் கல்விகற்று வருவதனால் அவர்கள் சோர்வடைந்து படிப்பில் அதீத கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருப்பது உள்ளிட்ட பல விடயங்களையும் சுட்டிக்காட்டிஉரையாடியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இது குறித்து வடமாகாணசபை உறுப்பினர் திரு. விந்தன் கனகரட்ணம் அவர்கள், “வடமாகாண கல்வியமைச்சின் ஊடாக உடனடியாக இது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும், மிகவிரைவில் மேற்படி பாடசாலையை திருத்தியமைத்து அதனை இயங்க வைப்பதற்கு தன்னாலான முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும்சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் தலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) அவர்களிடம் கடந்தமாத இறுதியில் உறுதியளிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதன் எதிரொலியாக இன்றையதினம் (30.08.2016), வடமாகாண சபையின் கல்வியமைச்சின் கூட்ட மகாநாட்டு மண்டபத்தில் நடந்த, வடமாகாண கல்வியமைச்சின் ஆலோசனை குழுக் கூட்டத்தில் "புங்குடுதீவு, ஊரதீவு திருநாவுக்கரசு வித்தியாலய புனரமைப்பானது" வடமாகாண சபையின் கல்வியமைச்சின், 2017 ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் நிறைவேற்றுவதென தீர்மானிக்கப்பட்டது.  

மேற்படி வடமாகாண சபையின் கல்வியமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டம், வடமாகாண சபை கல்வியமைச்சர் திரு.தம்பிராசா குருகுலராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேற்படிக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவகப் பொறுப்பாளர்களில் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினருமான திரு.விந்தன் கனகரத்தினம் உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களும், வடமாகாண சபையின் கல்வியமைச்சின் செயலாளர் திரு.ஆர்.ரவீந்திரன், வடமாகாண சபையின் கல்வியமைச்சின் மாகாண பணிப்பாளர் திரு.செ.உதயகுமார், வடமாகாண சபையின் கல்வியமைச்சின் பொறியியலாளர் திரு.சுரேஷ்குமார் உட்பட வடமாகாண சபை அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்

இதேபோன்று புங்குடுதீவின் ஏனைய பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாக, சுவிஸ் ஒன்றியத்தின் பார்வைக்கு வந்துள்ள பல செயற்பாடுகள் ஒவ்வொன்றாக மிக விரைவில்எம்மால் முடிந்தவரை நிறைவேற்றப்படும்என்பதையும் அனைத்துப் புங்குடுதீவு மக்களுக்கும் அறியத் தருகின்றோம்.

இவ்வண்ணம்
திரு.செல்லத்துரை சதானந்தன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்,
சுவிஸ்லாந்து.
30.08.2016.