Friday, September 2, 2016

ஹஜ் யாத்திரை கோட்டாவை கோட்டை விட்ட நல்லாட்சி! இவ்வாறான சூழலில் அமைச்சர் இங்கிலாந்து சென்றுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி சாடல்

ஹஜ் யாத்திரை கோட்டாவை கோட்டை விட்ட நல்லாட்சி!

இவ்வாறான சூழலில் அமைச்சர் இங்கிலாந்து சென்றுள்ளார்

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி சாடல்



ஹஜ் யாத்திரை செல்ல இம்முறை 2240 பேருக்கு மாத்திரமே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும், இதற்கு முன்னர் மேலதிகமாக 600 பேருக்கு யாத்திரை செல்ல வாய்ப்பு கிடைத்ததாகவும், தற்போது வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்படும் கோட்டா சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த வருடம் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சரும் அவரது சகோதரரும் மக்கா சென்றிருந்தனர். இந்த இவ்வாறான பிரச்சினை ஒன்று ஏற்பட்டுள்ள சூழலில் அமைச்சர் இங்கிலாந்து சென்றுள்ளார், இதனால், மக்கா செல்லும் யாத்திரீகர்களின் குறைபாடுகளை தேடி அறிய எவரும் இல்லை.

சவூதி அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. சவூதி பெண்கள் எவரையும் அனுப்பப் போவதில்லை என அமைச்சர் தலதா அத்துகோரள கூறியிருந்தார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, சவூதி அரேபிய தூதரகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.இவ்வாறான சம்பவங்களால் சவூதி அரசுடன் இருந்த நட்புறவு தன்மை இல்லாமல் போயுள்ளது.

இதன் காரணமாக மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கு மக்காவுக்கு யாத்திரை செல்லக் கூடிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை செல்லும் இலங்கை முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாறு கடிதத்தை கூட அனுப்பி வைப்பதற்கு இலங்கை முஸ்லிம் சமய விவகார அமைச்சால் முடியாமல் போயுள்ளது.

ஜனாதிபதியோ பிரதமரோ இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அரசாங்கத்தில் உள்ள எவரும் இது பற்றி தேடிப்பார்க்கவில்லை. இதனால், அரசாங்கத்தின் செயல் தொடர்பில் கவலை தெரிவித்து கொள்கிறேன்.

ஹஜ் யாத்திரை செல்ல 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரலாற்றில் என்றும் நடக்காதவை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து நடந்து வருகிறது.

2010ம் ஆண்டு 6500 முஸ்லிம்களுக்கு மக்கா செல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்கு மேலதிக தூதரகம் 350 பேருக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுத்தது.இதனை தவிர சவூதி தூதுவரின் அதிகாரத்திற்கு அமைய மேலும் 150 பேருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

2010 ஆம் ஆண்டில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மக்கா சென்றனர்.இம்முறை மக்கா செல்ல வீசா அனுமதியை பெற்றுக்கொடுக்க நியமிக்கப்பட்டுள்ள நபரை நான் முஸ்லிம் நபராக ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

இதனால், முஸ்லிம் நபரை நியமிக்குமாறு கடந்த இரண்டு வருடங்களாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போதிலும் அவர் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.


முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தை பௌத்த விவகார அமைச்சுடன் இணைத்து நடத்தி சென்றால், அதிக நன்மை கிடைக்கும் எனவும் அதனை தனியாக பிரித்த காரணத்தினால், பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக தன்னிடம் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியதாகவும் அஸாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment