Saturday, October 1, 2016

முதல்வரை சந்திக்க அப்போலோ சென்றார் தமிழக ஆளுநர் பத்து நிமிடங்களில் திரும்பியதாகவும் தகவல்


முதல்வரை சந்திக்க அப்போலோ சென்றார் தமிழக ஆளுநர்

பத்து நிமிடங்களில் திரும்பியதாகவும் தகவல்

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து  விசாரிக்க அப்போலோ மருத்துவமனை சென்றார். மேலும், ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை கேட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 4-ம் திகதி வரை ஆளுநர் தமிழகத்தில் தங்கி இருப்பார் எனவும் கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன. ஜெயலலிதா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவிவரும்வேளையில், ‘அவரது உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடப்படும்என்று கூறிவந்தனர்.
தி.மு. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 ‘‘அப்பாவித் தொண்டர்களுக்காகவாவது ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிற புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டு குழப்பத்தைப் போக்கிட யாரும் முன்வரவில்லை. ஒரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரை தமிழக ஆளுநர் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. ஏன், .தி.மு.-வின் தோழமைக் கட்சித் தலைவர்கள்கூட அவரைக் கண்டு பேசியதாகச் செய்தி வரவில்லை. இவ்வாறு ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்துவிடக் கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையிலாவது சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும். மேலும் முதலமைச்சர் இத்தனை நாட்கள் மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவது பற்றி மரபுகளை அனுசரித்து முறைப்படி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை’’ என்று கூறியிருந்தார்.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கொடுத்து உள்ள மனுவில்,
எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர்மூலம் அறிக்கை பெற வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பணியாற்றும் செயல்திறனோடு உள்ளாரா என்பதை தமிழக ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் அறிந்துகொள்ள வேண்டும். இந்த நடைமுறைகளில், ஜெயலலிதா செயல்படும் நிலையில் இல்லை என்று தெரியவந்தால், சட்டப்பிரிவு 356- பயன்படுத்தி தமிழக அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் இன்று தமிழகம் வந்தார். அவர், வரும் 4-ம் திகதி வரை தமிழகத்தில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அடுத்த 4 நாட்களுக்கு தமிழக நிலவரங்களைக் கண்காணித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிப்பார் எனக் கூறப்படுகிறது.

ஆளுநர் தமிழகம் வந்தவுடன் அவரிடம் முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மையை வெளியிடக்கோரி தி.மு.-வினர் மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஆளுநர் தமிழகம் வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.


ஆளுநர், பத்து நிமிடங்களில், அப்போலோவில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்று விட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

கவர்னர் வித்யாசாகர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திந்தாரா? அல்லது மருத்துவர்களிடம் மட்டும் விவரங்கள் கேட்டறிந்தாரா என்பன உள்ளிட்ட தகவல் விரைவில் அதிகார்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




No comments:

Post a Comment