Thursday, December 29, 2016

ஏறாவூரில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலமும் புற்றுநோய் பராமரிப்பு நிலைய நிதி திரட்டல் நிகழ்வும்

ஏறாவூரில் மாபெரும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலமும்
புற்றுநோய் பராமரிப்பு நிலைய நிதி திரட்டல் நிகழ்வும்

ஏறாவூரில் நிர்மாணிக்கப்படவுள்ள கிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிக்கான நிதி திரட்டல் நிகழ்வும் புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலமும் நாளை வெள்ளிக்கிழமை ஏறாவூரில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஜும்ஆ தொழுகையை அடுத்து ஏறாவூர் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசலில் இருந்து இந்த ஊர்வலம் ஆரம்பமாகி மணிக்கூட்டு கோபுர சந்தியில் முடிவடையும்.அதனைத் தொடர்ந்து அஸர் தொழுகையின் பின்னர் நிதி திரட்டல் நிகழ்வு இடம்பெறும்.


ஏறாவூரில் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இந்த நிலையம் தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட வைத்தியர் .இக்பால்  கூறுகையில்;

எம்மில் அதிகமானவர்கள் புற்று நோய் தொடர்பில் விழிப்பற்றவர்களாகவே இருக்கின்றனர்.இந்தக் கொடிய நோய் சம்பந்தமாக நாம் அனைவரும் விழிப்பாக இருப்பதன் மூலமே இதில் இருந்து தப்ப முடியும்.ஆகவேதான்,இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது எமது கடமையாகும்.

அதையும் மீறி புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாத  நிலையை அடைந்தவர்களை இறுதிவரைக்கும் வைத்துப் பராமரிப்பதற்கான ஒரு நிலையான அமைவிடம் இன்றைய கால கட்டத்தில் தவிர்க்கமுடியாததாகிவிட்டது.

இந்தச் சிக்கல் நிலையை சமாளிப்பதற்காக எமது எண்ணத்தில் உதித்ததுதான் கிழக்கு புற்று நோய் பராமரிப்பு நிலையம்.இந்த யோசனை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான முயற்சியில் நாம் இப்போது இறங்கியுள்ளோம்.

இது ஒரு வைத்தியசாலை அல்ல.மாறாக வைத்திய பராமரிப்பினால் குணமாக்க முடியாது என நாட்குறிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அமைதியான சூழலுடன் கூடிய அவ்வப்போது காணப்படும் வலிகளுக்கான அல்லது குணங்குறிகளுக்கு நிவாரணம்  வழங்கும் ஒரு நிலையமாகும்.

குணப்படுத்த முடியாத நிலையை அடைந்த-மரணத்தை எதிர்பாத்து இருக்கின்ற புற்றுநோயாளிகளை இறுதி வரைக்கும் வேதனை இன்றிப் பராமரிப்பதே இந்த புற்று நோய் பராமரிப்பு நிலையத்தின் நோக்கம்.

மேலும் வலியை ஏற்படுத்தும் எல்லா அறிகுறிகளுக்கும் நிவாரணம் வழங்குதல்,நோயாளியை ஆன்மீகரீதியாக-உளவியல்ரீதியாக தைரியப்படுத்துதல்,நோயாளி இறக்கும் வரை முடிந்தளவு இயங்குவதற்கு உதவுதல்,மரணம் தவிர்க்க முடியாதது என்பதை அவருக்கும் அவரது உறவுகளுக்கும் உயிரோட்டமாய் உணர்த்துதல் போன்ற பல பராமரிப்பு சேவையை இந்த நிலையம் செய்யவுள்ளது.

இதன்மூலம்,நோயின் தாக்கத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான பராமரிப்பு நிலையம் ஒன்று அவசியப்படுகின்றது.தேசிய சொத்தாக மாறப்போகும் இந்த நிலையத்தின் நிர்மாணத்துக்கு உதவ வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.

மிகவும் அமைதியான சூழலில் நோயாளிக்குத் தேவையான- நோயாளிகளின் உறவினர்கள் கூடவே தங்கக்கூடிய அனைத்துவிதமான வசதிகளுடனும்  இந்த நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.எதிர்காலத்தை கருத்திற்கொண்டு தூரநோக்குடன் நோக்குபவர்களுக்கு இந்த நிலையத்தின் தேவைப்பாடு தெளிவாக விளங்கும்.-என்கிறார்.

01-Name of Account:
Eastern Cancer Care Hospice
Amana Bank , Eravur Branch Acc. No: 0010273276001

02-Name of Account.
Eastern Cancer Care Hospice 
Peoples Bank Eravur Branch Acc.no: 1 2 3100100049812


தொடர்புகளுக்கு:
யூ.நூஹுலெப்பை [ ஆசிரியர் ] - 0773662821
எஸ்.எல்.ஹாலிதீன் [பொறியியலாளர்] -.0777006280

[ எம்..முபாறக் ]



No comments:

Post a Comment