Tuesday, February 28, 2017

சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இம்மாதம் 8 ஆம் திகதி மாத்தறையில்.


சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில்

இம்மாதம் 8 ஆம் திகதி  மாத்தறையில்.



சர்வதேச மகளிர் தின தேசிய வைபவம் இம்மாதம் 8 ஆம் திகதி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார; அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்ற நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார இந்த விடயத்தை தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார மேலும் தெரிவிக்கையில்:
இந்த வைபவத்தில் 1500 பெண்கள் உட்பட பல அதிதிகள் பங்கேற்க உள்ளனர்.
மகளிர் தினத்திற்கு இணைவாக மாத்தறை மாவட்டம் முழுவதும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு மாத்தறை பொலிஸ் நிலையத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்படும். இந்தப் பிரிவுக்குரிய கட்டிடத்திற்கான அடிக்கல்லும் அன்றைய தினம் நாட்டி வைக்கப்படும்.
இன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மகளிர் தினத்தை முன்னிட்டு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன..

பெண்களின் குரலை ஓங்கச் செய்யும் வகையில் 24 மாவட்டங்களிலும் பேரணிகளையும்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார; அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார கூறினார்.

மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்ய விசேட சுற்றுநிருபம் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது


மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை

தடை செய்ய விசேட சுற்றுநிருபம்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது


பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யும் வகையில் கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைவாக வெளி நபர்களும் குழுக்களும் அனுமதியின்றி பாடசாலைகளுக்குள் பிரவேசிப்பதும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுவதும் முழுமையாகத் தடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக மாணவர்கள் மத்தியில் அடிப்படைவாத கருத்துக்களை முன்னெடுப்பதற்கு சில குழுக்களும் நபர்களும் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நடவடிக்கை மாணவர்களின் கல்விக்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தடையாக  அமைந்திருப்பதாக  பெற்றோர் கல்வி அமைச்சிற்கு முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடுகளையும் ஏனைய பல விடயங்களையும் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சின் செயலாளர் இந்த விசேட சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளார்.

இல்மியன்ஸ் நடைபவனி 2017 போதை பொருளற்ற சமூகத்தை உருவாக்க வாரீர்..!


இல்மியன்ஸ் நடைபவனி 2017

போதை பொருளற்ற சமூகத்தை உருவாக்க வாரீர்..!



வெல்பொதுவெவ அல்இல்மியா பழைய மாணவர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் நிகழ்வான இல்மியன்ஸ் நடைபவனி 2017 (ILMIYANS WALK 2017) எதிர் வரும் மார்ச் மாதம்,15 ஆம் திகதி,ஞாயிற்றுக் கிழமை 8.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
போதை பொருளற்ற சமூகம்எனும் தொனிப் பொருளில் இது இடம் பெற உள்ளது. இன் நிகழ்விற்கு போதை பொருளை எமது நாட்டை விட்டு விரட்ட வேண்டும், போதை பொருள் அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கும் அனைவரும் கலந்து சிறப்பிக்ககுமாறு இல்மியாவின் பழைய மாணவர் சங்கம் வேண்டிக்கொள்கிறது.
mohamed arshad

மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்திற்குச் சென்ற கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி


மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின்
அடக்கஸ்தலத்திற்குச் சென்ற

கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலி

மீரா அலி ரஜாய்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி அவர்கள் நேற்று மாலை  ஜாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு  சென்று  அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் அடக்கஸ்தலத்தில்( துஆ )பிரார்த்தனையில்  ஈடுபட்டிருந்தார் .

ஹசன் அலி அவர்கள் தனது உம்ராக் கடமைகளை முடித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பே  நாடு திரும்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




ஜப்பானியரை சுட்டுக் கொலை செய்த 5 பேருக்கு மரண தண்டனை இன்று தீர்ப்பு


வங்காளதேசத்தில் ஜப்பானியரை சுட்டுக் கொலை செய்த

5 பேருக்கு மரண தண்டனை இன்று தீர்ப்பு

வங்காளதேசத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வங்காளதேசம் நாட்டில் ராங்பூர் நகரில் கடந்த 2015-ம் ஆண்டில் ஜப்பானைச் சேர்ந்த குனியோ ஹோஷி மர்ம நபர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார்இந்தப் படுகொலை தொடர்பாக ஜே.எம்.பி (ஜமாதுல் முஜாஹிதீன் பங்ளாதேஷ்) என்ற அமைப்பைச் சார்ந்த 8 பேர் தேடப்பட்டு வந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இருவர் பொலிஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். ஒருவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்.

ஹோஷியின் கொலை வழக்கு விசாரணை ராங்பூர் நீதிமன்றத்தில் தொடந்து நடந்து வந்த நிலையில், இறுதித் தீர்ப்பை நீதிபதி இன்று அறிவித்தார். இத்தீர்ப்பில், கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்டதால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜே.எம்.பி அமைப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவதாக கூறி அந்நாட்டு அரசால் கடந்த மூன்றாண்டுகளாக தடையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



வறுமையின் கோரப்பிடியில் சிக்கி ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட ரஸ்ய முன்னாள் வீராங்கனை


வறுமையின் கோரப்பிடியில் சிக்கி

ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட

ரஸ்ய முன்னாள் வீராங்கனை

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி கரையேற முடியாமல் தவித்த ரஸ்ய முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை, ஒலிம்பிக்கில் தான் வாங்கிய பதக்கங்க்களை ஏலத்தில் விற்றிருக்கிறார்.
1972-ம் ஆண்டு நடைபெற்ற முனிச் ஒலிம்பிக் போட்டிகளில்ஜிம்னாஸ்டிக் டார்லிங்என புகழப்பட்டவர் ஒல்கா கோர்பட். ரஸ்யாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான இவருக்கு தற்போது வயது 61.
இந்நிலையில், வறுமையின் கோரப்பிடி காரணமாக ஒலிம்பிக்கில் தான் வாங்கிய இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் கோப்பைகள் உட்பட மொத்தம் முப்பத்திரண்டு பொருட்களை ஒல்கா ஏலத்தில் விட்டுள்ளார்.
 இதன் மூலம் இவருக்கு 3,33,500 அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக ஒலிம்பிக்கில் இவர் வாங்கிய தங்கப்பதக்கம் 66,000 அமெரிக்க டாலருக்கு விலை போயுள்ளது.
1991-ம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்த ஒல்கா தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வசித்து வருகிறார்.

ஒல்கா வாங்கிய ஒலிம்பிக் மெடல்கள் அவரை பசியிலிருந்து காப்பாற்றியதாக, அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.





ஊவ வெல்லஸ்ஸ புரட்சி வீரர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை கண்டி மகுள் மடுவவில் இடம் பெறும்


ஊவ வெல்லஸ்ஸ புரட்சி வீரர்களை

நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் வைபவம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்

நாளை கண்டி மகுள் மடுவவில் இடம் பெறும்



தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க புரட்சிக்கு புத்துயிர் அளிக்கப்பட்டமை தவறு என்று கருதி ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டவர்களை உண்மையான நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பபெறவுள்ளது.
இதுதொடர்பான வைபவம் நாளை மாலை 4.00 மணிக்கு கண்டி மகுள் மடுவவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடுசெய்துள்ளது.

1818ம் ஆண்டு ஊவ வெல்லஸ்ஸ புரட்சியில் கலந்துகொண்டதினால் மரணதண்டனை விதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் நாடு கடத்தப்பட்ட சுமார் 84 பேர் நாட்டுப்பற்றுள்ளவர்களாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியினால் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த நிகழ்வில் மல்வத்து அஸ்கிரி பீடங்களை சேர்ந்த மகாநாயக்கர்கள் மாகாசங்கத்தினர் சபாநாயகர் தலைமையிலான அமைச்சர்கள் அரச அதிகாரிகள் இந்த வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் உள்ளிட்டே பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


இந்த வைபவம் நாளைய தினம் மாலை 4.00 மணிமுதல் ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பப்படவுள்ளது.

ஆஸ்கர் வரலாற்றிலேயே முதன் முறையாக விருது பெற்ற முதல் முஸ்லிம் நடிகர் அலி Oscars 2017: Mahershala Ali is first Muslim actor to win academy award


ஆஸ்கர் வரலாற்றிலேயே முதன் முறையாக

விருது பெற்ற முதல் முஸ்லிம் நடிகர் அலி

Oscars 2017: Mahershala Ali is first Muslim

actor to win academy award


ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாக சிறந்த துணை நடிகருக்கான விருது முஸ்லிம் நடிகரான மஹெர்ஷலா அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 89வது விருது வழங்கும் விழாவில், மூன்லைட் படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

விருதை பெற்றுக் கொண்ட அலி தனது மனைவி, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


ஆஸ்கர் விருது பெற்ற முதல் முஸ்லிம் நடிகர் அலி என்பது குறிப்பிடத்தக்கது.








கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்


கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு

நீதிகோரி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்




இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல்போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி எதிர்வரும் சனிக்கிழமை (04.03.2017) அன்று காலை 10-12 மணிவரை வவுனியா பிரதான பேரூந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த ஊடக அமைப்புக்களையும், ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்பாட்டுக்குழு
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கம்

Protest for the Justice of  more than 38 Kidnapped, missing and Murdered
Journalists of  Srilanka.


Journalist  of Vavuniya District, have decided to protest for the kidnapped, missing and murdered Journalist  of North, East and other provinces of  Srilanka for justice, on 04TH of March 2017 at about 10.00am to 12.00pm in Vavuniya bus stand.
We kindly request all the journalists and of Media organizations of North, East and other provinces of Srilanka to participate the protest for the justice of kidnapped, missing and murdered journalists.
Organized by Vavuniya Journalists.
Contact No.
0776245508> 0776550632
0772772826> 0775588141
0773142763.




Monday, February 27, 2017

நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதி உத்தரவு


நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு

தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து

இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

நீதிபதி உத்தரவு

மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், நடிகர் தனுஷ் எங்களுடைய மகன், எங்களுக்கு வயதாகி விட்டதால் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு பொய்யானது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இரு தரப்பினரிடமும் உள்ள நடிகர் தனுசின் பள்ளி மாற்று சான்றிதழ்களை தாக்கல் செய்யுமாறு மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இருதரப்பினரும் சான்றிதழ்களை தாக்கல் செய்தனர். நடிகர் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சான்றிதழ்களில் அங்க மச்சம் அடையாளம் குறிப்பிடவில்லை என எதிர்தரப்பினர் வாதிட்டனர்.
நடிகர் தனுசின் அங்க அடையாளம் காண இன்று (28ஆம் திகதி) ஆஜராகுமாறு நடிகர் தனுசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காலை 9.45 மணி அளவில் நடிகர் தனுஷ் தனது வக்கீல்களுடன் மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு வந்தார். தனுசின் பெற்றோரான கஸ்தூரிராஜா, விஜயலட்சுமி ஆகியோரும் ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர்.


பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மேலூர் தம்பதி கூறிய தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து இன்று மாலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. பதிவாளர் அறையில் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்க்கும்போது அரசு மருத்துவர் ஒருவர் உடன் இருக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை மார்ச் 2ஆம் திகதி ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.