Sunday, April 30, 2017

தலைகீழாக கவிழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு


தலைகீழாக கவிழ்ந்த பஸ்

விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் ஜகார்தாவில் இருந்து தெற்கே 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது சியான்ஜூர் மாவட்டம். இப்பகுதியில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த நான்கு கார்கள் மீது வரிசையாக பயங்கரமாக மோதியது.

அத்துடன் சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை இடித்துத் தள்ளிய  பஸ், இறுதியில் ஒரு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

பஸ் கட்டுப்பாட்டை இழப்பதற்கு பிரேக் பிடிக்காதது காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் முதற்கட்ட விசாரணையின் முடிவில் மட்டுமே விபத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க


உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு
உரிய பெறுமதி வழங்குவோம்

-    பிரதமர் ரணில் விக்ரமசிங்க



உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பிற்கு உரிய பெறுமதி வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில்,
உழைப்பிற்கு உரிய பெறுமானத்தை வழங்கவும், நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கவும் இம்முறை மே தினத்தை ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்திக் கொள்வோம். ஒட்டுமொத்த உலகமும் உழைக்கும் மக்களின் வியர்வையினால் தங்கியுள்ளது.
வரலாற்றுக் காலம் முதல் தங்களது உரிமைகளுக்காக தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த போராட்டங்கள், அர்ப்பணிப்புக்களுக்கான அங்கீகாரமாக உலக மே தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
தற்போதைய காலத்தில் உழைப்பாளி என்பதற்கு விரிவான ஓர் அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் தொழிற்சாலையில், பண்ணையில் கடமையாற்றிய தொழிலாளர்களே உழைப்பாளி என அழைக்கப்பட்டனர்.
எனினும் தற்போது உழைப்பினை வழங்கும் அனைத்து தரப்பினரும் உழைப்பாளிகளாக கருதப்படுகின்றனர். இதனால் அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளும் பலவிதமானதாக காணப்படுகின்றது.

உழைக்கும் மக்களின் உழைப்பிற்கும் உரிய பெறுமதியை வழங்கும் எதிர்காலத்தை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

"ரமழானுக்குத் தயாராகுவோம்" விசேட உரை


"ரமழானுக்குத் தயாராகுவோம்"

விசேட உரை



ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாமில் எதிர்வரும் மே 02 ஆம் திகதி செய்வாய்க்கிழமை மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து "ரமழானுக்குத் தயாராகுவோம்" என்ற தலைப்பிலான விசேட உரை மௌலவி எம். டபிள்யூ. எம். பஹ்ரூத்தீன் மிஸ்பாஹி அவர்களினால் மாலை 7.00 மணிக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

மாதத்தின் முதல் வாரம் மற்றும் நான்காம் வாரம் என தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பயான் நிகழ்ச்சி தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினம் இன்று


முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின்

24வது நினைவு தினம் இன்று


மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 24வது நினைவு தினம் இன்று இடம்பெறவுள்ளது.
நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் இன்று; காலை ஆரம்பமாகும்.
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொள்ள உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 24வது நினைவு தினத்தை முன்னி;ட்டு கொழும்பு ஸ்ரீ சுச்சரித்த மண்டபத்தில் நேற்று இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி தர்ம போதனை இடம்பெற்றது.
 இன்று  காலை கொழும்பு {ஹணுப்பிட்டிய காங்காராம விஹாரையில் மஹாசங்கத்தினருக்கு தானம் வழங்கப்படும்.
 நினைவு தினக் குழுவின் தலைவர் சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆலோசனைக்கு அமைய இந்த பிங்கம நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

 கொழும்பு மாவட்டத்தில் 250 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உறுதிகள் மற்றும் கடன் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இடம்பெறும். அமைச்சர் சஜித் பிரேமதாசவின் யோசனைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை கைவிட முடியாது - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள

பொறுப்புக்களை கைவிட முடியாது

- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன


நீண்டகால போராட்டப் பாதையில் புடம் போடப்பட்டு நவீன ஜனநாயக சமூக கட்டமைப்பில் முக்கிய சக்தியாக செயற்படும் தொழிலாளர் வர்க்கம் நாட்டின் ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யும் போராட்டத்திலும் முக்கிய பங்கை வகித்திருக்கின்றார்கள் என்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தொழிலாளர் மே தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தொழிலாளர் மே தின வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:


இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி கேள்வி கணைகள் தொடுத்த மக்கள்


இறக்காமத்திலும் ஹக்கீமை நோக்கி

கேள்வி கணைகள் தொடுத்த மக்கள்



அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இன்று இறக்காமத்திற்கு அமைச்சர் ஹக்கீம் வருகிறார் என்றவுடன் கட்சி பேதமின்றி இறக்காமத்து மக்கள் அனைவரும் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வந்தனர்.

அமைச்சர் ஹக்கீமின் பேச்சில் அவர்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தகர்ந்தன.எந்தவிதமான உறுதி மொழிகளையும் அவரால் வழங்க முடியவில்லை.எப்படி உறுதி மொழி வழங்குவார்? ஏற்கனவே பிரதமர் ரணிலுடன் பேசி அங்கு வைக்கப்பட்ட சிலை ஒரு வார காலத்தில் அகற்றப்படுமென கூறியிருந்தார். இன்று வரை அதனை அகற்ற முடியவில்லை.இப்போது மீண்டும் பிரதமர் பெயரை பாவிக்காமல் ஜனாதிபதியின் நாமம் பாவிக்கப்படுகிறது.

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமொரு விடயம் என்னவென்றால் இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனையும் சம்மதப்படுத்தி மு.காவினர் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.சம்பந்தனோ இதற்கும்  தனக்கும் சம்பந்தம் இருப்பதாக எங்கும் பகிரங்கமாக கூறவுமில்லை குரல் கொடுக்கவுமில்லை.இதனை வைத்து சிந்திக்கும் போது  சம்பந்தனின் பெயரும் ஹக்கீமால் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.இதனை சம்பந்தன் பெரிய விடயமாக தூக்கி பிடித்திருந்தால் ஊடகவியலாளர் மாநாடுகளில் இவ்வரசை கிழித்து தள்ளி இருப்பார்.

குறிப்பாக அமைச்சர் ஹக்கீம் ஜனாதியுடனான பேச்சில் தனக்கு நம்பிக்கையுள்ளது போன்று குறிப்பிடுகிறார்.அதாவது இப் பிரச்சினை இத்தோடு தீர்ந்துவிடுமென உறுதியாக அவரால் கூற முடியவில்லை.ஒருவர் பொது பல சேனா முதலாம் அல்லது இரண்டாம் திகதி வரப்போவதாக கூறியுள்ளது.மக்கள் கொதித்து நிற்கின்றனர்.அவர்கள் வந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என கூறுகிறார்.ஹக்கீமோஅங்க ஒண்டும் கொதிப்படைய மாட்டார்கள்என்ற அலட்சியப் பாணியில் பதில் வழங்குகிறார்.இங்கு அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனாவை வர விட மாட்டோம்,தடுப்போம் என்றல்லவா பதில் வழங்கியிருக்க வேண்டும்.இக் கூற்றானது அவர் இறக்காம மக்களை எவ்வாறு கணக்கு போட்டு வைத்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.

அமைச்சர் ஹக்கீமிடம் சிலை வைக்க பணம் வாங்கியதான கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.காலா காலாமாக மு.காவை ஆதரித்து வந்த இறக்காமத்து மக்களும் ஹக்கீம் கூறுவதை கேட்டுக்கொண்டிருக்காது கேள்வி எழுப்பும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையானது மக்கள் இன்னும் பொறுமை காக்க மாட்டார்கள் என்பதைக் கூறிச் செல்கிறது.
துறையூர் .கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

ஓட்டாமவடி மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.



ஜனாதிபதியையும்  துறைசார் அமைச்சரையும் அழைத்து

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா!

கல்முனைப் பிரதேசத்தில் எல்லா வைபவங்களிலும்

ஒரு முகமே மக்கள் தெரிவிப்பு !!!!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பான முறையில் நேற்று 29 ம் திகதி காலை பத்து மணியளவில் மேன்மை தங்கிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் ஆகியோர்களின் பங்குபற்றுதளுடன் ஆரம்பமானது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கண்காட்சி கூடங்களையும் பார்வையிட்டார். அத்துடன், பாடசாலை அதிபர் MA.ஹலீம் இஸ்ஹாக் அவர்களினால் பாடசாலையின் நினைவுச்சினமும் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு கல்வி அமைச்சரால முஸ்லிம் மாணவிகள் தொடர்பாக சந்தோஷமான் அறிவிப்புக்களும் விடுக்கப்பட்டன இவ்வாறு துறைசார் அமைச்சரை அழைத்து வைபவங்கள் நடத்துவது குறித்து மட்டக்களப்பு பிரதேச கல்வியாளர்களை மக்கள் பாராட்டுகின்றார்கள்.
இதேவேளை. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் இவ்வாறு துறைசார் அமைச்சர்களை அழைத்துவராமையே அம்பாறை கரையோரப் தேசம் அபிவிருத்தியில் பின்னடைவுக்கு காரணம் என மக்களால் கவலை வெளியிடப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிப்பதற்கும், கட்டங்களை திறந்து கையளிப்பதற்கும் அந்தந்த  துறைசார் அமைச்சர்களை அழைத்து வருவதற்கு எமது அரசியல்வாதிகள் தயக்கம் காட்டுவதே இப்பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்னடைந்திருப்பதற்கு பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனையிலும் சனிக்கிழமை பொத்துவிலிலும் பல கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஆனால் இத்திறப்பு விழாக்களுக்கு துறைசார் அமைச்சர்கள் எவரும் அழைக்கப்படாமல் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் தலைவரே சகல  அடிக்கற்களை நட்டதுடன் கட்டடங்களையும் திறந்து வைத்தார் என மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் கட்டடங்கள் திறக்கப்பட வேண்டியிருந்தால் இச்சந்தர்ப்பத்தை பாவித்து கல்வி அமைச்சரை இப்  பிரதேசத்திற்கு அழைத்து வந்து அவர் மூலமாக அடிக்கற்களை நட்டியும் கட்டடங்களைத் திறக்க வைத்தும் அவரை கெளரவித்து இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு மேலும் பல உதவிகளை அவரிடம் பெற்றுக் கொண்டிருக்க முடியும். அது மாத்தியரமல்லாமல் இப் பிரதேசங்களிலுள்ள குறைபாடுகளை அமைச்சருக்கு பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக எத்தி வைக்கவும் சந்தர்ப்பம் ஏற்படும் இதற்கு எமது அரசியல்வாதிகள் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக இல்லை என மக்களால் கவலை வெளியிடப்படுகின்றது.
உண்மையில் ஓட்டாமவடி மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.















மண் சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி


மண் சரிவில் சிக்கி

9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி

கிர்கிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தானின் தெற்கு பகுதியிலுள்ள உஸ்ஜென் மாவட்டத்தின் ஓஷ் பகுதியில், கனமழை பெய்து வருவதால் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
குறித்த நிலச்சரிவின் காரணமாக 9 குழந்தைகள் உட்பட 24 பேர் மண்ணினுள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 20 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணமல் போனவர்களை தேடும்பணியில் அந்நாட்டு பாதுகாப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பாக குறித்த பகுதியிற்கு நிலச்சரிவு அபாயம் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.