Wednesday, May 31, 2017

சம்பூர் கடற்கரையில் டொல்பின் மீன்கள்!


சம்பூர் கடற்கரையில்  டொல்பின் மீன்கள்!

சம்பூர் கடற்கரையில் நேற்று பகல் வேளையில் அதிகளவு டொல்பின் மீன்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிய அளவிலான இந்த மீன்கள் திடீரென இவ்வாறு கடற்கரையை நோக்கி வந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து டொல்பின் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆழ் கடலில் வாழும் டொல்பின்கள் கடற்கரைக்கு வந்தமைக்கான காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.





ஞானசார தேரருக்கு உயிராபத்து, இதனாலேயே வாக்குமூலம் அளிக்க வரவில்லை - நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே


ஞானசார தேரருக்கு உயிராபத்து,

இதனாலேயே வாக்குமூலம் அளிக்க வரவில்லை

- நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே



பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணைப் பிரிவு நேற்று (31) கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்துக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.
ஞானசாரரை கைது செய்து விளக்கமறியலில் வைத்தால், சிறைச்சாலைக்குள் அவருக்கு உயிர் ஆபத்து இருப்பதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அப்பிரிவு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கான நடவடிக்கையில், தேரரிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும், அவரால் ஆஜராக வரமுடியாமல் இருப்பதும், அவருக்குள்ள உயிராபத்தைக் கருத்தில் கொண்டே ஆகும் எனவும் டிலந்த விதானகே குற்றவியல் பிரிவிடம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

டிலந்தவின் முறைப்பாட்டையும் நீதிமன்றத்திடம் குற்றவியல் விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

அனர்த்தங்களுக்கு மத்தியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன - முன்னாள் அமைச்சர் அஸ்வர் கவலை


அனர்த்தங்களுக்கு மத்தியிலும்

முஸ்லிம்களுக்கு எதிரான  வன்முறைகள் தொடர்கின்றன

-    முன்னாள் அமைச்சர் அஸ்வர் கவலை
                                                            
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


வெள்ளம் வடிந்தும், மலைகள் சரிந்தும், கட்டடங்கள் உடைந்தும் போன வேளையில் கூட இன்று நாட்டின் பல இடங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை நாங்கள் காணக் கூடியதாக இருக்கின்றது என முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான் . எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்திருப்பதாவது,
இதற்கொரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி இதனை நேரடியாக முஸ்லிம் எம். பி.மார்கள் அனைவரையும் அழைத்துப் பேசி ஒரு தீர்வுக்கு வர வேண்டும். அதுவன்றி  ஒவ்வொருவரிடத்திலும் பேசுவதன் மூலமாக இதற்கு ஒரு நாளும்  தீர்வு காண முடியாது என்பதை ஜனாதிபதி  நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கை சமாதானப் பேரவையின் செயலாளர்  ஜிஹான் பெரேரா நேற்று ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட முஸ்லிம்களுக்கு  எதிராக அவிழ்த்து விடப்பட்டுள்ள வன்செயல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது  இந்த அரசாங்கத்தின் தலையாய கடமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்ற மே மாதத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான 21 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அந்த ஊடகச் செய்தி சர்வதேச ரீதியிலும் சென்றுள்ளது.
இன்றும் கூட பல முஸ்லிம் கிராமங்களில் பெண்கள் தறாவீஹ் தொழ பள்ளிவாசலுக்குச் செல்வதற்கு  அச்சம் கொண்டுள்ளதாக எமக்கு பல பாகங்களிலிருந்தும் அறிவித்தல் கிடைத்துள்ளனஇந்த நிலை முன்பிருந்ததாக அவர்களே குற்றஞ்சாட்டினார்கள். எனவே, கிராமங்களில் இருட்டில், பள்ளிவாசல்களில் தொழும் இடங்களுக்குச் செல்ல வேண்டி இருக்கின்றது. ஆகவே இந்தப் புனிதமான மாதத்தில் தறாவீஹ் போன்ற வணக்க வழிபாடுகளை எந்த பயமும் இல்லாமல் செய்வதற்கு உரிய நல்ல சூழ்நிலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்து தர வேண்டும் என முஸ்லிம் முற்போக்கு முன்னணி செயலாளர் என்ற வகையில் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

இதற்கிடையில் சகல பகங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினாலும் மண்சரிவினாலும் பாதிப்பாகியுள்ள முஸ்லிம்களுக்கும் ஏனைய இன மக்களுக்கும் ஆங்காங்கே இருக்கின்ற முஸ்லிம் முற்போக்கு முன்னணி உறுப்பினர்களும் கூட்டு எதிர்க்கட்சி முஸ்லிம் உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து தங்களால் முடிந்த தேவையான நிவாரணங்களை பாதிப்புற்றோருக்குத் வழங்கத் தேவையான சகல உதவிகளையும் செய்யுமாறும் அழைப்பு விடுக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பது பற்றி வெள்ளியன்று தீர்மானிக்கப்படும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்


மூடப்பட்ட பாடசாலைகளைத் திறப்பது பற்றி

வெள்ளியன்று தீர்மானிக்கப்படும்

- கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


இயற்கை அனர்த்தங்களையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் திறப்பது பற்றி நாளை வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று (31) புதன்கிழமை கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அதில் தொடர்ந்தும் அவர் குறிப்பிடும் போது,
இந்த அனர்த்தங்களில் மாணவ சமூகத்தைச் சேர்ந்த 44பேர் பலியானதுடன் 8பேர் காணாமல் போயுள்ளனர். மழை, வெள்ளம், மண்சரிவு முதலான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மூன்று சீருடைத்துணிகள் இலவசமாக வழங்கப்படுவதோடு, பாடப்புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், பாதணிகள் போன்றவையும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பிரதேச பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வர்ண உடை அணிந்து பாடசாலை செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், பரீட்சைச் சான்றிதழ்கள் சேதமடைந்திருப்பின் அவற்றை மீள வழங்கும் வேலைத்திட்டம் அமுலாவதாகவும் தெரிவித்தார்.

 கூட்டுறவு கடன் வழங்கும் நிறுவனங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுககு முன்னுரிமை வழங்குமாறும் கல்வி அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

அதிபர் அமானுல்லாஹ் மறைவு கல்விச் சமூகத்துக்கு இழப்பு - முன்னாள் அமைச்சர் அஸ்வர்


அதிபர் அமானுல்லாஹ் மறைவு

கல்விச் சமூகத்துக்கு இழப்பு

- முன்னாள் அமைச்சர் அஸ்வர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த என்.. அமானுல்லாஹ்வின் மறைவு மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரமல்ல, கற்றோர்கள் மத்தியில் அனைவருக்கும் ஏற்பட்ட ஓர் இழப்பாகும் என முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் .எச்.எம். அஸ்வர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இவரை நான் சுமார் 40 ஆண்டு காலமாக நன்கறிவேன். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் உதயமாகிய போது, அன்று தாரா குண்டு என்னும் பிரதேசத்திலிருந்து வந்த சேஹ் தாவூத்தோடு இவர் முஸ்லிம் கல்வி மாநாட்டின் பல கூட்டங்களில் கலந்து கொண்டது மாத்திரமல்ல, கல்வி சம்பந்தமான பல ஆழ்ந்த கருத்துக்களை காலத்திற்குக் காலம் வெளியிட்டவராவார்.
 பிரபலமான புலவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரிடத்தில் புலமைத்துவம் நிறைந்து காணப்பட்டது.
கொழும்பு பாடசாலைகளிலும் பல்துறை ஆசானாகவும் அதிபராகவும் நற்சேவை புரிந்த கால கட்டத்திலும்  நாம் இருவரும் மிகவும் முஹப்பத் கொண்டிருந்தோம் என்பதையும் நான் இங்கு மீள் நினைவூட்டிப் பார்க்கிறேன்.
எனவே ஆலிம்களுடைய மறைவு அகிலத்தின் மறைவு போன்றுஅறிஞர்களுடைய மறைவு நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
அன்று மன்னாரிலிருந்து புலிகளால் துரத்தப்பட்டு கற்பிட்டி கடலோரத்துக்கு மன்னார் மாவட்டத்திலிருந்து 22,000 மக்கள் வந்த போது, இவரும் அதில் ஒருவராக இருந்தார். அன்று புத்தளம் தொகுதிக்கு பொறுப்பான உறுப்பினர் என்ற முறையிலே இவருக்கும் இவர் சார்ந்த குடும்பங்களுக்கும் ஏனையோருக்கும் என்னால் பல உதவிகளை வழங்க முடிந்தது. இவர், அமைச்சர் றிஷாத் பதியுதீனுடைய மாமனாரும் ஆவார்.
இவர் உம்முகுல்தூம் என்பவரை கரம் பிடித்து 4 பிள்ளைகளுக்கு தந்தையாக விளங்கினார்.

இவருடைய மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற இந்தப் புனித ரமழான் மாதத்தில் துஆச் செய்கிறேன்.என்று தெரிவித்துள்ளார்.

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம் நல்லாட்சியில் மட்டுமே நடக்கும்.


நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்படும் நபர்

வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக கூறும் அதிசயம்

நல்லாட்சியில் மட்டுமே நடக்கும்.



பொலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் அதிசயமும் வழக்குக்கு சமூகமளிக்காமல் நீதிமன்றதுக்கு மருத்துவ சான்றிதழ் அனுப்பும் அதிசயமும் நல்லாட்சியில் மாத்திரமே நடக்கும் அதியங்கள் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..
தாங்கள் வளர்த்த கடா மார்பில் பாய்வதால் நல்லாட்சியாளர்கள் இப்போது வாயடைத்துப் போய்நிற்கின்றார்கள். ஞானசார தேரர் இந்த நல்லாட்சியாளர்களின் பங்காளி. அவரை ஏவி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம்களிடமிருந்து  பிரிக்க சதி செய்யப்பட்டதாக நாம் அன்று தொடர்ச்சியாக கூறி வந்தோம். அன்று எம்மை விமர்சித்தவர்கள் இன்று நிர்வாணமாக நிற்கிறார்கள்.
பொதுபல சேனா காரியாலய திறப்புக்கு கோத்தாபய ராஜபக் சென்றமை தொடர்பில் அவர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். பௌத்த தேரர்கள் காரியாலயம் ஒன்றை அங்குரார்பணம் செய்ய  அழைத்தார்கள். பாதுகாப்பு செயளாலர் என்ற வகையில் நான் அங்கு சென்றேன். அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில்  நான் அறிந்த பின்னர் அவர்களுடன் எந்த தொடர்பையும் நான் வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது இதனையும் விமர்சித்தவர்கள் இன்று ஞானசார தேரரை நல்லாட்சி பாதுகாக்கிறது என்பதை கண்கூடாக கண்டுகொண்டுள்ளனர். மஹிந்த அரசாங்கத்தில் அவரை பாதுகாத்த அதே சக்தி இந்த அரசாங்கத்திலும் அவரை பாதுகாக்கின்றது. அவ்வாறு பாதுகாக்க தவறும் பட்சத்தில் அவர் தொடர்பான பல உண்மைகளையும் முஸ்லிம்களுக்கு எதிராக பல சதிகளையும் ஞானசார தேரர் வெளியிட வேண்டி ஏற்படலாம். அதனால் பலரது முகத்திரைகள் கிழியும் என்பதே இதன் பின்னால் உள்ள மர்மமாகும்.

ஞானசார தேரருக்கு  மஹிந்த ராஜபக்ஷவும் கோத்தாபய ராஜபக்ஷவும் அடைக்கலம் வழங்கியதாக கூறியவர்கள் இன்று நிர்வாணமாகி நிற்கின்றனர் என அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது


15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம்

10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது



போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர்.
திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.
இதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை - தேவனம்பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அது தொடர்பில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் வாகன திணைக்களத்தினுள் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இந்த சட்ட விரோத நடவடிக்கை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமையும், அதனூடாக இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்ப்ட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தியுள்ள திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர், போலியாக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியல் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஹார்ட் டிஸ்க் எனப்படும் வன் தட்டு ஒன்றினை மீட்டுள்ளதுடன் அதிலிருந்து தகவல்களைப் பெற்று போலி சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
இதனைவிட நாளை முதலாம் திகதி மோட்டார் வாகன திணைக்களத்துக்கு செல்லும் சிறப்பு பொலிஸ் குழு அங்கு, இந்த சட்ட விரோத கும்பலுடன் தொடர்பினைப் பேணிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்துவது குறித்தும் ஆராயவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.