Thursday, August 31, 2017

கல்முனைக் கரையோர மாவட்டத்தைக் கோரும் பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றவும்


கல்முனைக் கரையோர மாவட்டத்தைக் கோரும்

பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றவும்


Wednesday, August 30, 2017

ஏ.எச்.எம்.அஸ்வரின் ஜனாஸா நேற்று மாலை நல்லடக்கம்

மறைந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வரின் ஜனாஸா நேற்று மாலை 30 ஆம் திகதி மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் தெஹிவல ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் பெருந்திரளானவர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாஸா நல்லடக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மறைந்த அமைச்சர் முஸ்லிம் சமுகத்திற்கு செய்த சேவைகள் மற்றும் அவரது பணிகள் தொடர்பாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் அனுதாபச் செய்தியில் தெரித்தார்.

ஜனாஸா நல்லடக்கத்திற்கு முன்னர் நேற்று காலை அமைச்சரின் வீட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரடியாகச் சென்று தனது அனுதாபங்களை அவரின் குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரும் ஜனாதிபதி அவர்களுடன் இதன்போது இணைந்துகொண்டனர்

மியான்மரில் வெடித்துள்ள இனமோதலில்100க்கும் மேற்பட்டமுஸ்லிம்கள் படுகொலை

மியான்மரில் பௌத்தர்களுக்கும், ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே வெடித்துள்ள இனமோதலில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராக்கைன் மாநிலத்தில் ரோகிஞ்சா முஸ்லிம்களை பாதுகாக்கும் நோக்கத்தில் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள், ராக்கைன் மாநிலத்தில் 30-க்கும் மேற்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடிகள் மீது வெடிகுண்டு வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதில் 12 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பௌத்த மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளது.

இராணுவத்தினரும் ரோகிஞ்சா மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கியால் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் 92 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பெரும்பாலானவர்கள் ரோகிஞ்சா கிளர்ச்சியாளர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ள நிலையில் மியான்மரை விட்டு ரோகிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறி வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உயிருக்கு பயந்து கிட்டதட்ட 9000 ரோகிஞ்சா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு தப்பியோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மியான்மரில் நிலவும் மோசமான சூழ்நிலையை கருத்தில் கொண்ட ஐ.நா, மியான்மர் அரசு நடத்தும் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டு மக்களை பாதுகாக்கும் படி ஆங் சான் சூ கீ தலைமயைிலான மியான்மர் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை அசைத்த வங்கதேசம்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது!

ஆஸ்திரேலிய அணி, தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வங்கதேசம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

டாஸ் வென்று, பேட்டிங் தெரிவு செய்த வங்கதேசம், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 260 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்க ஆஸ்திரேலியா, வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல், 217 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் தரப்பில் அனுபவ வீரர், ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அபாரமாகப் பந்து வீசி, 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம், 221 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 265 ஓட்டங்களை நிர்ணயித்தது வங்கதேசம்.

அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ரென்ஷா மற்றும் கவாஜா ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தாலும், ஸ்மித் மற்றும் வார்னரின் பொறுப்பான ஆட்டத்தினால் அந்த அணி நல்ல நிலையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர், சதமடித்து, பின்னர் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இன்று காலை வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் ஆஸ்திரேலியா அணியைத் தனது பந்துவீச்சால் திணறடித்தார். சிறப்பாகப் பந்து வீசி, ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில், அந்த அணி 244 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

வங்கதேசம், டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, வங்கதேச அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tuesday, August 29, 2017

முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்


முன்னாள் அமைச்சர் அஸ்வர் காலமானார்



முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான .எச்.எம். அஸ்வர் இன்று இரவு 7.15 மணியளவில் தனியார் வைத்தியசாலையில் காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 80.

4 பிள்ளைகளின் தந்தையான இவர், லங்கா சமசமாஜக் கட்சி மூலம் அரசியலுக்குப் பிரவேசித்து பின்பு .தே. மூலம் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும், முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சர் மற்றும் பாராளுமன்ற விவகார இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகித்ததோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.
ஆசிரியராக மட்டுமல்லாது மஹரம தினகரன் பத்திரிகை செய்தியாளராக  தனது பொது வாழ்வை ஆரம்பித்த இவர், கலாநிதி ரீ.பி. ஜாயா, டாக்டர் எம். சீ. எம். கலீல், எம். எச் . முஹம்மத், எம். . பாக்கிர் மாக்கார் உட்பட பல முஸ்லிம் தலைவர்களோடு  நெருங்கி செயற்பட்டார்.
ஜனாஸா நாளை மாலை தெஹிவளை பெரிய பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்.
தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம் 04 என்ற முகவரியிலுள்ள அவரது வீட்டிலிருந்து ஜனாஸா நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்


செங்கோலுடன் கழிவறைக்கு ஓடிய உறுப்பினர்! அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட மூலம் தென் மாகாண சபையில் 27 வாக்குகளால் தோல்வி

தென் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சந்தன பிரியந்த, செங்கோலை எடுத்துக்கொண்டு கழிவறையை நோக்கி ஓடியதால் சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சந்தன பிரியந்தவை மேலும் சில உறுப்பினர்கள் பின் தொடர்ந்து சென்றனர். எவ்வாறாயினும், சில உறுப்பினர்கள் இணைந்து செங்கோலை மீண்டும் சபைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அரசியலமைப்பின் 20வது திருத்த சட்ட மூலம் இன்றைய தினம் தென் மாகாண சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், அது 27 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

குறித்த சட்ட மூலம் மாகாண சபைகளின் அங்கீகாரத்துக்காக நாடாளுமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், தென் மாகாண சபையில் குறித்த சட்டமூலம் தோல்வியடைந்துள்ளது.

இந்த சட்ட மூலம் இன்று வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் படுத்தும் 27 பேர் சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது முதலமைச்சர் சான் விஜேலால் சில்வா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சபையில் இருக்க வில்லை

எனக்கும் லஞ்சம் கொடுக்க வந்தார்கள் [Political Gossip]

மத்திய வங்கி பிணை முறி ஊழல் விவகாரமானது ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததுடன் ஓய்ந்துவிடவில்லை.

இதுதான் ஆரம்பம்.இதனுடன் தொடர்புபட்ட இன்னும் பலர் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவுள்ளனர்.

இந்த ஊழலுடன் தொடர்புபட்ட பேர்பேச்சுவல் நிருவனத்தின் உரிமையாளர் அர்ஜுன ஆலோசியஸ் ரவி கருணாநாயக்கவுக்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்ததுபோல் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள இன்னும் பலருக்கு பணம் மற்றும் காணி போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளாராம்.

குடும்பத்தில் உள்ள வேறு நபர்களின் பெயரில்தான் இந்தச் சொத்துக்கள் உள்ளனவாம்.ஜேவிபி இவற்றைத் தேடுகிறதாம்.இந்த நிலையில்,ஆலோசியஸ் ரஞ்ஜன் ராமநாயக்கவுக்கும் லஞ்சம் வழங்க முற்பட்டமையை அறிய முடிந்துள்ளது.

அதாவது,மத்திய வங்கி பிணை முறி தொடர்பான கோப் அறிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலேயே அதில் ஐ.தே.க உறுப்பினர்கள் அடிக்குறிப்பிட்டனர்.இந்த அடிக்குறிப்பை இட வைத்தவர் ஆலோசியஸ்தானாம்.

இதற்காக ஒவ்வொருவருக்கும் அவர் இரண்டு லட்சம் ரூபா லஞ்சம் வழங்கியதோடு ரஞ்ஜன் ராமநாயக்காவுக்கும் வழங்க முற்பட்டாராம்.ஆனால்,அவர் வழங்க மறுத்துவிட்டாராம்.

அண்மையில்,நிகழ்வு ஒன்றில் ரன்ஜனும் ஜேவிபியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்கவும் சந்தித்துக்கொண்டனர்.ஊழல்கள் தொடர்பில் அவர்கள் பல விடயங்களை பேசிக்கொண்டனர்.அப்போது ரஞ்ஜன் மேற்படி சம்பவத்தை வசந்த சமரசிங்கவிடம் கூறி இருக்கின்றார்.

ஆனால்,யார் யார் இவ்வாறு பணம் பெற்றார்கள் என்ற விவரத்தைக் கூறவில்லையாம்.

அப்போ,,இன்னும் நிறைய நம்பிக்கை இல்லா பிரேரணைகளைக் காணலாம்போல.

[எம்.ஐ.முபாறக் -சிரேஷ்ட ஊடகவியலாளர்]

Monday, August 28, 2017

86 கொலைகள் செய்த ஆண் நர்ஸ் ஜெர்மனியில் அதிரவைக்கும் சம்பவம்


86 கொலைகள் செய்த ஆண் நர்ஸ்

ஜெர்மனியில் அதிரவைக்கும் சம்பவம்

ஜெர்மனியைச் சேர்ந்த ஆண் தாதி ஒருவர் அவர் சிகிச்சை அளித்த 86 நோயாளிகளைக் கொலை செய்தார் என்பது உறுதியாகியுள்ளது.
இவர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார். அவர் வேலைபார்த்த இரண்டு மருத்துவமனைகளில் இரண்டு நபர்களை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார்மேற்படி வழக்கு விசாரணையின்போது அவர் மேலும் பலரை மருந்துகளை மாற்றிச்செலுத்தி கொலை செய்திருப்பதாக ஒப்புக்கொண்டார்.
இவரின் பணிக்காலத்தில் 130க்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அவர்களை உடல்களை ஆய்வு செய்ய வழக்கு நடந்து வரும் ஜெர்மனியின் ஓல்டன்பெர்க் நகர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நேற்று வெளியாகிய ஆய்வு முடிவின் படி 86 நோயாளிகள் 'நீல்ஸ் ஹோஹெல்' என்கிற அந்த ஆண் தாதி குறிப்பிட்டிருந்த ஐந்து மருந்துகளின் மூலமாகத்தான் இறந்துள்ளதாக உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக மேற்கொண்டும் 41 ஆய்வகச் சோதனைகள் நடந்து வருகின்றது. அவையும் வந்துவிட்டால் ஐரோப்பிய வரலாற்றிலேயே மிகப்பெரிய 'தொடர் கொலைகாராக' நீல்ஸ் கருதப்படுவார் என்று கூறுப்படுகிறது.




சிங்கப்பூர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் 23-ம் திகதி தேர்தல்


சிங்கப்பூர் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக

செப்டம்பர் 23-ம் திகதி தேர்தல்



(இடமிருந்து வலம்) சாலே மரிக்கான், ஹலிமா யாக்கோப், பரித் கான்)

சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு எதிர் வரும் செப்டம்பர் 23-ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும். அவ்வகையில் தற்போதைய ஜனாதிபதி டோனி டான் பதவிக்காலம் விரைவில் நிறைவடைவதால் வரும் செப்டம்பர் மாதம் 23-ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக, மலாய் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த தேர்தலில் போட்டியிடலாம் என்ற விதிமுறை உள்ள நிலையில் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் என்ற பெண்மணி அறிவித்துள்ளார்.

இதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலபதிபர் முஹம்மது சாலே மரிக்கான் மற்றும் பரித் கான் கைம் கான் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் 12-ம் திகதிவரை பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர்களின் விபரம் 13-ம் திகதி அறிவிக்கப்படும்.


இதற்கிடையில், போட்டியில் இருந்து இரு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, விலகி கொண்டாலோ புதிய ஜனாதிபதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. அப்படி நடைபெறாதபட்சத்தில் 23-ம் திகதி நடைபெறும் தேர்தலில் சிங்கப்பூர் மக்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் செலுத்தியும் 40 பேருக்கு ஹஜ் செய்ய முடியாத நிலை


கட்டணம் செலுத்தியும் 40 பேருக்கு

ஹஜ் செய்ய முடியாத நிலை



இலங்கையிலிருந்து இம்முறை ஹஜ் கடமைக்காக பயணிக்கவிருந்த 35 யாத்திரிகர்கள் புனித மக்கா நகருக்கு செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்துள்ள அதேவேளை, 5 யாத்திரிகர்கள் அங்கு சென்று கடமைகளில் பங்குபற்ற முடியாமல் திரும்பியுள்ளனர்.
தமக்குரிய வீசா நடைமுறைகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் விமான டிக்கட் பெற்றுக்கொடுக்க முடியாமல் போன காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
முகவர் நிறுவனமொன்று இவர்களுக்கு ஹஜ் யாத்திரிகைக்கான ஏற்பாடுகளை செய்து பணத்தை பெற்றுக்கொண்ட நிலையில் குறித்த 35 யாத்திரிகர்களுக்கான விமான டிக்கட்டுக்களை ஏற்பாடு செய்ய தவறியுள்ளனர்.
ஹஜ் யாத்திரிகைக்கான இறுதி விமானம் இன்று புறப்பட்டு சென்ற நிலையில் குறித்த 35 பேருக்கும் இம்முறை ஹஜ் கிரிகைகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மக்கா சென்ற 5 யாத்திரிகர்கள் உரிய நேரத்துக்கு சென்றடைய தவறியதால் கிரிகைகளில் பங்குபற்ற முடியாமல் திரும்பியுள்ளனர்.
இம்முறை ஹஜ்ஜுக்காக 2,840 கோட்டாக்கள் கிடைத்த நிலையில் இறுதித் தருவாயில் மீண்டும் 600 கோட்டாக்கள் மேலதிகமாக கிடைத்தது. மேலதிகமாக வழங்கப்பட்ட 600 கோட்டாக்களில் 40 கோட்டாக்களை பெற்றுக்கொண்டவர்களே இந்த சிக்கல் நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 35 பேருக்கும் தமது நிதியை மீள பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன

கண்டி பல்லேகலே மைதானத்தில் குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை


கண்டி பல்லேகலே மைதானத்தில் குழப்பம் விளைவித்த

பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை



கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்திய இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தி மைதானத்தில் குழப்பம் விளைவித்த பார்வையாளர்களை கைது செய்யும் நோக்கில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,

இலங்கை கிரிக்கட் வீரர்களை இலக்கு வைத்து தண்ணீர் போத்தல்களை சில பார்வையாளர்கள் வீசி எறிந்தனர்.

வீரர்கள் மீது பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்த ரசிகர்கள் தொடர்பில் வீடியோ காட்சிகள் ஊடாக கண்டறிந்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றின் போது இலங்கை ரசிகர்கள் இவ்வாறு நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்த நிலைமை தொடர்ந்தும் நீடித்தால் அது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்.

எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க பொலிஸ் திணைக்களத்தினால் எடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

போட்டிகளின் போது அநாகரீகமாக நடந்து கொள்ள முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


எதிர்வரும் நாட்களில் நடைபெறும் போட்டிகளின் போது சீருடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்ட காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை


கிழக்கு மாகாண சபையினால் புறக்கணிக்கப்பட்ட

காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை



காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்காத நிலையில், புனர்வாழ்வு மற்றம் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ் குறித்த வைத்தியசாலையை தரமுயர்த்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய காத்தான்குடி தள வைத்தியசாலை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை, வாழைச்சேனை, தெஹியத்த கண்டி உள்ளிட்ட 6 வைத்தியசாலைகளை ‘1 தர வைத்தியசாலையாக தரமுயர்த்த கிழக்கு மாகாண சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், ‘1 தர வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்குத் தேவையான சகல தகுதிகளும் - வசதிகளும் உள்ள காத்தான்குடி தள வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், சுகாதார அமைச்சரை ராஜித சேனாரத்னவை நேரில் சந்தித்து காத்தான்குடி தள வைத்தியசாலை திட்டமிட்டு தரமுயர்த்தப்படாமை குறித்து முறையிட்டார்.
அத்துடன், காத்தான்குடி தள வைத்தியசாலையை மேலும் அபிவிருத்தி செய்து ‘1 தர வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறும் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கை சம்பந்தமாக ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தார்.
இதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் முதல்வர் அஸ்பர் ஜே.பி. ஆகியோர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை சுகாதார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் வைத்திய நிபுணர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, காத்தான்குடி தள வைத்தியசாலை தரமுயர்த்துவதற்கான காரணங்கள் - அதற்கான தேவைப்பாடுகள் என்ன என்பது குறித்து இராஜாங்க அமைச்சர் விளக்கமளித்தார்.

பின்னர், இந்த விடயம் தொடர்பான தாம் கவனம் செலுத்தி மேலதிக அறிக்கைகள் - தகவல்களைப் பெற்று காத்தான்குடி தள வைத்தியசாலையை தரமுயர்த்த சகல நடவடிக்கைகளையும் அவசரமாக மேற்கொள்வதாக இதன்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளித்தார்