Wednesday, November 29, 2017

இலங்கை - தென் கொரிய உறவின் கீர்த்திமிக்க அத்தியாயம் இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும் – தென்கொரிய ஜனாதிபதி


இலங்கை - தென் கொரிய உறவின் கீர்த்திமிக்க அத்தியாயம்

இரு நாடுகளுக்கும் பல்வேறு நன்மைகளை கொண்டு வரும்

தென்கொரிய ஜனாதிபதி

தென் கொரியாவுக்கான அரச முறைப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜெயிங் அவர்களுக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (29) முற்பகல் சியோல் நகரில் அமைந்துள்ள ஜனாதிபதியின் புலூ ஹவுஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்வுக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்த வீதியின் இரு புறத்திலும் இரு நாடுகளினதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.
இரு தலைவர்களுக்குமிடையிலான சுமூகமான கலந்துரையாடலை தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
அரச தலைவர்களின் சந்திப்பைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான கூட்டுறவை மேம்படுத்தும் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட பொருளாதார கூட்டுறவு தொடர்பான உடன்படிக்கையில் தென் கொரிய பொருளாதாரத்துறை அமைச்சரும் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் கைச்சாத்திட்டனர்.
தொழில் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான ஒப்பந்தத்தில் அமைச்சர் தலதா அத்துக்கோரலவும் அந்நாட்டின் தொழில் அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.
2017 – 2019ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஒத்துழைப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்படக்கூடிய கடன் தொடர்பான ஒப்பந்தமும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது. இதில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.
முதலீட்டு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை முதலீட்டு அபிவிருத்திச் சபை மற்றும் தென் கொரிய வர்த்தக முதலீட்டு அபிவிருத்தி நிறுவனத்திற்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது. முதலீட்டு அபிவிருத்தி சபையின் தலைவர் துமிந்த ரத்னாயக்க மற்றும் கொரிய நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் இவ் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இரு நாடுகளுக்கிடையிலான கலை, கலாசாரத்துறை, கல்வி, இளைஞர் விளையாட்டுத்துறை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் தென் கொரிய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட தொழில் அனுமதிப்பத்திர முறைமைக்கான ஒப்பந்தம் எதிர்காலத்தில் தென் கொரியாவில் தொழில் செய்யும் இலங்கையர்களுக்கு மிகவும் பெறுமதியானதாக இருக்குமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இலங்கை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொழில் அளவை அதிகரிக்குமாறு தென் கொரிய ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

மீன்பிடி, நிர்மாணப்பணி ஆகிய துறைகளில் இலங்கை ஊழியர்களுக்கு கொரியாவில் உள்ள தொழில்வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் விவசாய மற்றும் பண்ணை வளர்ப்புத்துறையிலும் அதிகரிக்கப்படும் என தென் கொரிய ஜனாதிபதி தெரிவித்தார்.














No comments:

Post a Comment