Sunday, December 31, 2017

நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி உருவாக்கம்!


நிந்தவூரில் மக்கள் காங்கிரஸின்

மகளிர் அணி உருவாக்கம்!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையிலான நாடளாவிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக, மகளிருக்கான கூட்டமும், நிந்தவூர் பிரதேச மகளிர் அணித் தலைவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும், நிந்தவூரின் மக்கள் காங்கிரஸின் மக்கள் பணிமனையான அமைச்சர் முஸ்தபா லேண்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை, மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறை பொறுப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான டாக்டர் ஏ.எல். பரீட் மற்றும் அக்கரைப்பற்று மத்தியகுழுவின் தலைவர் மற்றும் செயலாளர் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர்.
இங்கு உரையாற்றிய டாக்டர் ஏ.எல். பரீட்,
நிந்தவூரைப் பொறுத்தவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெருமளவான சேவைகளை செய்துள்ளது. உள்ளக வீதி அபிவிருத்தி, வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல சேவைகள் அவற்றில் அடங்கும். இன்னும் பல சேவைகள் தேர்தல் காலம் என்பதால் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரித்தார்.
அத்துடன், குறுகியகால அழைப்பில் நூற்றுக்கணக்கான மகளிர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

-முர்ஷிட் முஹம்மத்-


‘அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி’ அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!


அமைச்சர் ரிஷாட்டினால் முன்னெடுக்கப்படும்

வாழ்வாதார திட்டங்களை முறியடிக்க சதி

அக்கரைப்பற்றில் டாக்டர் ஹஸ்மியா!



அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதாரத் திட்டங்களை முறியடிக்க பல்வேறு வழிகளில் சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் பிரதேசங்களில்  கடந்த வியாழக்கிழமை (28) மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. அந்தவகையில், குடியிருப்பு பிரதேச சபையின் மக்கள் காங்கிரஸ் கிளைக் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனினால் இலங்கை முழுவதும் நாடாளாவிய ரீதியில் வாழ்வாதாரத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நாம் எல்லோரும் அறிந்த விடயமே. இந்த வாழ்வாதாரத் திட்டங்கள் மக்களைச் சென்றடையக் கூடாதென, அதனை முறியடிக்கும் வகையில் சில கட்சித் தலைவர்கள் சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றனர். எமது அமைச்சரினால் வழங்கப்படும் வாழ்வாதாரங்கள் இறைவனின் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றன.
எனவே, சதிகாரர்களின் சூழ்ச்சிகள் ஒருபோதுமே பழிக்காது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றுக்கு அஞ்சி மக்களுக்கான வாழ்வாதார நலத்திட்டங்களை வழங்குவதை எமது மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒருபோதும் நிறுத்தமாட்டார் என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றேன் என்றார்.
இதேவேளை, அக்கரைப்பற்று நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பங்களுக்கான பாடசாலை உபகரணங்கள், மத்திய குழு உறுப்பினர் பாசித் மற்றும் மகளிர் அணியின் இணைப்பாளர் ஷஹீட் ஹாஜியார் தலைமையில், தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர். ஹஸ்மியாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் அந்தந்த பிரதேசத்துக்குரிய மகளிர் அணித்தலைவிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் அந்தப் பிரதேச மக்கள் காங்கிரஸின் அமைப்பாளர்கள் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
அந்தவகையில், குடியிருப்பு  பிரதேசத்துக்கான மகளிர் அணித் தலைவியாக ஹம்சா பேகம் தெரிவு செய்யப்பட்டு, அமைப்பாளர் என்.டீ.நியாஸ் முன்னிலையில் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று நகரசபை பிரிவுக்கு பாத்திமா சமீரா, ஒலுவில் பிரதேசத்துக்கு ஜன்னத்துல் நஸ்மிலா ஆகியோர் மகளிர் அணித் தலைவிகளாகத் தெரிவு செய்யப்பட்டு, கல்முனைத் தொகுதி அமைப்பாளரும், அமைச்சரின் பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளருமான .ஆர்.எம். ஜிப்ரி மற்றும் அப்பிரதேச அமைப்பாளரும் வேட்பாளருமான அஸ்ஹர் ஆகியோரின் முன்னிலையில் நியமனம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டனர்.

30 சதவீதமான மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு


30 சதவீதமான மாணவர்களுக்கு

பல்கலைக்கழக வாய்ப்பு



.பொ. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த 30 சதவீதமான மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது
இது தொடர்பான விண்ணப்பங்கள் அடங்கிய கைநூல் அடுத்த வாரத்திற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது வெளியிடப்பட்ட பின்னர் ஒரு மாத காலப்பகுதியில் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் உதவி செய்யப்புறப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை


தேர்தல் காலத்தில் உதவி செய்யப்புறப்பட்டிருக்கும்

வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை



உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாக, தனிப்பட்ட அல்லது பொது நிதியில் இருந்து பணத்தையோ அல்லது பொருள் மானியத்தையோ வழங்கும் வேட்பாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களின் படி தேர்தல் பரப்புரைகளின் போது வேட்பாளர்கள் மானியங்களை வழங்குவது சட்டவிரோதமாகும். அது ஒரு இலஞ்ச வழக்காக கருதப்படும்.

தேர்தல் திணைக்களத்தின் உத்தரவுகளை அரசாங்க அதிகாரியோ அல்லது அரசாங்க நிறுவனமோ, தேர்தல் சட்டங்களை மீறினால்அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

மத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது, கல்விக்கான பொருட்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளில், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க நிதியிலான உதவிகளை பொதுமக்களுக்கு வழங்குவதை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைக்குமாறு பிரதேச செயலகங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

களஞ்சியப்படுத்தி வைப்பதற்குச் சிக்கலானகால்நடைகள், தாவரங்கள், விதைகள் மற்றும் இதுபோன்ற பொருட்களை மாத்திரமம் விநியோகிக்குமாறு பிரதேச செயலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய களஞ்சியப்படுத்தக் கூடிய பொருட்களின் விநியோகங்களை பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்குறுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அத்துடன், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளால் வாக்குகளுக்காக வழங்கப்படும் அரச நிதியிலான உதவிகளை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

இந்த உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறும் உரிமை இருக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இவை அரசாங்க நிதியில் இருந்தே வழங்கப்படுகின்றன என்பதை அவர்கள் அறிய வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியானது கூட்டு அரசு நிலைக்குமா?


புரிந்துணர்வு உடன்பாடு நேற்று

நள்ளிரவுடன் காலாவதியானது

கூட்டு அரசு நிலைக்குமா?


கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்காக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.
                                        
2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இரண்டு கட்சிகளும் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு கூட்டு அரசாங்கத்தை அமைப்பதற்கான, புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில்  கையெழுத்திட்டிருந்தன.

இந்த புரிந்துணர்வு உடன்பாடு கடந்த செப்டெம்பர் மாதத்துடன் காலாவதியாகியிருந்தது. இந்த நிலையில், இந்த உடன்பாட்டை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவு செய்யப்பட்டது.

நீடிப்புச் செய்யப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு நேற்று நள்ளிரவுடன் காலாவதியாகியுள்ளது.

எனினும், இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டை நீடிப்பதாஇல்லையா என்று இரண்டு கட்சிகளும் இன்னமும் முடிவு செய்யவில்லை.

இதுபற்றிக் கருத்து வெளியிட்ட ஐதேகவின் பிரதி பொதுச்செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதா- நீடிப்பதா என்று கட்சிக்குள் இன்னமும் கலந்துரையாடப்படவில்லை.


உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின்னர் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி இறுதி முடிவை எடுப்பார்கள்என்று தெரிவித்துள்ளார்.

30 வீதம் பிரகாசமான சுப்பர் நிலவு இன்று காண முடியும்


30 வீதம் பிரகாசமான சுப்பர் நிலவு

இன்று காண முடியும்



வழக்கத்தை விட 30 வீதம் அதிக பிரகாசமான சந்திரனை இன்று காண முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பீடத்தின் வானியல் மற்றும் விண்வெளி அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

முழுமதி நாளான இன்று, சுப்பர் நிலவு என அழைக்கப்படும் அதிக பிரகாசமான- வழக்கத்தை விட பெரியதான சந்திரனைக் காண முடியும்.

இன்று சந்திரன் வழக்கத்தை விட 14 வீதம் பெரியதாகவும், 30 வீதம் அதிக பிரகாசமானதாகவும் தென்படும். இதனால், உயரமான அலைகள் எழக்கூடும்.

அடிவானத்தில் இருக்கும் போது இன்று மாலை உதயமாகும் போது, அல்லது நாளை அதிகாலை மறையும் போது, அதிக பிரகாசமான இந்த சுப்பர் நிலவை இலங்கையில் இருந்து பார்ப்பது சிறந்தது.


சில வதந்திகள் பரவுவது போல, இந்த சுப்பர் நிலவினால், எந்த இயற்கை அனர்த்தங்களும் ஏற்பட வாய்ப்பில்லைஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்குறணை மற்றும் மடவளையில் இடம்பெற்ற கூட்டம்!



மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து

அக்குறணை மற்றும் மடவளையில் இடம்பெற்ற கூட்டம்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகின்றது. அதனடிப்படையில் கண்டி மாவட்டத்தின் அக்குறணை மற்றும் மடவளை ஆகிய பிரதேசங்களில் நேற்று (30) மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்றன.

அக்குறணை பிரதேச சபை மற்றும் பாத்ததும்பர பிரதேச சபை தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டங்களில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் செரீப், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் மற்றும் மக்கள் காங்கிரஸின் உயர்பீட உருப்பினர்கள் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.









Saturday, December 30, 2017

அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்: தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


அரசியலுக்கு வந்தார் ரஜினிகாந்த்:

தனிக்கட்சி தொடங்குவதாக அறிவிப்பு

ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அரசியலுக்கு வருவது உறுதி என்றும், தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்ர்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்ற விவாதம் உச்சகட்டத்தை அடைந்திருந்த சமயத்தில், திடீரென அரசியல் கருத்துக்களை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஒட்டுமொத்த நிர்வாகமும் சீர்கெட்டு கிடப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை, சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனால் அரசியலுக்கு வரப்போவதை சூசகமாக தெரிவித்திருந்தார்.

அவர் அரசியல் பணம் உறுதி ஆகிவிட்டதாகவே பெரும்பாலான ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார் ரஜினி. இதன்மூலம் தேர்தல் சமயத்தில் அவர் அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.

இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். 6-வது நாளான இன்று தென்சென்னை ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இந்த சந்திப்புக்காக ஏராளமான ரசிகர்கள் காலையிலேயே மண்டபத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.

ரசிகர்களுடனான சந்திப்பின் கடைசி நாளான இன்று ரஜினி தனது அரசியல் பிரவேசம்  குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். எனவே, தென்சென்னை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர். மண்டபம் முழுவதும் நிரம்பி, மண்டபத்திற்கு வெளியிலும் ரசிகர்கள் திரண்டுள்ளனர். இதனால், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் இன்று காலை ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த ரஜினிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் மண்டபத்திற்குள் சென்ற அவர் ரசிகர்களிடையே பேசியதாவது:-
ரசிகர்கள் இந்த அளவுக்கு கட்டுப்பாட்டோடு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கட்டுப்பாடும், ஒழுக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். நான் அரசியலுக்கு வருவதைப் பார்த்து பயம் இல்லை. மீடியாவைப் பார்த்து தான் பயம். நான் எதையாவது சொல்ல அது விவாதமாகிவிடுகிறது.
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாதாததால் போட்டியிடவில்லைநான் பணம், பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை. கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு ஆயிரம் மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது அரசியல் கெட்டுப்போய்விட்டது, ஜனநாயகம் சீட்கெட்டுப் போய்விட்டது. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பாபா முத்திரையைக் காட்டி தனிக்கட்சி குறித்த அறிவிப்பினை ரஜினி வெளியிட்டபோது, ரசிகர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். மண்டபத்தின் வெளியே பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர். இதேபோல் தமிழகம் முழுவதிலும் ரஜினி ரசிகர்கள், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப ரஜினி காந்த் ஒருவரால் தான் முடியும் என அவரது ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களை அமைதியான முறையில் களப்பணி ஆற்ற வேண்டும் என ரஜினி காந்த் ஆலோசனை கூறியுள்ளார்.