Wednesday, February 28, 2018

அம்பாறை சம்பவம்: குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை குற்றச்சாட்டு உண்மையல்ல அமைச்சர் ராஜித சேனாரத்ன


அம்பாறை சம்பவம்:
குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை
குற்றச்சாட்டு உண்மையல்ல
அமைச்சர் ராஜித சேனாரத்ன



அம்பாறை சம்பவம் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கியதாலேயே ஏற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது
இந்தச் சம்பவத்துடன் தொடர்புள்ள சகலரையும் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையை சிலர் வேண்டுமென்றே தூண்டி விட்டனரா என்பது குறித்தும் ஆராயப்படுவதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவத்தார்.

குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கியதாலே இந்தமோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர், சமூக வலைத்தளங்களினூடாக இனவா தத்தை தூண்டி விட சிலர் முயல்வதாகவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அம்பாறை தாக்குதல் தொடர்பாக வினவப்பட்டது.

இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அம்பாறை நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் பின்னணியில் இருப்போர் குறித்து ஆராயப்படுகிறது.

கேள்வி: குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை தான் இந்த பிரச்சினைக்கு காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறதே?

பதில்: சில மருத்துவர்கள் மீதும் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது.தமிழ் முஸ்லிம் மருத்துவராக இருந்தால் இவ்வாறு பலி சுமத்தப்படும்.ஆனால் அது பற்றி விசாரித்த போது அவை பொய் குற்றச்சாட்டு என்பது கண்டு பிடிக்கப்பட்டது. சுகாதார அமைச்சின் திட்டங்களை தான் அந்த மருத்துவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.இங்கும் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை குறித்து கூறப்படுகிறது. பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். அவ்வாறு ஏதும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டால் விசாரிக்கத் தயார்.

கேள்வி: இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

பதில்: எனக்குக் கிடைத்துள்ள தகவல் படி இது பொய் குற்றச்சாட்டாகும். சமூக வலைத்தளங்கள் தான் இவ்வாறு குற்றஞ்சாட்டுகின்றன.

கேள்வி: கடை உரிமையாளர் தான் மாத்திரை விற்றதாக ஏற்றுக் கொண்டுள்ளாரே?

பதில்: வீடியோக்களில் காட்டப்படும் நபர் தான் கடை உரிமையாளர் என எப்படி கூறி முடியும். வேறு ஒருவரின் வீடியோவை கூட அவ்வாறு வௌியிட்டு குறித்த கடை உரிமையாளர் என்று கூற முடியும். சமூக வலைத்தளங்களில் தான் இதனை வௌியிடுகின்றனர்.இனவாதத்தை தூண்ட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.கடந்த காலத்திலும் இவ்வாறு இனவாதம் தூண்டப் பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

கேள்வி: உலகில் இவ்வாறு குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறதா?

பதில்: உலகில் எங்கும் ஆண்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை வழங்கப்படுவதில்லை.பெண்களுக்கு வழங்கினால் தான் குடும்பக் கட்டுப்பாடு செய்ய முடியும். ஆண் குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரை சாப்பிட்டால் பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த முடியுமா?

உலகில் எங்கும் அவ்வாறு முடியாது.

கேள்வி: இவ்வாறான சம்பவங்கள் இடைக்கிடை நடந்து வருகின்றன.அதனை தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பதில்: 2014 ஆம் ஆண்டு வரை நடந்த இனவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது சிறிதளவே நடந்துள்ளன. 30 வருட யுத்தத்தின் பின்னர் மக்கள் மத்தியில் யுத்த மனப்பாங்கு தான் இருந்தது.இதனோடு இனவாத உணர்வுகளும் தூண்டப்பட்டன.இவை கட்டம் கட்டமாகத் தான் குறையும். கடந்த கால இனவாத செயல்களுடன் நோக்குகையில் தற்பொழுது குறைந்தளவே நடக்கிறது.இந்த நிலைமை மாறும் என்றார்.

அம்பாறை பள்ளிவாசல் உடைப்பு திட்டமிட்ட நாசகார செயல் அமைச்சர் ரிசாட் தலைமையில் கச்சேரியில் உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு


அம்பாறை பள்ளிவாசல் உடைப்பு
திட்டமிட்ட நாசகார செயல்
அமைச்சர் ரிசாட் தலைமையில்
கச்சேரியில் உயர்மட்ட பாதுகாப்பு மாநாடு

அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும்,எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

விமானப் படைக்குச் சொந்தமான விஷேட விமானம் மூலம் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் தலைமையிலான குழு தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல், கடைகள் மற்றும் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் பள்ளி தர்மகர்த்தாக்களிடமும், ஊர்ப்பிரமுகர்களிடமும் விபரங்களைக் கேட்டறிந்துகொண்டு,அங்கு வருகை தந்திருந்த பொலிஸ் உயரதிகாரிகளிடம் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

பள்ளிவாசலில் இருந்து சில மீற்றர் தொலைவுக்கு அப்பால் அமைந்திருந்த ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற சர்ச்சையை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் வேண்டுமென்றே இந்தப் பள்ளிவாசலுக்கு வந்து தாக்குதல் நடத்தியதன் காரணம் என்ன? இதன் பின்னணிதான் என்ன? என்று அமைச்சர் ரிஷாட், பொலிஸ் அதிகாரிகளிடம் வினவினார்.

இந்த நாசாகார செயலைப் புரிந்தவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்றும், புலனாய்வுத்துறை இவர்களை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களும், பள்ளிவாசல் காவலாளியும், அன்று நள்ளிரவு நடந்த சம்பவங்களையும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அமைச்சரிடம் விபரித்தனர்.

பதற்ற சூழ்நிலையில் வாழும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை பொறுமை காக்குமாறு கூறிய அமைச்சர், அவர்களை ஆசுவாசப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

இதன்போது, பிரதி அமைச்சர் அமீர் அலி,ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான எஸ்.எஸ்.பிமஜீத், நௌஷாட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் அமைச்சருடன் சென்றிருந்தனர்.அத்துடன் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான வேதாந்தி சேகு இஸ்ஸதீன், அன்சில், தாகிர், ஜவாத் ஆகியோரும் அங்கு வருகை தந்திருந்தனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்ற முதலாவது தொழுகையிலும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உயர்மட்ட மாநாடு

அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்டஅரசாங்க அதிபர் அலுவலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வனிகசிங்க தலைமையில் நேற்று மாலை (28) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார்.

பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர்அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர்ஹசன் அலி, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான நௌஷாட், அன்சில்உட்பட பலரும்கருத்துக்களை வெளியிட்டனர்.

பள்ளிவாசல் மீது இடம்பெற்ற வெறித்தனமான தாக்குதலின் பின்னர், அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். பள்ளிவாசலில் ஐவேளை தொழுவதற்குக் கூட அச்சம் ஏற்பட்டுள்ளதால்,பள்ளிவாசலுக்கு அருகே பொலிஸ் பாதுகாப்புச்சாவடி ஒன்றை அமைத்துத் தருமாறு தம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவித்தபோது, அங்கு பிரசன்னமாகி இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் டீ..ஜீ. நுவன் மெதசிங்க அதனை ஏற்றுக்கொண்டு,இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

பள்ளிவாசலில் துண்டிக்கப்பட்ட நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை இடையறாது வழங்குவதற்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அம்பாறை பிரதேசத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் இந்தப் பிரதேசத்தில் இவ்வாறான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதனை கட்டுபாட்டிற்குள் கொண்டுவராவிட்டால், நாட்டிலே வேறொரு பிரச்சினை தலைதூக்கும்.

இன்று சர்வதேச ஊடகங்களினூடாக இந்த பள்ளிவாசல் தாக்கப்பட்ட செய்திகள் சர்வதேசத்தைச்சென்றடைந்திருக்கின்றது.

சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இந்தப்பிரதேசத்தில் அந்நியோன்னியமாக நீண்டகாலமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக குறிப்பாக பொலிஸார் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்துவதற்கு தான் ஒருபோதும் தடையாக நிற்கபோவதில்லை.

அவர்கள் சட்டத்தை அமுல்படுத்துவதோடு, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படவிடாமல் தடுப்பதற்கான சமாதானக் குழுவை ஏற்படுத்தி அமைதியை நிலை நாட்டுமாறு அரசாங்க அதிபரிடம், அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இது திட்டமிடப்பட்ட ஒரு செயலா என்பது தொடர்பில் உரியமுறையில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் இது தொடர்பிலும் நாம் கலந்தாலோசித்திருக்கின்றோம்.

கடந்த 40, 50 வருட காலமாக இந்தப் பிரதேசத்திலே இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறவில்லை. தொடர்ந்து மூன்று முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளமையானது, ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

இந்த பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமையாகும் என அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தினார்.

இதேவேளை,அம்பாறை பள்ளிவாசலின் தலைவர், எதிர்காலத்தில் இந்த நகரில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ்மக்களின் இன நல்லுறவை வலுப்படுத்துவதற்கான அவசியம் குறித்து தனது கருத்துக்களையும் முன்வைத்தார்.