Sunday, April 29, 2018

குயில்களும் கூதலும் - எஸ். முத்துமீரான்


குயில்களும் கூதலும்


####################




வெள்ளாப்பில் கூவுகின்ற குயில்களெல்லாம்,
விரக்தியுடன் வாயடைத்து இருப்பதென்ன?
களிப்பூட்டி குரலெழுப்பும் குயில்களின்று,
கவலையுடன் சோர்வடைந்து கிடப்பதென்ன?
துளிர்விட்டு மலர்சொரியும் மரங்களிலே
கிளை விட்டு கிளை தாவி குதூகலிக்கும்
குயில்களெல்லாம், கிளைகளுக்குள் மறைந்திருந்து
விடியலை வெறுத்தொதுக்கி தூங்கி அழும்
வேதனையின் சோதனைக்கு, யார்பொறுப்போ?
கூதலில் உடல் சுருங்கி வாடுகின்ற,
குயில்களெல்லாம் சோகத்தால் அமைதியாக,
ஆண்டவனைத் துதித்து, நல்ல
அருள் வேண்டி துதிக்கிறதோ? கூதல் மாற
பூந்தாது இல்லாமல் குயில்களெல்லாம்
புண்ணான புழுக்களையும் பூச்சியையும்
புசித்ததினால் குரலெல்லாம் புண்ணாகிப் போய் விட்டதினால்
புவிமீது கூவாமல் போனதுவோ?
கான க் குயில்களெல்லாம் கடும் பசியால் வாடியின்று
வானத்தைப் பார்த்து வாடி வதங்குவது,
ஞாலத்தில் இறைதந்த, நல்ல படிப்பாமோ?
வாழ்க்கையில் குயில்களுக்கு, வல்லோனளித்த இந்த
வளமான குரல் வளத்தை, மீண்டுமளிக்க
கூ தலை நீக்கி, குதூகலத்தை தந்துவிடு.
- எஸ். முத்துமீரான்

No comments:

Post a Comment