Saturday, June 2, 2018

புனித இப்தார் நிகழ்வுகள் முஸ்லிம்களை வளைத்துப் போடும் முயற்சியில் ராஜபக்ஸக்கள்


புனித இப்தார் நிகழ்வுகள்
முஸ்லிம்களை வளைத்துப் போடும்
முயற்சியில் ராஜபக்ஸக்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இம்முறை நடத்திய இப்தார் நிகழ்வுக்கு, இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
ரம்ஸான் நோன்பை முன்னிட்டு மஹிந்த ராஜபக்ஸ தனது அதிகாரபூர்வ வதிவிடத்தில் கடந்தவாரம்  இப்தார் விருந்து, அளித்தார்.
இந்த விருந்துக்கு இம்முறை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த இப்தார் விருந்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஏ.எச்.எம். பௌஸி முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, பஷீர் சேகுதாவூத் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் மற்றும், இஸ்லாமிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.
எனினும், அளுத்கமவில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறையை அடுத்து, நிலைமைகளை தலைகீழாக மாறியது.
2015 ஜனாதிபதித்  தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடிப்பதில் முஸ்லிம் வாக்காளர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர்.
இந்த நிலையில், முஸ்லிம்கள் மத்தியில் இழந்த செல்வாக்கை மீள நிலைப்படுத்துவதில் மஹிந்த ராஜபக்ஸவும் அவரது சகோதரர்களும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
அடுத்த ஆட்சியமைக்கும் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அண்மையில் கோத்தாபய ராஜபக்ஸவும், பசில் ராஜபக்ஸவும் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments:

Post a Comment