Tuesday, July 31, 2018

வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து 813 மில்லியன் ரூபா அறவிட நடவடிக்கை


வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக
விரிவுரையாளர்களிடமிருந்து 813 மில்லியன் ரூபா
அறவிட நடவடிக்கை


பட்டப்பின்படிப்பு மற்றும் ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்று மீள நாடு திரும்பாத பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக உயர்கல்வி அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஸ தெரிவிக்கையில் 486 பேரினது விபரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்ததுடன் வெளிநாடு சென்றுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடமிருந்து 813 மில்லியன் ரூபாய் அறவிடவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சட்ட விதிகளுக்கு அமைவாக இந்த அறவீடு மேற்கொள்ளப்படும்; இத்தொகை எமது பல்லைக்கழகங்களுக்கு உரித்தானது. இது தொடர்பில் சில விரிவுரையாளர்கள் மற்றும் அவர்களின் சாட்சிகளாகக் கையொப்பமிட்டுள்ள சிலருக்கு எதிராக தற்போது வழக்கு தொடரப்படவுள்ளது என்றும் உயர்கல்வி அமைச்சர் விஜதாஸ ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

'எழுச்சிபெறும் பொலன்னறுவை' 6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 180 திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

'எழுச்சிபெறும் பொலன்னறுவை'
6,000 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 180 திட்டங்கள்
மக்களிடம் கையளிப்பு



பொலன்னறுவை மாவட்டத்தில் அரசர்கள் காலத்திற்கு பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அபிவிருத்தி திட்டமான 'எழுச்சிபெறும் பொலன்னறுவை' திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள 180 அபிவிருத்திதிட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
பொலன்னறுவையில் இன்று முதல் நாளை மறுதினம் வரை இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிபுணர்கள், கலைஞர்கள் பங்குபற்றுதலுடன், இத்திட்டங்களை மக்களிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இந்நாட்டின் 6வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'எழுச்சிபெறும் பொலன்னறுவை' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை 6000 கோடி ரூபாவாகும். இது பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக சிங்கள அரசர்களுக்கு பின்னர் ஒதுக்கப்பட்டுள்ள பாரிய தொகையாகும். இதன் மூலம் மாவட்டம் எங்கிலும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மூன்று நாட்களில் மட்டும் மேலும் 180 திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு தயாராகவுள்ள இளம் தலைமுறையினருக்கே அதிக நன்மை கிடைக்கவுள்ளது. அந்த வகையில் பொலன்னறுவை மாவட்டத்தில் இளம் தலைமுறைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீட்டின் மற்றுமொரு கட்டமாகவே இது நிறைவேற்றப்பட்டுள்ளதுடன், 85 பாடசாலைகளின் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டு வகுப்பறை கட்டடங்கள், வள நிலையங்கள், தொழில்நுட்பக் கூடங்கள், அதிபர் மற்றும் ஆசிரியர் உத்தியோகபூர்வ இல்லங்கள் ஆகிய பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பாடசாலைக் கல்விக்கான 110 திட்டங்களுக்கு 665 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக மாவட்டம் எங்கிலும் மேலைத்தேய மற்றும் ஆயூர்வேத வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்களின் அபிவிருத்தியில் மற்றுமொரு கட்டமாக பல்வேறு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 890 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 15 திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

ஹிங்குராக்கொட மாவட்ட வைத்தியசாலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள சிறுநீரக நோய் சிகிச்சை நிலையக் கட்டடம், பல் மருத்துவ பிரிவு, பகமுன வைத்தியசாலையின் நிர்வாக கட்டடம் , சிறுநீரக நோய் சிகிச்சைப் பிரிவு கட்டடம், மன்னம்பிட்டி வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவு, மன்னம்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலையில் புதிய வாட்டுத்தொகுதி மற்றும் அரலகங்வில வைத்தியசாலையில் புதிய ஆய்வுகூடம், மாவட்டம் எங்கிலும் பல்வேறு வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகளுக்கான அலுவலகங்கள் மற்றும் ஏனைய தேவைகள் இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

உனகலாவெஹர, புதூர் உள்ளிட்ட மூன்று பிரதேசங்களில் மூன்று குடிநீர் வழங்கள் திட்டங்கள் ஹிங்குராக்கொட, தமன்கடுவ ஆகிய பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறுவோருக்காக நிர்மாணிக்கப்பட்ட 15 வீட்டுத்திட்டம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத்திட்டமும் இதன் கீழ் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள மக்களை மையப்படுத்தியும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வரும் மக்களின் வசதிக்காகவும் மாவட்டத்தின் பொது வசதிகளை மேம்படுத்துவதன் கீழ் 9 திட்டங்களின் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மெதிரிகிரிய நகரின் புதிய பஸ் தரிப்பிடம் ஹிங்குராக்கொட இரண்டு மாடி வர்த்தக கட்டிடத் தொகுதி, லங்காபுரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 800 பேர் அமரக்கூடிய கலை மண்டபம் ஆகியன இதில் உள்ளடங்கும். மேலும் பொலன்னறுவை புதிய மாநகர சபை கட்டிடம், லக்ஷ உயன பிரஜா மண்டபம், மன்னம்பிட்டிய ஹெலபொஜூன் தேசிய உணவகம் போன்ற திட்டங்களுக்காக 343 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பௌத்த, இந்து மற்றும் இஸ்லாம் சமயத் தளங்களின் அபிவிருத்திக்காக நிறைவு செய்யப்பட்டுள்ள 15 திட்டங்களுக்கு 55 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதன் கீழ் மாவட்டத்தின் பல்வேறு விகாரைகளில் புதிய பிக்குகளுக்கான தங்குமிட வசதிகள், சமய உரை மண்டபங்கள், அன்னதான மண்டபங்கள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்து, இஸ்லாம், சமய ஸ்தாபனங்களின் புனரமைப்பு பணிகளும் புதிய கட்டிட நிர்மாணப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நகரம், சிறு மற்றும் பெரு போகங்களில் தொடர்ச்சியாக பயிர் செய்யக்கூடிய வகையில் நீரை வழங்கக்கூடிய நீர்ப்பாசன புனரமைப்பு பணிகள், தேசத்தின் கீர்த்திமிக்க வரலாற்றை எடுத்துக்காட்டும் பாரிய தொல்பொருள் நிலையம், இசை, நடனம் உள்ளிட்ட கலைகளுக்கான கலை கூடங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மத்தலவில் தரையிறங்கிய உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானம்


மத்தலவில் தரையிறங்கிய
உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானம்

உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான, அன்ரனோவ் ஏஎன்-124 ருஸ்லான், மத்தல விமான நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் தரையிறங்கியது.
எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவுமே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியிலேயே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது. இன்று அதிகாலை 1.40 மணியளவில், மஸ்கட் நோக்கி புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்டிருந்தது.
உலகின் மிகப் பெரிய விமானங்களில் ஒன்றான ஏஎன்-124  கனரக மற்றும் பருமமான சுமைகளை ஏற்றுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை விமானம் இலங்கையில் தரையிறங்குவது இதுவே முதல்முறையாகும்.
ஏற்கனவே உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான ஏஎன்-225 கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி மத்தல விமான நிலையத்தில் தரித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
இது தொடர்பான செய்திகள் இருட்டடிப்பு




இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீப் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, பிராந்திய மற்றும் அனைத்துலக விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக, ஈரானிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சந்திப்பின்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் பழைமை வாய்ந்த உறவுகள் குறித்து குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த மே மாதம் ஈரானுக்குத் தான் மேற்கொண்ட பயணம் ஆக்கபூர்வமான ஒன்றாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல்வேறு துறைகளில்-  குறிப்பாக, சக்தி உள்ளிட்ட துறைகளில்  தெஹ்ரான்- கொழும்பு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அனைத்துலக அமைப்புகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவாக்குவதில் எந்த தடையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அதேவேளை, இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விருப்பம் வெளியிட்ட ஈரானிய வெளிவிவகார அமைச்சர், சக்தி, விவசாயம், தொழில்நுட்பபொறியியல் சேவைகள் போன்ற துறைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இணங்கியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜெயசூரியவையும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் இலங்கை பயணம் தொடர்பாக, அந்த நாட்டு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டுள்ள போதிலும், ஈரானிய வெளிவிவகார அமைச்சரின் பயணம் மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்புகள் தொடர்பான செய்திகளை அரசாங்கம் இருட்டடிப்பு செய்துள்ளது.
இந்தச் சந்திப்பு தொடர்பாக இன்று காலை வரை ஜனாதிபதி செயலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


வியட்நாமில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த கலை நயமிக்க தங்க பாலம்


வியட்நாமில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த
கலை நயமிக்க தங்க பாலம்

வியட்நாமில் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. வியட்நாமின் பா நா மலைப்பகுதியில் இயற்கை எழிலை சூற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் இப்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவ் வாங் என பெயரிடப்பட்டுள்ள இப்பாலம் கடந்த ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
சுமார் 150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் கடல் மட்டத்தில் இருந்து 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கற்களால் செதுக்கப்பட்ட இரண்டு கைகளில் பாலம் தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கலைநயமிக்க பாலத்தை கட்டிய கட்டிடக்கலை நிபுணர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்பாலம் திறக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இயற்கையை ரசிக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தை கட்டிமுடிக்க சுமார் 2 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. பாலம் முழுவதும் தங்க நிற பெயிண்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இதனை தங்க பாலம் என்று அழைக்கின்றனர். இப்பாலத்தின் வழிநெடுகிலும் வண்ண மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.







புல்டோசர் ஏற்றி நசுக்கப்பட்ட 60 சொகுசு வாகனங்கள் ரசித்து வேடிக்கை பார்த்த ஜனாதிபதி

புல்டோசர் ஏற்றி நசுக்கப்பட்ட 60 சொகுசு வாகனங்கள்
ரசித்து வேடிக்கை பார்த்த ஜனாதிபதி
   
சுமார் 40 கோடி ரூபாய் மதிப்புடைய 60 சொகுசு கார் மற்றும் பைக்குகள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக கூறி, புல்டோசர் மூலம் அவற்றை நொறுக்கும் பணியை பிலிப்பைன்ஸ் அரசு மேற்கொண்டது.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக உள்ள ரோட்ரிகோ டுடெர்டே பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். போதை கடத்தலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட, ஐநா சபை கண்டனம் தெரிவித்தற்கு. .நா சபை தலைவரின் மண்டையை உடைக்க வேண்டும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. கேகேயான் மாகாணத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த வாகனங்கள் மொத்தமாக அழிக்கப்பட்டன.
லம்போர்கினி, போர்ஸ்ச், மெர்ர்சீடெஸ் பென்ஸ், ஹார்லே டேவிட்சன் ஆகிய பிரசித்தி பெற்ற கம்பெனிகளின் வாகனங்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டது. பொதுவெளியில் வரிசையாக நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது புல்டோசர் ஏறி நசுக்கியது.
இந்த காட்சியை ஜனாதிபதி டுடெர்டே ஹாயாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.







அசாம் குடிமக்கள் பட்டியலில் காணாமல் போன முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பம்


அசாம் குடிமக்கள் பட்டியலில் காணாமல் போன
முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பம்
   
சமீபத்தில் வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பட்டியலில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் குடும்பத்தினர் பெயர்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் வங்காளதேசத்தில் இருந்து பலர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்தது. இதற்காக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நேற்று தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த வரைவு பட்டியலில் சுமார் 40 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது. மேலும், இன்று கூடிய மாநிலங்களவையிலும் இவ்விவகாரம் தொடர்பாக அமளி ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பலரது பெயர்கள் பட்டியலில் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
1974 முதல் 1977 வரை இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த பக்ருதீன் அலி அகமதுவின் சகோதர் எக்ராமுதீன் அலி அகமதுவின் மகன் ஸியாவுதீன் தனது பெயர் பட்டியலில் இல்லை என புகார் தெரிவித்துள்ளார்.
1971-ம் ஆண்டுக்கு முன் அசாமுக்குள் வந்தவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என்பதற்கான ஆவணத்தை சமர்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்கள் வெளிநாட்டவராக கருதப்படுவார்கள் என்பதன் அடிப்படையிலே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினரின் பெயரே பட்டியலில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணியின் போதே, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் சிலர் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதற்காக சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட விவகாரத்தை குறிப்பிட்டு டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி, “முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் பெயரே பட்டியலில் இல்லாமல் போயுள்ளது. இதற்கு மேல் என்ன கூற இருக்கிறது?.
பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதை நினைத்து பார்த்தீர்களா?. இந்தியா - பாகிஸ்தான் - வங்காளதேசம் எல்லாமே ஒன்றாக இருந்தது தான் என்பதை மறந்து விடாதீர்கள். 1971-க்கு முன்னர் வங்காளதேசத்தில் இருந்து வந்து குடியேறிய அனைவரும் இந்தியர்கள்தான்என அவர் கூறியுள்ளார்.