Monday, July 30, 2018

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு மட்டக்களப்பு தேசிய காகித ஆலை, மட்டக்களப்பு அரிசி ஆலை என்பன மீண்டும் இயக்கப்படவுள்ளன


வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த
சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் முடிவு
மட்டக்களப்பு தேசிய காகித ஆலை,
 மட்டக்களப்பு அரிசி ஆலை என்பன
மீண்டும் இயக்கப்படவுள்ளன

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்த சிறப்புச் செயலணிக் கூட்டத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும், அம்பாறை சீனித் தொழிற்சாலை,  மட்டக்களப்பு தேசிய காகித ஆலை,  மட்டக்களப்பு அரிசி ஆலை என்பன மீண்டும் இயக்கப்படவுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, 20இற்கு மேற்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
.வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் துரிதமாகவும் நடைமுறைப்படுத்தவும் புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பாக கண்டறியவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் முதற் தடவையாக ஒன்றுகூடியது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள வாழ்வாதார மற்றும், உட்கட்டமைப்புத் திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு சரியாகத் தெரியப்படுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி இந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.
போரினால் வடக்கு, கிழக்கில் அபிவிருத்தியில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனைத் தற்போது துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தில், 25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் நடவடிக்கைகளை ஓகஸ்ட் மாதமே ஆரம்பிப்பது,  ஏனைய 10 ஆயிரம் வீடுகளை கட்டும் பணிகளை 2019 ஜனவரியில் ஆரம்பிப்பது என்றும்  இதன் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மாகாணங்களிலும், 1847 கி.மீ நீளமான வீதி வலையமைப்புகளை விரைவில் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்.
அத்துடன், விவசாய, பொருளாதார , கல்வி, சுகாதார துறைகளில் சிறப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாகாணங்களிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு, 20இற்கு மேற்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ் அம்பாறை சீனித் தொழிற்சாலை,  மட்டக்களப்பு தேசிய காகித ஆலை,  மட்டக்களப்பு அரிசி ஆலை என்பன மீண்டும் இயக்கப்படவுள்ளன.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட இந்தச் செயலணியில் பிரதமர், அமைச்சர்கள், அரச அதிகாரிகள், படை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ராஜித்த சேனாரத்ன, சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, கபீர் ஹாசிம், டி.எம்.சுவாமிநாதன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.




No comments:

Post a Comment