Wednesday, November 28, 2018

நாடாளுமன்றில் வைத்து ரஞ்சன் வெளியிட்ட காணொளி! ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலை


நாடாளுமன்றில் வைத்து ரஞ்சன் வெளியிட்ட காணொளி!
ஆளும் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நிலை


நாடாளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ள நிலையில் .தே.கட்சியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆளும் கட்சியின் உறுப்பினரான விஜயதாச ராஜபக்ஸ உரையாற்றியிருந்தார். ஆனால் அவரைச் சுற்றி எந்த ஒரு ஆளும் கட்சி உறுப்பினர்களையும் காணவில்லை.

ஆளும் கட்சி தரப்பில் அனைத்து ஆசனங்களும் வெறுமையாக காணப்படும் நிலையில், விஜயதாச மட்டும் இருந்து உரையாற்றியுள்ளார்.

இது தொடர்பான காணொளியை ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தகத்தின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான விஜயதாச ராஜபக்ச அண்மையில் மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார். இதன்படி, உயர் கல்வி அமைச்சராக மஹிந்த அரசாங்கத்தில் பதவி வகித்து வரும் நிலையில், இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றினார்.
நாடாளுமன்ற விடயங்களை நீதிமன்றில் தீர்மானிக்க ஒப்படைப்பதானது நாடாளுமன்றை மலினப்படுத்துவதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரத்திற்கும் நாடாளுமன்றிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலையை தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கும், சபாநாயகருக்கும் பாரிய பொறுப்பு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தர்ப்பவாத அரசியலை கைவிட்டு நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு முன்வர வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரை ஒருவர் இழிவுபடுத்திக் கொள்ளும் அரசியலில் எவ்வித நலனும் கிடைக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



No comments:

Post a Comment