Monday, January 28, 2019

முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் இன்று காலை காலமானார்


முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
ஜோர்ஜ் பெர்னான்டஸ் இன்று காலை காலமானார்


இந்தியாவின் முன்னாள்   பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்   தனது 88வது வயதில் இன்று காலை புதுடில்லியில் காலமானார்.

சமீப காலமாக  அல்சைமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஜோர்ஸ் பெர்னான்டசுக்கு, சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டிருந்தது.

இன்று காலை 6 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து புதுடெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமானார்.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஜான் ஜோசப் பெர்னாண்டஸ் -ஆலிஸ் மார்த்தாவின் மகனாக 1930 ஜூன் 3-ம் தேதி ஜார்ஜ் பெர்னாண்டஸ் பிறந்தார். பெற்றோரின் விருப்பப்படி கிறிஸ்தவ வேதக் கல்வி பயின்று மதகுருவாகப் பணியாற்றினார். புரட்சிகர எண்ணம் கொண்ட அவரால் அந்தப் பணியில் நீடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சங்கம் அமைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதன் காரணமாக சோஷலிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரானார். சம்யுக்த சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உயர்ந்தார்.

மூத்த தொழிற்சங்கத் தலைவரான ஜோர்ஜ் பெர்னான்டஸ், ஊடகவியலாளராக, விவசாயியாக, அரசியல்வாதியாக பன்முக ஆளுமை கொண்டவர்.

முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி.சிங் உருவாக்கிய  ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான இவர்,பின்னர் சமதா கட்சியை நிறுவினார்.

கர்நாடக மாநிலத்தில் பிறந்த  இவர், மகாஷ்டிரா, பிகார் மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு ஐந்து தடவைகள் உறுப்பினராகத் தெரிவானவர்.

வி.பி. சிங் அமைச்சராவையில் மத்திய தொடருந்து துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர், அடல் பிகாரி வாஜ்பாயி அரசாங்கத்தில், பாதுகாப்பு அமைச்சராக இரண்டு தடவைகள் பதவி வகித்திருந்தார்.
வாஜ்பாய் அரசில் பாகிஸ்தானுடன் கார்கில் போர் நடந்தபோது அதை முன்னின்று நடத்தி வெற்றிப் பெற்றுக்கொடுத்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். மேலும் அணு விஞ்ஞானியும், குடியரசு முன்னாள் தலைவருமான அப்துல்கலாம் துணையுடன், பொக்ரானில் அணுகுண்டு சோதனையையும் பெர்னாண்டஸ் நிகழ்த்திக் காட்டினார்.

அதன்பின் 2004-ம் ஆண்டு உயிரிழந்த ராணுவ வீரர்களுக்குச் சவப்பெட்டி வாங்கி ஊழல் குற்றச்சாட்டு பெர்னாண்டஸ் மீது சுமத்தப்பட்டது. இதில் 2 முறை விசாரணையை எதிர்கொண்டு அரசியலில் இருந்து விலகத் தொடங்கினார். வாஜ்பாய் அரசு சென்ற பின் மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த 2009 முதல் ஜூலை 2010-ம் ஆண்டுவரை இருந்தார். அதன்பின் வயது மூப்பு, உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார் பெர்னாண்டஸ்.


No comments:

Post a Comment