Tuesday, February 26, 2019

அத்துமீறிய இந்தியா: தாக்குதல் பகுதிகளுக்கு சர்வதேச ஊடகங்களை அழைத்துச் செல்வோம் பாக். வெளியுறவு அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு


அத்துமீறிய இந்தியா:
தாக்குதல் பகுதிகளுக்கு சர்வதேச ஊடகங்களை
அழைத்துச் செல்வோம்
பாக். வெளியுறவு அமைச்சர் உறுதிபடத் தெரிவிப்பு



தாக்குதல் நடந்த இடங்களுக்கு சர்வதேச ஊடகங்களை அழைத்துச் செல்ல உள்ளோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மெமூத் குரேஷி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய மிராஜ் வகைப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  இன்று (செவ்வாய்க்கிழமை)  தாக்குதல் நடத்தி அவற்றை முற்றிலுமாக அழித்தது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டு அரசுகளும் அவசர ஆலோசனையில் ஈடுபட்டன. இதில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் சிரேஸ்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மெமூத் குரேஷி,

''பாலாகோட் பகுதியில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதல் நடந்த இடங்களுக்கு சர்வதேச ஊடகங்களை அழைத்துச் செல்ல உள்ளோம். இதற்காக ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன. இப்போது வானிலை மோசமாக உள்ளதால், விமானங்களால் பறக்க முடியாது. வானிலை சரியானவுடன் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த இந்தியா காணும் கனவு பலிக்காது. இந்தியாவின் பதிலடி நாங்கள் எதிர்பார்த்ததுதான். மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா இதேபோலத்தான் நடந்துகொண்டது'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிஃப் கபூர், "இந்திய விமானப்படை எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அத்துமீறி பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. ஆனால், பாகிஸ்தான் விமானப் படை உடனடியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், இந்திய விமானங்கள் திரும்பிச் சென்றன’’ என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment