Saturday, March 2, 2019

அழுத்தத்தால் அல்ல; அமைதி வேண்டியே அபிநந்தனை விடுதலை செய்தோம்: பாகிஸ்தான் தரப்பில் தெரிவிப்பு


அழுத்தத்தால் அல்ல; அமைதி வேண்டியே
அபிநந்தனை விடுதலை செய்தோம்:
பாகிஸ்தான் தரப்பில் தெரிவிப்பு



இந்திய விமானி அபிநந்தனை அழுத்தத்தால் அல்ல, அமைதி வேண்டி விடுதலை செய்தோம் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விடுதலை செய்யப்பட்டார். சர்வதேச நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் அழுத்தத்தால்தான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்ததாகக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது குரேஷி பிபிசிக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: ''அபிநந்தனை நாங்கள் விடுவித்ததற்கு யாருடைய அழுத்தமும் காரணமில்லை. எந்த நாடும் எங்களைக் கட்டுப்படுத்தவில்லை.

உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், இந்தியாவின் துன்பத்தை அதிகப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. இந்தியக் குடிமக்களை துயரத்தில் ஆழ்த்த நாங்கள் ஆசைப்படவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும். அரசியல் காரணமாக பிராந்தியத்தின் அமைதி ஆபத்துக்கு உள்ளாவதை பாகிஸ்தான் விரும்பவில்லை. அதனால்தான் அபிநந்தனை விடுதலை செய்தோம்.

ஜெய்ஷ் - - முகமதுக்கு எதிராக ஆதாரங்கள் பகிரப்பட்டால், நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளோம். நாட்டின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் தேச விரோத சக்திகளை என்றுமே பாகிஸ்தான் அனுமதிக்காது'' என்று தெரிவித்துள்ளார் குரேஷி.


No comments:

Post a Comment