Tuesday, April 30, 2019

வவுணத்தீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு


வவுணத்தீவு பொலிஸார் கொலை தொடர்பில் கைதான
முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்
அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு




வவுணத்தீவு இரு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி அஜந்தனை விடுதலை செய்வதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை இந்த விடயத்திற்கான உத்தரவை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோகணேசன் தனது முகப்புத்தகப் பக்க பதிவில் மேலும்,

கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க, ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.

தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையில், பொலிசாரை கொலை செய்தது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் மொஹமட் சஹ்ரான் குழுவினர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயத்தில் அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம், ஜனாதிபதி சற்று முன் (8AM May 1st) உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளது.


முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீள்பரிசீலனை! முஸ்லிம் மத விவகார திணைக்களம் தீர்மானம்


முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீள்பரிசீலனை!
முஸ்லிம் மத விவகார திணைக்களம் தீர்மானம்



இலங்கையில் முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் சுமார் 2,000 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் முஸ்லிம் மத விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் குறித்து மீள்பரிசீலனை செய்வதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பள்ளிவாசல்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கும் போது நன்கு ஆராய்ந்து அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் மில்லது இப்ராஹீம் பி செய்லானி அமைப்பு ஆகியவற்றின் செயற்பாடுகளை பள்ளிவாசல்களில் தடை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை குண்டுதாரிகளுக்கு வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ய உதவிய மூவர் கைது


தற்கொலை குண்டுதாரிகளுக்கு
வெள்ளை நிற ஆடைகளை
கொள்வனவு செய்ய உதவிய மூவர் கைது

தற்கொலை குண்டுதாரிகளுக்கு கல்முனையில் கடையொன்றில் வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்ய உதவிய மூவர் மட்டக்களப்பில் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, குறித்த சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஆடை வாங்க செல்வதற்காக பயன்படுத்திய வானும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
கல்லடி பிரதேசத்தில் வைத்து இது கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி 4ஆம் பிரிவு 3ஆம் பழைய வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய அப்துல் ஹமீட் மொஹோமட் றிபாஸ் என்பவரையும் (வானை செலுத்தி சென்ற வான் சாரதி) மேலும், இவ்வாறு வானை வாடகைக்கு கொடுத்த கல்லடி மற்றும் கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இந்த வானில் தற்கொலை குண்டுதாரிகளான 3 பேரையும் குழந்தைகளையும் ஏற்றிச் சென்று கல்முனை பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் வெள்ளை நிற ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

வான் சாரதியான றிபாசிடம் தற்கொலை குண்டுதாரிகள் வான் ஒன்றை வாடகைக்கு எடுத்து வரும்படி தெரிவித்ததனையடுத்து, றிபாஸ் மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த யூட் என்ற வான் சாரதியிடம் வான் ஒன்று வாடகைக்கு தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து யூட் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த எம்.தனுஷன் என்பவரிடம் வான் ஒன்று தேவை என குறிப்பிட்டுள்ளார். தனுஷன், சோபனா என்பவரின் வானை வாடகைக்கு எடுத்து யூட்டிடம் வழங்கியுள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டு


புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்த
தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள்
அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டு



இலங்கையில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் 26 உறுப்பினர்களுக்கு இலங்கை புலனாய்வுப் பிரிவு ஊதியம் வழங்கி வந்துள்ளது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில்,

தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதன் தாக்குதல் திட்டங்கள் தொடர்பாக முன்னதாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை பாதுகாப்பு பிரிவுகள் புறக்கணித்திருந்தன.

மட்டக்களப்பு- வவுணதீவு சோதனைச் சாவடியில் 2018 நொவம்பர் 30ஆம் திகதி  இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட தாக்குதலை குறைந்தது 4 இராணுவ அதிகாரிகள் வழிநடத்தியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சாய்ந்தமருதில் தற்கொலை செய்துகொண்ட பயங்கரவாதிகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி,  வவுணதீவுத் தாக்குதலின் பின்னர் எடுத்துச் செல்லப்பட்டதாகும்.

தற்போது தடை செய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் குறைந்தது 26 உறுப்பினர்கள் புலனாய்வுப் பிரிவின் ஊதியப் பட்டியலில் இருந்துள்ளனர். இவர்கள் கோத்தாபய ராஜபக்சவுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள அப்துல் ராசிக் என்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர் புலனாய்வுப் பிரிவிடம் ஊதியம் பெறுபவர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தார் என்று இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான ஆமி மொஹிதீன் எனப்படும், பத்ருதீன் மொகமட் மொகிதீனை பொலிஸார் தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
குண்டுகளைத் தயாரிப்பதற்கு இந்த இராணுவச் சிப்பாய் உதவியதாக தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


சவூதி நாட்டவர்களை இலங்கையை விட்டு வெளியேறுமாறு கோருகிறது அந்நாட்டுஅரசு


சவூதி நாட்டவர்களை இலங்கையை  விட்டு 
வெளியேறுமாறு
கோருகிறது அந்நாட்டுஅரசு



இலங்கையில் உள்ள சவூதி நாட்டவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு, சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தை மேற்கோள்காட்டி, அந்த நாட்டின் அரச தொலைக்காட்சியான அல் எக்பாரியா இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபிய நாட்டவர்களை இலங்கையில் இருந்து வெளியேறுமாறு தூதரகம் கேட்டுக் கொள்வதாக, சவூதி அரேபிய தூதரகத்தின் டிவீட்டர் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் மற்றும் அதையடுத்து, நடத்தப்படும் தேடுதல்கள், விசாரணைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டே சவூதி அரேபிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை கொழும்பில் அமைக்க கோத்தாபய ராஜபக்ஸ உதவியிருந்தார் துஷார இந்துனில் எம்.பி குற்றம்சாட்டு


தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தை கொழும்பில் அமைக்க
கோத்தாபய ராஜபக்ஸ உதவியிருந்தார்
துஷார இந்துனில் எம்.பி  குற்றம்சாட்டு



அடிப்படைவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ உதவியிருந்தார் என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குழுவையும் இதன் அடிப்படைவாத செயற்பாடுகளையும் கோத்தா 2014இலேயே அறிந்திருந்தார்.

அடிப்படைவாதக் கோட்பாடுகளைக் கொண்டவர்களுக்கான பல்கலைக் கழகம் ஒன்றை காத்தான்குடியில் அமைப்பதற்கான திட்டத்தை முன்னைய ஆட்சிக்காலத்தில் ஹிஸ்புல்லா முன்மொழிந்திருந்தார்.

இதற்கு இளைஞர். விவகார அமைச்சராக இருந்த டலஸ் அழகபெரும  2013 ஜூன் 11ஆம் திகதி கையெழுத்திட்டு பரிந்துரைத்திருந்தார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தாபய ராஜபக்ஸ, தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைமையகத்தை கொழும்பில் அமைப்பதற்கு காணி ஒன்றை அந்த அமைப்பை வலுப்படுத்த உதவினார்.

அடிப்படைவாத அமைப்புகள் வலுப்பெறுவது குறித்து முன்னைய அரசாங்கத்துக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எச்சரிக்கை செய்திருந்தது, ஆனாலும், அது கண்டுகொள்ளப்படவில்லைஎன்றும் அவர் கூறியுள்ளார்.


தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!


தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற
வாகன விபத்தில் இருவர் பலி!

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த டிமோ பட்டா லொறியும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் தம்பலகாமம் 174 கட்டைப் பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் கொழும்பு - சீதுவ பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 மட்டும் 26 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது டிமோ பட்டாவில் பயணித்த சாரதியும், அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளதாகவும், பின்னால் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டிப்பர் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், கந்தளாய் - கன்தலாவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவர்களின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







ஹிரு டீவியின் ‘சலகுன’ நிகழ்ச்சி அமைச்சர் ரிசாத் பதியுதீனின் துணிச்சலான பதிலும் விவாதமும்.


ஹிரு டீவியின்சலகுனநிகழ்ச்சி
அமைச்சர் ரிசாத் பதியுதீனின்
துணிச்சலான பதிலும் விவாதமும்.




அமைச்சரே,
இப்படியான ஒரு சூழ்நிலையில் இப்படியான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வெட்கப்படுகிறீர்களா?”
என்ற கேள்வியோடு ஆரம்பமாகிறது நேற்றைய ஹிரு டீவியின்சலகுனநிகழ்ச்சி.

நான் ஏன் வெட்கப்பட வேண்டும். ஆனால் என் சமூகம் சார்பாக நான் வேதனைப்படுகிறேன்என்று பதிலளித்து துவங்குகிறார் அமைச்சர் Rishad Bathiudeen.

மேற்கத்தைய தீவிரவாத கொள்கைகளுக்குள் தம் மண்டைகளை தொலைத்த ஒரு மூடர் கும்பல் செய்த நாசகார பணிக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் படர்ந்திருக்கும் கறையை,

ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமையாக ரிஷாட் பதியுதீன் பெரும்பான்மை ஊடக பரப்பில், மூன்று ஊடகவியலாளர்களின் மூச்சுவிடாத கேள்விகளுக்கும் தன்னந்தனிமையில் நின்று களமாடி தெளிவான பதிலை வழங்கி சமூகம் மீதான கறையையும், தன் மீதான கண்மூடித்தனமான விமர்சனங்களையும் போக்க
பாடுபட்டதை அவரின் அரசியல் ரீதியான சரி பிழைகளுக்கப்பால் கட்டாயம் போற்றத்தான் வேண்டும்.

யாரோ ஒரு கும்பல் செய்த வேலைக்காக இந்த நாட்டில் வாழும் 22இலட்சம் முஸ்லிம்களையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தக்கூடாது. எங்கள் சமூகத்திலிருந்தே இப்படியான ஒரு வெடிகார கூட்டம் மேலெழுந்ததை எண்ணி நிலைகுலைந்து, தலைகுனிந்து
நிற்கிறோம் என்ற பொருள்பட அமைச்சர்
பேசினார்.

2016.11.18 அன்று விஜயதாச ராஜபக் பாராளுமன்றில் இஸ்லாமிய ஜமாஆத் பிரிவுகளையும், சில மத்ரஸாக்களையும் முன்வைத்து இஸ்லாமிய அடிப்படை வாதம் குறித்து பேசிய பேச்சை ஒளிபரப்பு செய்து ஏன் நீங்கள் அப்போதெல்லாம் அவற்றை தடுத்திருக்கவில்லை என்று முஸ்லிம்களை சுட்டி அமைச்சரிடம் அந்த கேள்வியை கேட்ட போது,

பௌத்த மதத்தில் இருக்கின்ற ஒவ்வொரு நிக்காய பீடங்களை போன்றுதான் எங்கள் சமூகத்திலும் ஒவ்வொரு ஜமாஆத் பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் அடிப்படை வாதங்களை போதிக்கவில்லை.

ஸஹ்ரான் என்ற யாரோ ஒருவர் செய்த நாசகார வேலைக்காக ஜமாஅத் வாரியாக முழு முஸ்லிம்களையும் முடிச்சுப்போட முயலக்கூடாது என்றவாறு பேசினார்.

முழுமையாக நிகழ்ச்சியை பார்க்கின்ற போது, 3 ஊடகவியலாளர்களும் ஏலவே ஒன்றை தீர்மானித்துவிட்டு அதை அமைச்சரின் வாயால் வெளியே எடுப்பதற்கு முயல்வதை போலவே தென்பட்டது.

வில்பத்து குறித்த கேள்விகளுக்குள் நகர்ந்த நிகழ்ச்சி பின்னர் அமைச்சரின் சொந்த கட்டுமான கம்பனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்ந்த கேள்விகளுக்கு நகர்ந்த போது அமைச்சர் ஆவேசமாக பதிலளிக்க துவங்கினார்.

சமகால விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக என்னை அழைத்துவிட்டு எனது குடும்பம் சார்பாகவும் எனது தனிப்பட்ட விடயங்களையும் ஏன் அலச விழைகிறீர்கள்?!

ஒரு பொறுப்புள்ள ஊடகமாக அனைத்து சமயங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளை செய்ய வேண்டிய நீங்கள்தானா இங்கு என்னை அழைத்து வைத்துக்கொண்டு நானும் என் சார்பு சமூகமும் அடிப்படை வாதத்திற்கு துணைபோகிறோம் என்று வாதிட வருகிறீர்கள்?!

நடைபெற்று முடிந்த சாய்ந்தமருது சம்பவத்தின் போது சூத்திரதாரிகளை பிடிப்பதற்கு பாதுகாப்பு தரப்புக்கு தகவல் வழங்கி, ஒத்தாசை புரிந்தவர்கள் அந்தப் பிரதேச பள்ளிவாசல் நிர்வாகமும், முஸ்லிம்களும் தான்,

என்ற செய்தியை கூட உங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாமல் முஸ்லிம்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கிறார்கள் என்று இன்று விவாதிக்க வருகிறீர்கள்.

இயலுமென்றால் அப்படி நல்லிணக்கத்தை நேசிக்கும் படியாக நீங்கள் ஒளிபரப்பிய செய்தியொன்றை காட்டுங்கள்.

உங்கள் தொலைக்காட்சி முற்றுமுழுதான இனவாத ஊடகம்.
இனவாதத்தை வளர்க்கும்
ஊடகம்.
யாருக்காகவோ கொந்தராத்து ஊடக பணி செய்கிறீர்கள்.

எனது குப்பைகளை அலசுவதுதான் உங்கள் பணியாயிருக்கிறது. அதைவிடுத்துவிட்டு பொறுப்புள்ள ஊடகமாய் இனி பணி செய்யப்பாருங்கள் என்றார்.’

அமைச்சரை ஒரு தீவிரவாதியாக சுட்டிக்காட்டும் பாணியிலாக மிரட்டலாக, திக்குமுக்காட செய்யும் வகையிலாக தொடுக்கப்பட்ட அத்தனை கேள்விகளையும் தைரியமாக எதிர்கொண்டு அமைச்சர் பதிலளித்தார்.

சிங்கள மொழி தனக்கு சரளமாக தெரியாத போதும்
கூட ஒரு பொறுப்புமிக்க அரசியலாளராக சமூகத்தின் மீது துரதிஷ்டமாக விழுந்தருக்கும் கறையை துடைத்தெறிய அந்த நிகழ்ச்சியில் நான் பங்கு கொள்கிறேன் என்றதே அமைச்சரின் அபாரம்!

கூதலுக்கு பயந்து குளிக்காமல் இருக்கும்நம் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் துணிந்து நின்று அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாக பதிலளித்த அமைச்சரை மெச்சுகிறோம்!!

-சல்மான் லாபீர்