Wednesday, July 31, 2019

புனித குர்ஆன் பற்றி ஓமல்பே சோபித தேரர் வெளியிட்டுள்ள தகவல்! ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை


புனித குர்ஆன் பற்றி ஓமல்பே சோபித தேரர்
வெளியிட்டுள்ள தகவல்!
ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ள கோரிக்கை


புனித குர்ஆனில் உள்ள விடயங்களை கடைப்பிடிப்பது தொடர்பில் ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓமல்பே சோபித்த தேரர் கோரிக்கை விடுத்தார்.

கொழும்பு தாமரை தடாக மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைதி, சமாதானம் மற்றும் சகவாழ்வுக்கான தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் அஷ்ஷெய்க் கலாநிதி முஹம்மத் பின் அப்துல்கரீம் அல்லிஸ்ஸா இம்மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

குர்ஆனில் உள்ள சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இணையத்தளத்திலிருந்து, தான் பெற்றுக்கொண்ட குர்ஆன் பற்றிய விளக்கத்தில் எப்பொழுதும் யுத்தத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும், இஸ்லாத்துக்கு எதிரானவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறன போதனைகளை கடைப்பிடிப்பது பற்றி ஆராய்வதற்கு தனியான குழுவொன்றை ஜனாதிபதியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்டகாலமாக அனுபவித்த பயங்கரவாத யுத்தத்திலிருந்து மீண்ட நிலையில், முஸ்லிம்கள் மாத்திரம் ஏன் தனியானதொன்றை நோக்கிச் செல்கின்றனர்.

தனியான உணவு, தனியான சட்டம் ஒழுங்கு, தனியான ஆடை என சகலவற்றிலும் தனியானதொன்றை நோக்கிச் செல்லப் பார்க்கின்றனர்.

ஏன் இவ்வாறு தனியானதொன்றைத் தேடுகின்றனர் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
 இதற்கு பதிலளித்துப் பேசிய ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி,
 புனித குர்ஆன், இஸ்லாம் தொடர்பில் வழங்கப்படும் பிழையான அர்த்தப்படுத்தல்களைக் களைவதற்கு சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டும்.                                                                                                                                                                          

தேரர் தவறான புரிதலைக் கொண்டிருப்பதாகவும், குர்ஆன் தொடர்பில் அவர் பெற்றுக் கொண்ட விளக்கம் தவறான வகையில் அமைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். புனித குர்ஆனில் அவ்வாறான எந்த விடயங்களும் இல்லையென்றும், குர்ஆன் தொடர்பிலும், இஸ்லாம் தொடர்பில் காணப்படும் பிழையான அர்த்தப்படுத்தல்களைக் களைவதற்கு இதுபோன்ற பல மாநாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாம் பற்றி ஏனையவர்களிடம் உள்ள இவ்வாறான தவறான புரிதல்களை இல்லாமல் செய்ய சகல முஸ்லிம்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்தார்.

இஸ்லாம் மதம் மோசமான போதனைகள் எதனையும் முன்வைக்கவில்லை. இம்மதம் எந்தளவுக்கு சகவாழ்வை விரும்புகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாக சவூதி அரேபியாவை எடுத்துக் கொள்ளலாம். இங்கு மில்லியன் கணக்கான முஸ்லிம் தவிர்ந்த இலங்கையர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரையும் எந்தவித எதிர்ப்பும் இன்றி சவூதி ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment