Friday, August 2, 2019

"வேட்பாளரை அறிவிக்கும் வரை ஒப்பந்தத்துக்கு உடன்பாடில்லை" - ரணிலுக்கு, ஹக்கீம் அறிவிப்பு!


"வேட்பாளரை அறிவிக்கும் வரை
ஒப்பந்தத்துக்கு உடன்பாடில்லை"
- ரணிலுக்கு, ஹக்கீம் அறிவிப்பு!



ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு களமிறக்கப்படும் வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை புதிய கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாது என  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார்.

அத்துடன், புதிய கூட்டணியின் செயலாளர் பதவி என்பது மிகவும் தீர்க்கமான ஒன்று எனக் கூறியுள்ள ரவூப் ஹக்கீம், இந்தப் பதவி ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரிடம் இருப்பது முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன், பழனி திகாம்பரம், ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் உட்தரப்பு நெருக்கடிக்குத் தீர்வு காணும் வரையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக பிரதமர் அலுவலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓகஸ்ட் 05ஆம் திகதி சில கட்சிகளுடன் ஒப்பந்தமொன்று கையெழுத்திட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இதற்குத் தேவையான பணிகளை அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகத் தரப்பு தகவல்களுக்கமைய, ஓகஸ்ட் 05ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு சம்பிக்க ரணவக்க மற்றும் சத்துர சேனாரத்ன ஆகியோரின் கட்சிகள் மட்டுமே இணக்கம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment