Saturday, December 28, 2019

திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகி மாணவி சாதனை!


திருகோணமலை மாவட்டத்தில்
முதலாம் நிலையினை பெற்று
மருத்துவத்துறைக்கு தெரிவாகி மாணவி சாதனை!

திருகோணமலை ஸாஹிறா கல்லூரியில் விஞ்ஞான துறையில் கற்ற மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகா விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 1ம் நிலையினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.

முஸாதிக்காவின் எதிர்கால கனவு VOG ஆக வந்து இனமத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்ற வேண்டும் என்பதாகும்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியின் வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் விஜயம் செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் நேரில் சென்று குறித்த மாணவிக்கும், அம்மாணவியின் பெற்றோருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளார்.
  





கிறிஸ்தவ மத போதகரை கன்னத்தில் அடித்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்! வைரலாகும் காணொளி


கிறிஸ்தவ மத போதகரை கன்னத்தில் அடித்த
 அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்!
வைரலாகும் காணொளி     


மத போதகர் ஒருவரை, மட்டக்களப்பு மங்களராம விஹாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கிய காணொளி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. பௌத்தர்கள் வாழும் பகுதியில் கிறிஸ்தவ மதத்தை போதித்தாக தெரிவித்தே குறித்த மத போதகரை அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை தடுப்பதற்கு பொலிஸார் தவறியுள்ளதாகவும், அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் இதன் போது குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே, அம்பிட்டிய சுமனரதனத் தேரர் கிறிஸ்தவ துறவி ஒருவரை வழிமறித்து தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்றும் நேற்று முன் தினம் பதிவாகியிருந்தது.

குறித்த கிறிஸ்தவ துறவி மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இன்றி பயணித்துள்ளார். இதன் காரணமாக அவர் மீது தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் குறித்த தேரர் மின்சார சபை ஊழியர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தார். அத்துடன், அரச உத்தியோகத்தர் ஒருவரையும் தாக்க முயற்சித்திருந்தார்.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரின் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்த்து கடந்த காலங்களில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன், தேரரின் இவ்வாறான நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தன.

இந்நிலையில், இன்றைய தினம் மத போதகர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.




சீமெந்துக்கான சில்லறை விலை நிர்ணயம் வர்த்தமானி அறிவிப்பு



சீமெந்துக்கான சில்லறை விலை நிர்ணயம்
வர்த்தமானி அறிவிப்பு

சீமெந்துக்கான உயர்ந்தபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உள்ளுர் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதி ஒன்றுக்கான அதிகூடிய சில்லறை விலை ஆயிரத்து ஐந்து ரூபாவாகும்.

சீமெந்து தூளாக இறக்குமதி செய்யப்பட்டு நாட்டில் பொதியிடப்படும் 50 கிலோ கிராம் எடை கொண்ட சீமெந்து பொதியின் அதிகூடிய சில்லறை விலை 950 ரூபாவாகும். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.




உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் - ஆறு மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம்


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
- ஆறு மாதத்திற்குள் மாணவர்களை
 பல்கலைக்கழகங்களில் உள்வாங்கத்திட்டம்



உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகள் வெளியாகி, ஒரு வருடகாலம் வரை பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த முறையை மறுசீரமைப்பது தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் கூறியுள்ளானார்.
அடுத்த வருடத்திலிருந்து இதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்தாகவும் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பெறுபேறுகளை மிக விரைவில் வெளியிடுவதற்கும் திட்டம் வகுக்கப்படுவதாகவும் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்


முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்




1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு : திங்கட்கழமை, ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்
5. தந்தை மரணம் : நபி (ஸல்) அவர்கள் கருவில் இருக்கும் போது
6. தாயார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் ஆறு வயதில்
7. பாட்டனார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் எட்டு வயதில
8. வளர்ப்பு : பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப்
9. செவிலித் தாய்மார்கள் : ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு ஹள்ரத் ஹலிமா (ரளி) அவர்கள்
10. பட்டப் பெயர்கள் : அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையானவர்)
11. முதல் வணிகம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம்
12. முதல் திருமணம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன்
13. மஹர் தொகை : 500 திர்ஹங்கள்
14. திருமணத்தை நடத்தி வைத்தவர் : அபூதாலிப் அவர்கள்
15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் : அன்னை கதீஜா (ரளி), அன்னை ஸவ்தா (ரளி), அன்னை ஆயிஷா (ரளி), அன்னை ஹஃப்ஸா (ரளி), அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி), அன்னை உம்முஸல்மா (ரளி), அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி), அன்னை ஜுவைரிய்யா (ரளி), அன்னை உம்மு ஹபீபா, அன்னை ஸஃபிய்யா (ரளி), அன்னை மைமூனா (ரளி), அன்னை மரியத்துல் கிப்தியா (ரளி)
16. ஆண் மக்கள் : காஸிம் (ரளி) அப்துல்லாஹ் (ரளி), இப்றாஹீம் (ரளி) இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள்
17. பெண் மக்கள் : ஜைனப் (ரளி), ருகையா (ரளி), உம்முகுல்தூம் (ரளி), ஃபாத்திமா (ரளி)
18. பேரர்கள் : அலீ (ரளி), உமாமா (ரளி), முஹ்சின் (ரளி), ஹசன் (ரளி) ஹுசைன் (ரளி)
19. ஊழியர்கள் : பிலால் (ரளி), அனஸ் (ரளி), உம்மு அய்மன் மாரியா (ரளி)
20. அடிமை : ஜைதிப்னு ஹாரிதா (ரளி)
21. பெருமானார் (ஸல்) அவர்களின் தகப்பனார் உடன் பிறந்தோர் : மொத்தம் 12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் ஹம்ஜா (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி)
22. பெருமானார் (ஸல்) அவர்களின் தாய்; உடன் பிறந்தோர் : மொத்தம் 6 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் அம்மாரா (ரளி), ஹள்ரத் ஆத்திகா (ரளி), ஹள்ரத் ஸஃபிய்யா (ரளி)
23. நபிப் பட்டம் கிடைத்தது : 40 – ம் வயதில் (கி.பி. 610)
24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : ஹிரா குகை
25. முதல் வஹீ : 'இக்ரஃ பிஸ்மி' என்ற வசனம்
26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : பெண்களில் - ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), சிறுவர்களில் - ஹள்ரத் அலீ (ரளி), ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி), அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரளி)
27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் : அபிசினியாவிற்கு, நபித்துவம் 5 – ம் ஆண்டில், மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில்
28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் : நபி (ஸல்) அவர்களின் மகள் ருகையா (ரளி), மருமகன் ஹள்ரத் உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர்
29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் : நபித்துவ 10 – ம் ஆண்டில், துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி)
30. மக்காவில் தீனழைப்பு : 13 ஆண்டுகள்
31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : நபித்துவ 14 – ம் ஆண்டில்
32. உடன் சென்றவர் : ஹள்ரத் அபூபக்கர் (ரளி)
33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை : தௌர்
34. மதீனா சேர்ந்த நாள் : ஈஸவி 25-09-622 - ல்
35. பத்ரு யுத்தம் : ஹிஜ்ரி 2, ரமளான் மாதம்
36. தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல்
37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது : ஹிஜ்ரி - 2
38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி - 3 ல்
39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி - 5 ல்
40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி - 6 ல்
41. மது ஹராமாக்கப்பட்டது : ஹிஜ்ரி - 6 ல்
42. நபி (ஸல்) அவர்களின் புனித பல் ஷஹிதான யுத்தம் : உஹது யுத்தம்
43. நபி (ஸல்) அவர்களின் காலத்து போர்களில் சில : பனூ முஸ்தலிக், ஹுனைன், தாயிப், பனூ கைனூக், பனூ நஸீர், பனூ குறைளா, கைபர், மூத்தா, தபூக் யுத்தங்கள்
44. மக்கா மீது படையெடுப்பு : ஹிஜ்ரி - 8 ல்
45. மிஃராஜ் : நபித்துவ 12 – ம் ஆண்டில, ரஜப் பிறை 27 திங்கட் கிழமை
46. தொழுகை கடமையாக்கப்பட்டது : மிஃராஜில்
47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி - 9 ல்
48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது : ஹிஜ்ரி – 10
49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்த மொத்த நரை முடிகள் : 17
50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் : ஹஜ்ஜத்துல் விதாவில்
51. இறுதி வஹி : 110 – ம் அத்தியாயம்
52. நபி (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்த நாள் : ஹிஜ்ரி 10, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை
53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்ட கிணறு : அரீஸ் கிணறு
54. நீராட்டியவர்கள் : ஹள்ரத் அலீ (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி), ஹள்ரத் பழ்ல் (ரளி), ஹள்ரத் குஸீ (ரளி), ஹள்ரத் உஸாமா (ரளி), ஹள்ரத் ஷக்ரான் (ரளி), ஹள்ரத் உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரளி)

டெங்கு நுளம்பை ஒழிக்கும் வொல் பெக்கியா வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் முன்னெடுப்பு


டெங்கு நுளம்பை ஒழிக்கும்
 வொல் பெக்கியா வேலைத்திட்டம்
அடுத்த வருடம் முதல் முன்னெடுப்பு



டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கான உத்தேச திட்டம் ஒன்றாக வொல் பெக்கியா (Wolbachia)என்ற பக்ரீரியாவை டெங்கு நுளம்பில் உட்புகுத்தும் புதிய வேலைத்திட்டம் அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

2 சுகாதார வைத்திய பிரிவுகளை தெரிவு செய்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நுகேகொட சுகாதார வைத்திய அதிகார பிரிவிலும் கொழும்பு நகர சபைக்கு உட்பட்ட தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள டி1 என்ற பிரிவிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஜனவரி மாதம் முதல் இது முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அவுஸ்ரேலியாவில் மொனெஷ் (Monash University)  பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு அமைவாக இந்த நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் உலகில் 12 நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது.

இது 2023 ஆம் ஆண்டளிவல் உலகில் 100 மில்லியன் மக்களை இலக்காக கொண்டு விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தும் பொழுது நுளம்பு முட்டைகள் நாட்டில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு எடுத்து செல்லப்பட்டு பக்ரீரியாவை உட்செலுத்திய பின்னர் மீண்டும் அந்த முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு நுளம்புகள் உள்ள சுற்றாடல் பகுதியில் விடுவிக்கப்படும்.

அவுஸ்ரேலியாவில் உள்ள தொழில்நுட்பம் இலங்கையில் இல்லாமையால் இந்த முட்டைகள் அந்நாட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பக்ரீரியா உட்புகுத்தப்பட்ட நுளம்புகள் 12 தொடக்கம் 20 வார காலப்பகுதிக்குள் விடுவிக்கப்படும். சில காலம் செல்லும் பொழுது வொல் பெக்கியா (Wolbachia)என்ற பக்ரீரியா உட்புகுத்தப்பட்ட நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் டெங்கு நோயைப் பரப்பக்கூடிய நுளம்புகள் சுற்றாடலில் இல்லாமல் போகும். அவுஸ்ரேலியா, வியட்னாம், பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.