Tuesday, March 31, 2020

சி.என்.என் செய்தி தொகுப்பாளருக்கு கொரோனா ..!

சி.என்.என் செய்தி
தொகுப்பாளருக்கு கொரோனா ..!




அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் டிவி சேனலில் செய்தி தொகுப்பாளராக பணிபுரியும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

சீனாவில் தொடங்கி உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை ஆட்டி படைத்து வருகிறது. அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 1 லட்சத்து 60 ஆயிரத்தை கடந்துள்ளது. நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோவின் சகோதரரான கிறிஸ் குவோமோவுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், தற்போது நலமாக இருப்பதாகவும், இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் 'கியூமோ பிரைம் டைம்' நிகழ்ச்சியில் தனது வீட்டில் இருந்து பங்கேற்பாரென சி.என்.என் அறிவித்துள்ளது.

தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து டிவிட்டரில் கிறிஸ் குவோமோ,'இந்த கடினமான நேரத்தை மேலும் கடினமாக்கும் வகையிலும், சிக்கலாக்கும் வகையில் இந்த நாள் அமைந்து விட்டது. இப்போது தான் எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. சமீபகாலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மக்களுக்கு வெளிப்படுத்தி வந்தேன் . எனக்கு காய்ச்சல், குளிர் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தது. நான் இதை குழந்தைகளுக்கும் கிறிஸ்டினாவுக்கும் கொடுக்கவில்லை என்று நம்புகிறேன். அது இந்த நோயை விட மோசமாக உணர வைக்கும். என் வீட்டில் அடித்தளத்தில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். இங்கிருந்து என்னுயை நிகழ்ச்சி தொடரும். நாம் அனைவரும் புத்திசாலித்தனத்துடன் , கடினமான மற்றும் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் இதை வெல்வோம்!' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நியூயார்க்கில் உள்ள சி.என்.என் செய்தி சேனல் தலைமை அலுவலகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பெரும்பாலான சி.என். என் ஊழியர்கள் பல வாரங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வீடு மற்றும் சிறிய ஸ்டுடியோக்களில் இருந்து பணியாற்றி வந்தனர்.


சிறைச்சாலை பஸ் விபத்து; 3 பெண்கள் உள்ளிட்ட 6 கான்ஸ்டபிள்கள் காயம்


சிறைச்சாலை பஸ் விபத்து;
3 பெண்கள் உள்ளிட்ட 6 கான்ஸ்டபிள்கள் காயம்

சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய பஸ் விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அறுவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பஸ்ஸே நேற்று (31) மாலை 05.30 மணியளவில் நுவரெலியா ஹக்கல பூங்கா பகுதியில் வைத்து, பாரிய வளைவொன்றில் தம்புரண்டு குடியிருப்யொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது கைதிகள் எவரும் பஸ்ஸில் இருக்கவில்லை எனவும், சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயணித்துள்ளனர் எனவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் அறுவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.



வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு


வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்
 பொலிஸில் பதிவு செய்வதற்கான
 காலம் இன்று  நிறைவு

வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான இறுதி தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த சகலரும் தம்மை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம் என சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் அவ்வாறானவர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1933 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். தங்களை பொலிஸில் பதிவு செய்யத் தவறினால், அவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மார்ச் 16 ஆம் திகதிக்கு முதல் நாட்டுக்குள் வந்தவர்களின் பட்டியல் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.



மகனுக்கு தானே முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்


மகனுக்கு தானே முடி வெட்டி
அழகு பார்த்த பிரபல இயக்குனர்

கொரோனா  வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக  நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளதுஇதனால் மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர்.

நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் வீட்டில் இருந்து என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியும் உற்சாகப்படுத்தியும் வருகின்றனர்.


இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடுஇப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கௌரவ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது மகனுக்கு தானே முடி வெட்டி விடும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.




கொரோனா வைரஸ் பாதிப்பால் வறுமையில் சிக்கும் 1.1 கோடி பேர்: உலக வங்கி அதிர்ச்சி


கொரோனா வைரஸ் பாதிப்பால்
வறுமையில் சிக்கும் 1.1 கோடி பேர்:
 உலக வங்கி அதிர்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் உள்ள, 1.1 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்குவர் என, உலக வங்கி எச்சரித்துள்ளது.

சீனாவில் வூஹான் நகரில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், கூடுதலாக 1.1 கோடி (11 மில்லியன்) மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், 'கொரோனா உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நாடுகளின் வளர்ச்சியை தடுப்பதோடு, பெரும் பாதிப்பை உண்டாக்கும். சீனா இதனால் கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.

உலக மக்கள் தொகையில் 5ல் 2 பங்கு மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் வணிகம் முடங்கி உள்ளதால், நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும். கிழக்கு ஆசியா, பசுபிக் நாடுகளில், சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% குறையும். இருப்பினும், விரைவில் இயல்பு நிலை திரும்பும்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நோய் தாக்குவதற்கு முன், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், 2020ல், 3.5 கோடி பேர் வறுமையிலிருந்து வெளியேறுவர் என கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




'தப்லீக் ஜமாஅத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா: ஆயிரக்கணக்கானோரை தேடி இந்திய நாடு முழுதும் வேட்டை


'தப்லீக் ஜமாத்' கூட்டத்தில்
 பங்கேற்றோருக்கு கொரோனா:
 ஆயிரக்கணக்கானோரை தேடி
இந்திய நாடு முழுதும் வேட்டை

தடை உத்தரவு முலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஏழு பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பங்கேற்ற பலர், விமானம், ரயில், பஸ் போக்குவரத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளதை அடுத்து, அவர்களை கண்டறியும் முயற்சியை தீவிரப் படுத்தும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

டில்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், நிஜாமுதீன் என்ற இடத்தில், கடந்த, 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர், வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'கொரானா அபாயம் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் கூடும் அளவுக்கு, யாரும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது' என, டில்லி பொலிஸார், ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதை பொருட்படுத்தாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம், டில்லி, நிஜாமுதீன் பொலிஸ் நிலையம் அருகேயுள்ள, 'மார்கஸ் நிஜாமுதீன்' என்ற, ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தான், இந்த பிரசங்க கூட்டம் நடந்துள்ளது.



கூட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விமானம், ரயில் மூலம் திரும்பி விட்டனர். அந்தமானுக்கும் சிலர் சென்றுள்ளனர். மீதமுள்ள, 1,000க்கும் அதிகமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தனர்.அப்போது தான், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திடீரென, இந்தியாவில்  நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால், இந்த கட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்துள்ளனர். விமானம், ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும், மீண்டும் ர்கஸ் நிஜாமுதீன் கட்டடத்திற்கே திரும்ப வந்து தங்கினர். வெளியுலகத்திற்கு இந்த விஷயம் பெரிதாக தெரியாமல் இருந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு திரும்பியவர்களில் ஆறு பேரும், ஸ்ரீநகர் திரும்பிய ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளது, அந்த மாநில மற்றும் நிர்வாக அரசுகளுக்கு தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் தான், கூட்டம் நடந்த இடத்தில், டில்லி பொலிஸார் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனடியாக, டில்லியின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு, அவர்கள் பல குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து, தப்லீக் ஜமாத் குழு செய்தி தொடர்பாளர் முஹம்மது சோயப் அலி கூறியிருப்பதாவது:

திட்டமிட்டபடி, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் ஏற்கனவே வந்து கூடிவிட்டனர். அதன்பின் தான், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், அனைவரும் இங்கு தங்கி விட்டனர். 'வெளியில் நடமாடக்கூடாது; அவரவர் இடங்களில் இருக்க வேண்டும்' என்ற உத்தரவை எல்லாரும் பின்பற்ற வேண்டியதாகிவிட்டது. அதனால்தான், அலுவலகத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், இங்கு கூடியிருந்தவர்களில், 300க்கும் அதிகமானோரிடம் நேற்று முன்தினம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் அனைத்தும் வெளிவந்த பின், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில்தான், நேற்று அந்த கட்டத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றிய பொலிஸார், அந்த கட்டடத்துக்கு, 'சீல்' வைத்தனர். கட்டடத்தில் இருந்தவர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என, 800 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 334 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியிருப்பதாவது:

மசூதி நிர்வாகம், மிகப்பெரிய தவறை செய்துஉள்ளது; இது, மன்னிக்க முடியாத குற்றம். மசூதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து, டில்லி துணைநிலை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளோம். நிஜாமுதீன் உட்பட அந்த பகுதி முழுதும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சுகாதாரப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இங்கு வராமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுஉள்ளது.
இதற்கிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் அனைவரது முகவரிகளும் பெறப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளை தொடர்பு கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள், விமானம், பஸ், ரயில் உள்ளிட்டவற்றில், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருக்கலாம் என்பதால், அவர்களுடன் யார் யார் பயணம் செய்தனர், அவர்கள் யார் யாரை சந்தித்தனர் என்ற விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்படலாம் என்பதால், டில்லி மத கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்களை, உள்ளாட்சி மற்றும் வருவாய் நிர்வாகத்தினருடன் சேர்ந்து, நாடு முழுதும், அந்தந்த மாநில பொலிஸார், சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.