Sunday, May 31, 2020

ஹோட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்; புகைப்படத்தால் சர்ச்சை


ஹோட்டலில் டீ குடித்த நவாஸ் ஷெரீப்;
 புகைப்படத்தால் சர்ச்சை

சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்ற முன்னாள் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஹோட்டலில் டீ சாப்பிடும் புகைப்படம் வெளியாகியது. இதையடுத்து பாக்கிஸ்தான், எதிர்கட்சிகள் நவாசை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
                                                                                      
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், 70. ஊழல் வழக்கில் சிக்கிய இவர், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல, நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சென்றார். லண்டனில் உள்ள மருத்துவமனையில், அவர் சிகிச்சை பெறுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில், தன் குடும்பத்தினருடன் அமர்ந்து, மகிழ்ச்சியுடன் நவாஸ் ஷெரீப், டீ சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து, 'உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் பொய் தகவல்களை கூறி விட்டு, லண்டனில் சுற்றித் திரியும் நவாஸ் ஷெரீபை கைது செய்து அழைத்து வர வேண்டும். அவரை பாக்கிஸ்தான், சிறையில் அடைக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.




வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் - பொலிஸ் மோதல்: கட்டிடங்களுக்கு தீவைப்பு


வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள்
 - பொலிஸ் மோதல்: கட்டிடங்களுக்கு தீவைப்பு
                                                                                                             
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்பவர், பொலிஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், கார் டயருக்கு அடியில் அவர் சிக்கி இருந்ததும், அவரது கழுத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி தனது முழங்காலால் நெரித்ததும், அவர் மூச்சு விட முடியவில்லை என கதறியதும் காட்சிகளாகி இருந்து.

அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கருப்பின மக்கள் ஆவேசமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்துள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகை முன்பும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளை மாளிகை முன்பு மீண்டும் ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் போராட்டக்காரர்கள்  அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர் இரவு 11 மணி முதல் திங்கள் காலை வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மேயர் அறிவித்தார். இதனால் போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்து இரவிலும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

அவர்களை பொலிஸார் வெளியேற்ற முயன்றதால் வன்முறை வெடித்தது. பொலிஸ்காரர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் தீ வைப்பு சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.









Saturday, May 30, 2020

அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்: போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்


அமெரிக்காவில் பரவுகிறது கலவரம்:
 போராட்டங்களை கட்டுப்படுத்த ராணுவம்

மின்னபொலிஸ் அமெரிக்காவில், கறுப்பின இளைஞரின் கழுத்தை நெரித்து கொன்ற, மின்னபொலிஸ் பொலிஸ் அதிகாரி மீது, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் திகதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, பொலிஸாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.இந்நிலையில், ஜார்ஜ் பிளாய்டை கொன்ற பொலிஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் இரவு, 8:௦௦ மணி முதல், நேற்று காலை, 6:௦௦ மணி வரை, ஊரடங்கு உத்தரவு முல்படுத்தப்பட்டது. எனினும், ஊரடங்கை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். உணவகம், வங்கி ஆகியவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. பல மணி நேரமாக எரிந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையே, மின்னபொலிசில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, அமெரிக்க ராணுவத்தின் பொலிஸ் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட பல நகரங்களில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. புரூக்ளினில் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது, பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஹூஸ்டனில் நடந்த பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காரில் வந்த ஒரு மர்ம நபர், துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.

இதில், 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். கத்தியால் தாக்கிய பெண் சுட்டுக்கொலை
புளோரிடா மாகாணத்தின் டெம்பிள் ரெரேஸ் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே, ஹேபா மும்தாஜ் அலாஜாரி, 21, என்ற பெண், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை, கத்தியால் குத்தினார். இதைக் கண்ட மற்ற பொலிஸார், அப்பெண்ணை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்தியால் குத்தியதில், பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.



கறுப்பினத்தவரின் மரணத்தால் அமெரிக்காவில் தொடரும் போராட்டம்


கறுப்பினத்தவரின் மரணத்தால்
அமெரிக்காவில் தொடரும் போராட்டம்

-ட்ரம்பின் ட்விற்றர் பதிவால் மேலும் உக்கிரம்

டிரம்பின் ட்விட்டர் பதிவு

மின்னபொலிஸில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "மின்னபொலிஸ் போன்ற சிறந்த அமெரிக்க நகரில் இவ்வாறு இடம்பெறுவதை நான் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன். தீவிர இடதுசாரி கொள்கையுடைய மேயர் ஃப்ரே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேசிய படையை அனுப்பி நடவடிக்கை எடுப்பேன்.

ரவுடிகள் ஜார்ஜ்ஜை அவமதிக்கின்றனர். நான் அதை நடக்க விட மாட்டேன். ஆளுநர் டிம் வால்சிடம் உரையாடியுள்ளேன். அவருடன் இராணுவம் துணை நிற்கும் என்று தெரிவித்தேன். ஏதாவது பிரச்சினையென்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம். ஆனால் கொள்ளையடிப்பது தொடர்ந்தால் துப்பாக்கிச் சூடு நடக்கும்" என பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

ஆனால் இந்த ட்விட்டர் பதிவு "வன்முறையை தூண்டுவதாக" உள்ளது என்ற எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு அந்த பதிவை ட்விட்டர் மறைத்துள்ளது. எனினும், அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில் கறுப்பினத்தை சேர்ந்த ஒருவர் பொலிஸாரின் பிடியில் உயிரிழந்ததால், அங்கு கடும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

ஒரு காருக்கு அடியில் ஒரு மனிதர் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவது போன்றும் ஒரு காணொளி இரண்டு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

"என்னால் மூச்சு விட முடியவில்லை" - ஜார்ஜ் ஃப்ளாய்ட்

அந்தக் காணொளியில் பொலிஸாரின் பிடியில் இருந்தவரின் பெயர் ஜார்ஜ் ஃப்ளாய்ட். அவருக்கு வயது 46.
அந்தக் காணொளியில் ஜார்ஜ் "என்னால் மூச்சு விட முடியவில்லை; தயவு செய்து என்னைக் கொல்லாதீர்கள்" என்று கூறுகிறார்.

அமெரிக்காவில் கறுப்பினர்த்தவர்கள் பொலிஸாரால் கொல்லப்படுவது குறித்து ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பொலிஸாரின் மீதும் கொலைக்குற்றம் சுமத்தப்பட வேண்டும் என ஜார்ஜின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரிகள் ஆதாரங்களை சேகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா முழுவதும் தீவிர போராட்டம்

ஜார்ஜ் உயிரிழந்த இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையம் ஒன்றை சூழ்ந்தனர் போராட்டக்காரர்கள். அவர்களை கண்ணீர் புகைக் குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் கொண்டு பொலிஸார் கலைக்க முயன்றனர்.

அமெரிக்காவின் நியூயோர்க், லொஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, டென்வர், ஃபீனிக்ஸ் மற்றும் மெம்ஃபிஸ் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

மினியோபொலிஸின் மேயர் ஃப்ரே புதன்கிழமையன்று, சம்பந்தப்பட்ட பொலிஸார் மீது கிரிமினல் குற்றம் பதியப்பட வேண்டும் என தெரிவித்தார். காணொளியில் தெரிந்த பொலிஸ் அதிகாரி ஒருவரும் மற்ற மூன்று பொலிஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசிய ஜார்ஜின் சகோதரர், "எனது சகோதரர் திரும்பி வரப்போவது இல்லை. எங்களுக்கு நீதி வேண்டும்," என்று தெரிவித்தார்.

கண்ணீர் மல்கப் பேசிய அவர், "பட்டப்பகலில் எனது சகோதரரை கொன்ற பொலிஸார் கைது செய்யப்பட வேண்டும்" என்றும் "கறுப்பினத்தவர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை பார்த்து சோர்ந்து போய்விட்டேன்," என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற சிஎன்என் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் ஒமர் ஜிமென்ஸ் மற்றும் அவரின் கமெரா மேன் மின்னெசோட்டா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொலிஸார் கூறுவது என்ன?

உணவகம் ஒன்றில் கள்ளப்பணம் செலுத்தப்படுகிறது என்ற தகவலின் அடிப்படையில் ஜார்ஜ்ஜை விசாரிக்க பொலிஸார் அவரை தொடர்புகொண்டனர்.

பொலிஸார் அவரை நெருங்கியபோது அவர் காரை விட்டு இறங்க மறுத்ததால் அவரின் கையில் விலங்கு போடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வந்த காணொளியில் அந்த மோதல் எப்படி தொடங்கியது என்ற தகவல் இல்லை.