Friday, June 19, 2020

முஸ்லிம் சமூகத்தால் மறக்கத்தான் முடியுமா! இது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?


முஸ்லிம் சமூகத்தால் மறக்கத்தான் முடியுமா!
இது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?



இனபிரச்சினைக்கான பேச்சுவார்த்தை 2002 ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஒஸ்லோவில் ஆரம்பித்தபோது அப்போதைய பாராளுமன்றத்தில் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்12 பேர் இருந்தனர்.

அன்றைய அரசாங்கத்தின் அச்சாணியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருந்தது. அத்தகைய நல்லதொரு சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளின் போது அரசு தரப்பில் அல்லாது முஸ்லிம் தரப்பில் கலந்து கொள்ளுமாறு முஸ்லிம் சமூகம் விரும்பியது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து முக்கியஸ்தர்கள் பலரும் தனித் தரப்பாக வே ஹக்கீம் செல்லவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

விடுதலை புலிகளினுடனான இப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவே பங்கேற்க வேண்டும் என்று சமூகமே பலமான வேண்டுகோள் விடுத்தும் அதனைக் கிஞ்சிற்றும் கணக்கில் எடுக்காது அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே ஹக்கீம் கலந்து கொண்டார்.

இது இன்றைய முஸ்லிம் சமூகத்தில் உள்ள இளம் சமூகத்திற்கு தெரியுமா?

(ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க தரப்பில் மிலிந்த மொரகொட, ரவூப் ஹக்கீம், பேர்நாத் குணதிலக ஆகியோரும் விடுதலைப் புலிகள் சார்பில் அன்ரன் பாலசிங்கம், தமிழ் செல்வன், விநாயகமூர்த்தி முரளிதரன், அடேல் பாலசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.)

அந்த பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வதற்காக ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எந்த கோரிக்கையையும் விடுக்காமல் அமைச்சர் என்ற அந்தஸ்துடன் அரசு தரப்பில் முஸ்லிம் பெயரில் இவர்மாத்திரமே கலந்து கொண்டார்.

12 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும் சக்தியாக அன்று இருந்த ஹக்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம் தரப்பில் பிரதிநிதிகளை அனுப்பி முஸ்லிம்களின் பாதிப்புகள் மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது விட்டாலும் சர்வதேசத்திற்கு இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன்வைத்திருக்க முடியும் அல்லவா?

ஆனால், அவர் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி சிந்திக்காமலும் முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்தை புறக்கணித்தும் அமைச்சர் அந்தஸ்துடன் அரசு தரப்பாகவே சென்றார் என்பது இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா?

No comments:

Post a Comment