Wednesday, July 15, 2020

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலைகுண்டு தாக்குதலில் இறந்ததாக கருதப்பட்ட புலஸ்தினி உயிரோடு இருக்கிறாரா? டி.என்.ஏ சோதனையில் வெளியான தகவல்


சாய்ந்தமருதில் இடம்பெற்ற
தற்கொலைகுண்டு தாக்குதலில்
இறந்ததாக கருதப்பட்ட  புலஸ்தினி
 உயிரோடு இருக்கிறாரா?
 டி.என். சோதனையில் வெளியான தகவல்



கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி சாய்ந்தமருதில் தற்கொலைகுண்டு தாக்குதல் இடம்பெற்ற தளத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட டி.என். சோதனையில், கட்டுவாப்பிட்டி தேவாலய தற்கொலை தாரியின் மனைவி குண்டுவெடிப்பு நடந்த அந்த இடத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அரச ஆய்வாளர் துறையின் கருத்தின்படி, புலஸ்தினி ராஜேந்திரன் என்ற சாரா என அடையாளம் காணப்பட்ட பெண், குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்பு, சாய்ந்தமருத்து இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டி.என். மாதிரிகளை அந்தப் பெண்ணின் பெற்றோரிடமிருந்து சேகரிக்கப்பட்ட டி.என். உடன் திணைக்களம் ஒப்பிட்டுள்ளது.

இதன்போது சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுவெடிப்பு நடந்த வீட்டில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது டி.என். சோதனைகளில் தெரிய வந்துள்ளது.

எனினும், இதில் சாரா உயிரிழக்கவில்லை என்ற வெளிப்பாட்டுடன், பாதுகாப்புப் படையினர் தற்போது இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பரில் படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு முன்னர் சந்தேகநபர் களுவாஞ்சிகுடியில் பதுங்கி இருந்ததாக விசாரணையில் இதுவரை தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், களுவஞ்சிகுடியிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உதவியதாக தெரிவித்து ஜூலை 13ம் திகதி சாராவின் மாமா என்று நம்பப்படும் ஒருவரை சிசிடியினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் செல்வகுமார் தேவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சாரா, தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் பணியாற்றும் போது, ​​ஒரு பிரபலமான வெளிநாட்டு உளவு நிறுவனத்திற்கான உளவாளியாக பணியாற்றியதாக பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சாரா பிறப்பால் ஒரு தமிழர் என்றாலும், பின்னர் அவர் இஸ்லாமிய நம்பிக்கையைத் தழுவினார் எனவும், தற்கொலைதாரி முகமது ஹஸ்தூனின் துணைவியார் என்றும், இவரே கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியதாகவும் பாதுகாப்பு படையினர் நம்புகிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சூத்திரதாரி சஹரன் ஹாஷிமின் குடும்பத்துடன் தொடர்புடைய பல பயங்கரவாதிகள், மற்றும் கூட்டாளிகள், சாய்ந்தமருத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது தற்கொலை குண்டைவெடிக்க செய்து உயிரிழந்தனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் திகதி இரவு நடந்த இந்த சம்பவத்தில் சாராவும் இறந்துவிட்டார் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டது.

பயங்கரவாத தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாக சஹரனின் குழுவினர் குருநாகலில் உள்ள ஒரு துணிக் கடைக்கு சென்றபோது சாராவும் வெள்ளை ஆடைகளை வாங்கியிருந்தார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியில் சாராவையும் காணலாம் என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment