Monday, August 2, 2021

தாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழிருந்து 30 பாம்பு குட்டிகள் மீட்பு !

 தாயும் பிள்ளைகளும் உறங்கிய

மெத்தையின் கீழிருந்து
30 பாம்பு குட்டிகள் மீட்பு !

தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருணாகல் மாவட்டம் மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
வீட்டில் இருப்பவர்களின் தகவலை அடுத்து அங்கு சென்ற சூழலியலாளரும், குருணாகல் பிரதேச சபையின் பணியாளருமான கெலும் சோமரட்ன என்பவர் இந்த பாம்புக்குட்டிகளை நேற்று மீட்டுள்ளார்.
இந்த வீட்டின் உரிமையாளரது மனைவியும் பிள்ளைகளும் கட்டில் மெத்தையில் பாம்புக் குட்டிகள் இருப்பது தெரியாது, சில நாட்கள் நித்திரை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன் தினம் இரண்டு பாம்புக் குட்டிகளை கண்ட வீட்டின் உரிமையாளர் அவற்றை அடித்துக் கொன்றுள்ளார்.
பின்னர் நேற்றும் மெத்தையில் ஒர் பாம்புக் குட்டி நித்திரை கொண்டவர்களின் மேல் ஏறிச் சென்றதனால் சந்தேகத்தின் பேரில் கட்டில் மெத்தையை எடுத்து பார்த்த போது பாம்புக் குட்டிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.



மலையக சட்டத்தரணி தம்பையா ஜெயரட்ணராஜாவின் இஸாலினி தொடர்பான நடுநிலை வேண்டுகோள்

 

மலையக சட்டத்தரணி தம்பையா  ஜெயரட்ணராஜாவின்  

இஸாலினி தொடர்பான நடுநிலை வேண்டுகோள்.......!


நான் ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் மிகவும் பொறுப்புடன் எனது மக்களுக்கு நான் கூற நினைப்பது இந்த வழக்கில் அங்கு நடந்த நிகழ்வுகளின் உண்மை தன்மை தொடர்பாக நீதிமன்றமேதீர்மானம் எடுக்க வேண்டும்.
பொலிசார் வெளியிடும் தகவல்களும் ஏனைய ஊடகங்களும் பத்திரிகையில் வெளிவரும் தகவல்களும் உண்மையானவையா என்பதை நீதிமன்றம் மட்டும் தீர்மானிக்கும். எனக்கு கிடைத்த சில நம்பத் தகுந்த தகவல்களின் அடிப்படையிலேயே பொய்யான தகவல்களையும் கூறும்படி பொய் சாட்சிகளை உருவாக்கும் முயற்சியில் குறிப்பிட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது .
ஆகவே இந்தத் தகவல்களை பெரிதுபடுத்தி
சமூக ஊடகங்களிலும் அல்லது ஏனைய ஊடகங்களில் எழுதுவதை தவிர்த்து இன முரண்பாட்டுக்கு இடம் கொடுக்காமல் இந்த பிரச்சினையை விஞ்ஞான ரீதியாக அணுக வேண்டும்.
இந்த நாடு சுதந்திரம் பெற்று 73 ஆண்டு
கள் கடந்துவிட்டன. இந்த நாட்டின் இந்த 73 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிமைத்தனத்தின் வடிவமாக வீட்டுக் பணியாட்கள், வீட்டுப் பணிப்பெண்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
இதன்மூலம் தனவந்தர்கள் சாதி, மத பேதமற்று மிகக்குறைந்த கூலிக்கு அடிமைகளைத் தேடிக் கொண்டார்கள். இதற்கு அரசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முற்றுமுழுதான பொறுப்பை ஏற்க வேண்டும். வீட்டு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமோ சமூகப்பாதுகாப்பு மற்றும் வேலைநாட்களோ வேலை நேரமோ
வேலை ஒப்பந்தமோ விடுமுறை தொடர்
பாகவோ சட்ட ஏற்பாடு இல்லை.
சட்டவாக்கத்தில் நியதிச் சட்டங்களில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பாக ஒரு பாரிய வெற்றிடம் காணப்படுகின்றது. இவர்களுக்கு எந்தவித பாதுகாப்பபோ உரிமையோகிடையாது. இந்த அவலநிலைக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இதனால் இதை ஒரு சமூகப் பிரச்சினையாக நாங்கள் பார்க்கிறோம். இதற்கு தீர்வு காணப்படவேண்டும். எதிர்காலத்திலும் இவ்வாறான அவலங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும், என்ற அடிப்படையிலேயே ஒரு சமூகம் இதற்காக போராடுகின்றது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
குறித்த ஒரு நபரை தண்டிப்பது குறித்த நபர் மீதான ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி எம் சமூகத்துக்கு இல்லை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.
தமிழ்மக்களைக் காப்பாற்றுவதாக எண்ணிக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது அருவருக்கத்தக்க இனவாத தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு குறித்த சிறுமியை பற்றியோ அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றியோ சேறு பூசுவதையும் குற்றம்சாட்டுவதையும் தமிழ் மக்கள் மீதான இனவாதவெறுப்பூட்டும் தாக்குதல்களை பொறுப்புள்ள இளைஞர்கள் நிறுத்திக்கொண்டால் ஒரு சுமுகமான நிலையை ஏற்படுத்த முடியும்.
இந்த இனவாதிகளுக்கு துணைபோகும் விதத்திலே இன முரண்பாட்டை உருவாக்கும் விதத்திலே சில மதவெறி பிடித்த நபர்கள், அமைப்பினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றார்கள்.
இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு இவ்வாறு முகநூலிலும் ஏனைய ஊடகங்களிலும் செயற்படுபவர்களுக்கு நாம் எந்தவகையிலும் உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருக்கக் கூடாது என்று அன்புடன்கேட்டுக்கொள்கின்றேன்.
இறுதியாக முகநூலை முட்டாள்களின் கூடாரமாக மாற்றி விடாதீர்கள் என்ற வேண்டுகோளை அருவருக்கத்தக்க விதத்திலே மனித குலத்திற்கு எதிராக இனவாதம் பேசும் நபர்களுக்கு முன்வைக்கிறேன்.
நன்றி.
சட்டத்தரணி த.ஜெயரட்னராஜா.

“இசாலினியின் மரண விடயத்தில் ‘சேறுபூசும் அரசியல்’ செல்வாக்கு செலுத்துகிறது” - ஆதாரங்களுடன் விளக்குகிறார் பாயிஸ்!

 “இசாலினியின் மரண விடயத்தில் ‘சேறுபூசும் அரசியல்’ செல்வாக்கு செலுத்துகிறது” -ஆதாரங்களுடன் விளக்குகிறார் பாயிஸ்!


இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சிலர் முயற்சித்து வருவதாக” மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களது வீட்டில் பணிபுரிந்து வந்த இசாலினியின் மரணம் தொடர்பில், வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், ஒருசிலர் பல்வேறுபட்ட ஊடகங்களில் சோடிக்கப்பட்ட, பொய்யான விடயங்களை பரப்பி, இந்த விடயத்தை, குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவதற்காக பயன்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது.
டயகம பிரதேசத்தை சேர்ந்த தரகரொருவரினால் 2020 நவம்பர் 18ம் திகதி, இசாலினி என்பவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களது வீட்டிற்கு வேலைக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார். இவர் இந்த வீட்டிற்கு வந்த தினத்திலிருந்து “இசானி” எனும் பெயரிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த பெயரினாலேயே அனைவராலும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். இவர் அங்கு வந்தபோது, அவருக்கு வயது 18 என்றே கூறியிருக்கிறார். எனினும், இவர் எரியுண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பின் அவரது பிறந்த தினம் 2004.11.12 என உறுதியாகியுள்ளது.
இதனடிப்படையில் இவர் பணிக்கு அழைத்துவரப்பட்டபோது, இவருக்கு வயது பதினாறு வருடங்களும் ஆறு நாட்கள் என்பது உறுதியாகியுள்ளது. எனினும், ஒருசிலர் இன்றும் இவரை சிறுமியாக இனங்காட்டி குற்றம் சுமத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் 2020.10.19ம் திகதியிலிருந்து, 2020.12.09ம் திகதி வரை கைதுக்குள்ளாகியிருந்தார். இசாலினி பாராளுமன்ற உறுப்பினரது வீட்டிற்கு வரும்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் சிறைச்சாலையிலேயே இருந்திருக்கிறார். அதன்பின் 2021.04.24ம் திகதி அவர் மீண்டும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, இதுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வாறான நிலையில் எரியூட்டியதும், இந்த விவகாரத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவரும் இவரே எனக்கூறி, இசாலினியின் மரணத்தை வைத்து ஒருசிலர் அரசியல் செய்கிறார்கள்.
இசாலினி பணிக்கு அமர்த்தப்பட்டதன் பின் அவரை பார்ப்பதற்கோ அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கோ அனுமதிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் இசாலினி தமது குடும்பத்தாரோடு தொடர்புகொள்வதற்கு கோரிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவருக்கு தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முப்பது நிமிடங்கள் வரை தொடர்பு கொண்டுள்ளமை தொடர்பாடல் அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு இசாலினிக்கு தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த அறை 6*4 அடி அளவிலான கொட்டிலொன்றாக சித்தரிக்கப்பட்டு, அவரை சரியான முறையில் கவனிக்கவில்லை என்ற மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இசாலினி தங்கியிருந்த அறை 7அடி 4 அங்குலம் நீளமும், 6 அடி 3 அங்குலம் அகலமும் கொண்டது. அங்கு அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ரிஷாட் பதியுதீன் அவர்களது மனைவியினால் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு பாராளுமன்ற உறுப்பினரது மூத்த மகள் வெளிநாடு செல்வதற்கு முன் இசாலினிக்கு ஐயாயிரம் ரூபா பணம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இது இவர் இசாலினி மீது வைத்திருந்த அன்புக்கு தக்க சான்றாகும். இவர் இதுவரை தான் தங்கியிருந்த அறை தொடர்பில், எந்தவிதமான குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியதாக இல்லை. அதேபோன்று அவரது தாயாரோ அவர் தங்கியிருந்த அறை தொடர்பில் இதுவரை எந்தவிதமான கருத்தையும் வெளியிட்டதாக இல்லை. இதற்குப்பின் அவ்வாறானதொன்றை கூறுவதாக இருந்தால் அது ஆச்சரியப்படுவதற்கான விடயமல்ல. ஏனெனில் அவர் ஏற்கனவே வழங்கிய கருத்துக்களுக்கும் தற்போது அவர் கூறுகின்ற விடயங்களுக்கும் பின்னால் அரசியல் கரமொன்று செயல்படுவது நன்றாக புலனாகிறது.
இசாலினி பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. உண்மையில் 2021.07.03ம் திகதி இடம்பெற்ற எரிகாய சம்பவத்தின் பின் 12 நாட்கள் இசாலினி அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், விசக்கிருமி உட்சென்றதன் காரணமாக அவர் உயிரிழந்திருந்தார். இதனை தொடர்ந்து, இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின் இசாலினி 12 வயது தொடக்கம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர். அதாவது 2016ம் ஆண்டிலிருந்து இவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இவர் தமது தந்தையின் வீட்டிலிருந்து பாடசாலைக்குச் சென்றதாக இசாலினியின் தாயார் கூறியிருந்தார். அங்கு தனது தந்தையின் சகோதரியொருவரும், அந்த சகோதரியின் புதல்வர்கள் இருவரும் இவரோடு அந்த வீட்டில் வசித்து வந்ததாக இசாலினியின் தாயார் பொலிசாரிடம் குறிப்பிட்டிருந்தார்.
அத்தோடு ஏதோவொரு காரணத்துக்காக இவரை 2017ம் ஆண்டு பாடசாலையிலிருந்து வெளியேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றிருந்த போதிலும், பெரும்பாலான ஊடகங்கள் இது தொடர்பாக எதனையும் கூறாமலே இருந்துள்ளன.
இவ்வாறான நிலையில் நான்கு வருடங்கள் கழிந்ததன் பின், சேவைக்கு வந்து ஏழரை மாதகால குறுகிய காலப்பகுதியில், பாராளுமன்ற உறுப்பினரது வீட்டில் இவ்வாறான பாலியல் வல்லுறவு சம்பவம் நிகழ்ந்துள்ளமைக்கான எந்தவொரு சாட்சியங்களும் முன்வைக்கப்படாத நிலையில், ஊடகங்கள் தீர்மானமொன்றுக்கு வந்திருப்பது எவ்வாறு? என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுதிதியுள்ளது.
2020.11.18ம் திகதியிலிருந்து ஏழரை மாதகாலம் ரிஷாட் பதியுதீன் அவர்களது வீட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கையில், அவர் பணியாற்றிய இடம், எப்போதும் பாராளுமன்ற உறுப்பினரது மாமியார் அல்லது அவரது மனைவியின் மிகுந்த கண்காணிப்பிலேயே இருந்து வந்திருக்கிறது. அத்தோடு, அவர் தங்கியிருந்த அறை கூட தேவைக்கேற்ப உள்ளே இருந்து பாதுகாப்பாக மூடிக்கொள்வதற்கு ஏற்றவாறு வசதி செய்யப்பட்டிருந்தது. இவர் இங்கு பாலியல் வல்லுறவுக்குள்ளாவதற்கான எந்தவொரு பின்புலமும் இருக்கவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருப்பின் அது தொடர்பில் மரபணு பரிசோதனை மூலம் தகவல் வெளியாகி இருக்க வேண்டும்.
2021.07.03ம் திகதி இசாலினி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, ஐந்து நாட்களுக்குப் பின்பே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களது மனைவியின் சகோதரர் தமது குடும்பத்தாரோடு இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார். பலமாத காலங்களுக்குப் பின்னரே அவர் அங்கு வந்திருக்கிறார். இதன் உண்மைத் தன்மை தற்போது பொலிசாரின் பொறுப்பின் கீழுள்ள CCTV காட்சிகள் மூலம் தெளிவாகிறது. எனினும், இசாலினிக்கு இவரால் ஏதேனும் கொடுமை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் பொலிசாரினால் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதன் பின் குற்றம் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளுமாறு, பல்வேறு வகையான சித்திரவதைகளை மேற்கொண்டு பொலிசார் மிரட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் இவரது மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்பின் பல வருடங்களுக்கு முன், ரிஷட் பதியுதீன் அவர்களது வீட்டில் பணியாற்றிய வேறொருவரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வாக்குமூலமொன்றின் மூலம், பாராளுமன்ற உறுப்பினரது மனைவியின் சகோதரரினால் பாலியல் வல்லுறவு இடம்பெற்றுள்ளதாக பதிவொன்றினை மேற்கொண்டு, அந்த வாக்குமூலத்தினடிப்படையில், அவருக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்து, அவரை கைது செய்திருக்கிறார்கள். இவ்வாறு ஏற்கனவே பணியாற்றிய அந்த பெண் அங்கிருந்து சென்று பல வருடங்கள் கழிந்துள்ள நிலையில், இது தொடர்பில் எவரிடமும் எந்தவொரு முறைப்பாட்டையும் மேற்கொள்ளாத இவர், இந்த சந்தர்ப்பத்தில் அவசர அவசரமாக இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதொன்றாகும். இந்தப் பெண், இசாலினி மரணிப்பதற்கு முன் இந்த வீட்டில் மீண்டும் பணியாளராக வருவதற்கு விருப்பத்தோடு இருந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, அவரது இந்த திடீர் மாற்றம் ஏதாவதொரு சதியொன்றின் அங்கமா? என சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை இதுவரை நிரூபிக்கப்படாதுள்ள நிலையில், அதனை நீதிமன்றமே தீர்மானிப்பதற்கு முன்னதாக, பொய்யான தகவல்களின் அடிப்படையில், பல்வேறுபட்ட தீர்மானங்களுக்கு வந்து, சிறிய அப்பாவி பிள்ளைகள் இருவர் இருக்கின்ற இவரது குடும்பத்தை அழித்தொழிக்காதீர்களென அனைவரிடமும் வேண்டிக்கொள்கிறோம்.
இசாலினிக்கு ரிஷாட் பதியுதீன் அவர்களது வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதற்கான எந்தவொரு சாட்சியும் இதுவரை கிடைக்கப் பெற்றதாக இல்லை. எனினும், ஊடகங்கள் மூலம் இசாலினிக்கு இந்த வீட்டில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொய்யான தகவல்களை பரப்பி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களது நற்பெயரை அழித்தொழிக்கும் சதித்திட்டத்தை அரங்கேற்றி வருவது நன்றாக புலப்படுகிறது.
2021.07.03ம் திகதி அதிகாலை 6.45 மணியளவில், இசாலினி தனது அறையிலிருந்து கூக்குரலிட்டவாறு, கீழ் மாடியிலிருந்த ரிஷாட் பதியுதீன் அவர்களது மாமனார் மற்றும் மாமியார் தங்கியிருந்த அறைப்பக்கமாக ஓடி வந்திருக்கிறார். அதனைக் கேட்ட மாமியார் உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது “காப்பாற்றுங்கள்” எனக் கத்தியவாறு ,தனது அறைப்பக்கமாக ஓடி வருவதை கண்ணுற்றிருக்கிறார். அப்போது அவரது உடம்பில் தீ பற்றிக்கொண்டிருந்ததினால் பீதியடைந்த மாமியாரும் சத்தமிட்டு அழத்தொடங்கியிருக்கிறார். இந்த அழுகுரலைக் கேட்ட மாமனார், உடனடியாக வெளியே வந்திருககிறார். அவர் உடனடியாக செயல்பட்டு, பக்கத்திலிருந்த கார்பட்டொன்றை இசாலினியின் உடம்பின் மேல் போர்த்தி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். இந்த விடயம் முதன்முதலாக இவ்வாறுதான் இடம்பெற்றிருக்கிறது. எனினும், இந்த தீ பரவல் இடம்பெற்றிருப்பது திடீர் விபத்தொன்றினாலா? அல்லது தற்கொலை முயற்சியா? என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்பட்டதாக இல்லை.
அதேவேளை, இசாலினியை காலம் தாழ்த்தியே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. உண்மையில் இசாலினி காலை 7.20க்கு முன்னதாகவே அம்பியுலன்ஸ் ஒன்றின் மூலம் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். எனவே, இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அதேநேரம் இசாலினியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் போது பொய்யான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள். உண்மையில் இசாலினியின் பெயர் மற்றும் வயதைச் சரியாக கண்டறியக் கிடைத்தது, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒருசில தினங்களுக்குப் பின்னராகும். அதுவரை, இவர் அந்த வீட்டில் “இசானி” என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறார். இவர் அங்கு சேவைக்காக வரும்போது 18 வயதென்று கூறியிருந்ததனால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும் போது 18 வயதென்றே தகவல் வழங்கப்பட்டிருக்கிறது.
அத்தோடு இசாலினிக்கு இரண்டு இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இசாலினி 2020.11.18ம் திகதி வேலைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பின், ஐந்து நாட்களுக்குப் பிறகு இரண்டு மாத முற்பணமாக நாற்பதாயிரம் ரூபா (ரூபா 40,000) பணத்தை அவரது தாயாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின் டிசம்பர் மாதம் அவரது தாயாரினால் மீண்டும் தொடர்புகொண்டு, தமது வீட்டின் கூரை உடைந்துள்ளதாகவும் அதனை சீர்செய்வதற்கு அறுபதாயிரம் ரூபா (ரூபா 60,000) வரை தேவைப்படுவதாகவும் கூறி, அத்தொகையைப் பெற்றுக்கொண்டிருக்கிறார். மீண்டும் ஒரு மாதம் கழித்து அவரது மூத்த மகன் நோய்வாய்ப்பட்டு, ஒரு மாதகாலமாக படுக்கையில் இருப்பதாகக் கூறி, மேலும் நாற்பதாயிரம் ரூபா (ரூபா 40,000) பணத்தை பெற்றிருக்கிறார். மேலும் இந்த பெண் எரிகாயத்துக்கு உள்ளாவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும், இன்னொரு தொகை பணத்தை பெற்றுத் தருமாறு தரகரூடாக கோரியிருந்தார்.
இதனடிப்படையில், பணியாற்றியுள்ள ஏழரை மாத காலத்துக்கான மொத்த சம்பளம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (ரூபா 150,000) ஆக இருந்த போதிலும், இவருக்கு மொத்த கொடுப்பனவாக இரண்டு இலட்சம் ரூபா (ரூபா 200,000) வழங்கப்பட்டிருப்பது, இவரது குடும்ப ஏழ்மை நிலையை கருத்திற்கொண்டாகும்.
இந்த வீட்டில் பணியாற்றிய மேலும் இருவர் இறந்துள்ளமை தொடர்பாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருக்கிறது. இசாலினி வேலைக்கு வருவதற்கு முன், இந்த வீட்டில் சேவையாற்றி, சேவையிலிருந்து விலகிச் சென்று இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தமது காதலனோடு ஏற்பட்ட பிரச்சினையொன்றினால் புகையிரதத்திலிருந்து குதித்து அல்லது மோதி உயிரிழந்த சம்பவமொன்றை இதனோடு தொடர்புபடுத்தி, ஊடகங்கள் ஊடாக இந்த வீட்டில் பணிபுரிந்த காலகட்டத்தில் இடம்பெற்றதொன்றாக பொதுமக்களுக்குக் காட்டி, தப்பபிப்பிராயமொன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அத்தோடு, மற்றுமொரு முப்பத்தைந்து வயதுடைய பெண்ணொருவர் இங்கு பணிபுரிந்து, விலகிச் சென்று ஒரு வருடத்திற்குப் பின், அவருக்கு தொற்றியிருந்த நோய் காரணமாக அவர் மரணித்திருக்கிறார். இவையனைத்தும் வேறொரு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சதியென்பது தெளிவாக புலப்படுகிறது.
அதுமாத்திரமன்றி, இந்த வீட்டில் பணியாற்றிய பதினொரு பேர் சித்திரவதைக்குள்ளாகியிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பில் 07/28ம் திகதி வரை எந்தவொரு வாக்குமூலமும் பெற்றிருக்கவில்லை. எனினும், அந்த பத்திரிகை 07/24ம் திகதியன்று “பதியுதீன் வீட்டில் 11 யுவதிகளுக்கு கடும் சித்திரவதை” என போலிச் செய்தியொன்றினை, அவர்களது பத்திரிகையில் பிரதான தலைப்புச் செய்தியாக பிரசுரித்திருந்தனர். இதில் எவ்வித உண்மையுமில்லை என வீட்டார் கூறியிருந்தனர்.
அத்தோடு, இவையனைத்துக்கும் மேலாக ரிஷாட் பதியுதீன் அவர்களது மனைவியின் மற்றொரு சகோதரர், சிறுமியொருத்தியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி 2007ம் ஆண்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ரிஷாட் பதியுதீன் அவர்களது மனைவியின் எந்தவொரு சகோதரரோ அல்லது உறவினரோ இவ்வாறு சிறையில் அடைக்கப்படவில்லை என்பதோடு, இது மிகப்பெரிய பொய்க் குற்றச்சாட்டொன்றாகும். இவ்வாறான பொய்க்குற்றச்சாட்டுக்களை பிரச்சாரம் செய்வது, அரசியல் மற்றும் இனவாத சதியொன்றென்பது தெளிவாக புலப்படுகிறது.
இது மாத்திரமன்றி பதியுதீன் அவர்களது மனைவி 2008 முதல் டொலர் ஊடாக ஆட்கடத்தலில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. “சிங்ஹ லே” இயக்கத்தினர் 07/28ம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, இந்த பாரிய பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களது குடும்பத்தார் கூறியிருந்தனர்.
இது ஒருசில இனவாத குழுக்களினால் ரிஷாட் பதியுதீன் அவர்களது அரசியல் பயணத்தை தடுப்பதற்கும், அவரது நற்பெயரை இல்லாதொழிப்பதற்குமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சதியொன்றாகுமெனவும், மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை - 31ஆண்டுகள்

 காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை

- 31ஆண்டுகள்
தமிழீழ விடுதலைப் புலிகள்
மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம்
---------------------------------------------------------
இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் 31 வருடங்களுக்கு முன்னர் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கொடூர தாக்குதல் சம்பவம் நாளை 3 ஆம் திகதி நினைவு கூறப்படுகின்றது.
1990 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி காத்தான்குடி மஸ்ஜிதுல் ஜும் ஆ பள்ளிவாசலில் இரவு நேரம் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதியவர்கள் சிறுவர்கள் உட்பட 103 பேர் பள்ளிவாசலுக்குள் கொல்லப்பட்டார்கள். 140க்கும் மேற்பட்டோர் காயப்பட்டிருந்தார்கள்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களிடையே இத்தினம் இன்னமும் ஒரு கருப்பு தினமாகவே கருதப்படுகின்ற இந் நாளை காத்தான்குடி பிரதேச முஸ்லிம்கள் வருடாந்தம் தேசிய ஸுஹதாக்கள் தினமாக நினைவு கூர்ந்து அனுஷ்டித்து வருகின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இக் காலப் பகுதியில் ஏறாவூர், முள்ளிப்பொத்தானை மற்றும் அழிந்தபொத்தானை உட்பட கிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கு இடையேயான உறவின் ஒரு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகளாகியும், இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே இன ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த பல்தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அப்படியான நெருக்கமான உறவுகளும் பரஸ்பர நம்பிக்கையும் இன்னும் ஏற்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இச் சம்பவம் குறித்த காத்தான்குடி சகோதரர் ஒருவரின் நினைவு இப்படி இருந்தது,
காத்தான்குடி முதலாம் குறிச்சி பள்ளிவாயலுக்கு அப்போது (1990) மஹ்ரிப் தொழப் போனால் இஷாவையும் தொழுதுவிட்டு இரவு பத்து மணியும் பிந்தித்தான் வீட்டுக்குப் போவேன்.
03-08-1990 ஆம் திகதி அன்று மஹ்ரிப் தொழுகையை தொழுதுவிட்டு ஹவுழுப் பக்கம் உள்ள படிக்கட்டில் நானும் கவிஞர்களான ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எம்.ஜுனைதீன் மற்றும் ஆரிப் (ஹயாத்துக்கான் மாஸ்டரின் இரண்டாவது மகன்) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தோம்.
கொஞ்ச நேரத்தில் ஜவ்பர்கான், வீட்டுக்கு சென்று தேநீர் அருந்திவிட்டு இஷாவுக்கு அதான் சொல்ல முதல் வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஜுனைதீன், ஆரிப், நான் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே இஷாவுக்கு அதான் ஒலிக்கிறது. மூவரும் வுழூவுடனேயே இருக்கிறோம்.
ஜுனைதீனின் ராத்தா பரீனாவின் வீடு பள்ளிக்கு பக்கத்தில் இருப்பதால் இகாமத் சொல்லுவதற்கிடையில் தேநீர் அருந்திவிட்டு வருவோம் என்று ஜுனைதீன் சொல்கிறார்.
ஆரிப், " நான் வரவில்லை. பள்ளிக்குள் போகிறேன். நீங்கள் ரெண்டு பேரும் தேநீர் குடித்துவிட்டு வாருங்கள் " என்று சொல்லிவிட்டு பள்ளியின் உள்ளே போய்விட்டார்.
பரீனா ராத்தா ஊற்றித் தந்த தேநீர் கொதிக்கக் கொதிக்க கடும் சூடாக இருந்தது. அவசரமாகக் குடிக்க முடியவில்லை. எங்களோடு தேநீர் அருந்திக் கொண்டிருந்த ஜுனைதீனின் நானா அக்பர் அவசரமாகக் குடித்து முடித்து விட்டு பள்ளிக்குப் போய்விட்டார்.
அவ்வல் ஜமாஅத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று என்னை ஜுனைதீன் அவசரப் படுத்திய போதும் தேநீரை சுடச் சுட என்னால் குடிக்க முடியவில்லை.
ஆற்றிக் குடித்து முடிவதற்கிடையில் இகாமத் சொல்லி தொழத் தொடக்கியும் விட்டார்கள். அவசரமாக நானும் ஜுனைதீனும் எழுந்து பள்ளியை நோக்கிப் போக தெருவுக்கு வந்ததுதான் தாமதம். பள்ளிக்குள் ஆயுதங்களால் சுடுகின்ற சத்தம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு பயங்கரமாக கேட்கிறது.
“புலிகள் பள்ளிக்குள் புகுந்து சுடுகிறார்களாக்கும் அன்ஸார்....! இருட்டாகவும் இருக்கிறது.
பள்ளிக்குள் போவோமா? இல்ல.... என்ன ஏதென்று பார்த்துவிட்டு போவோமா?” என்று ஜுனைதீன் எனது கைகளைப் பற்றிப் பிடித்தவாறு கேட்கிறார்.
சில நொடிகள் நாங்கள் இருவரும் தாமதிகின்றோம். என்ன செய்வதென்றே புரியாத பயம். வீதியெங்கும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. துப்பாக்கி, குண்டு. கிரனைட் என்று ஆயுதங்கள் வெடிக்கும் பெரும் சத்தம் உயிரை உறைய வைக்கிறது.
வீதியை விட்டு மேலும் அகல விடாமல் ஜுனைதீனின் வீட்டார் எங்கள் இருவரையும் தடுத்துவிடுகிறார்கள். என்றாலும் பள்ளிக்குள் போய் என்னதான் நடக்கிறது என்பதை பார்த்து விடவேண்டும் என்ற அவசர உணர்வில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு இருவரும் வேறு வீதி ஊடாக சென்று பள்ளியை அடைகிறோம்.
நாங்கள் போய்ச் சேரும் போது பள்ளிக்குள் கொலை வெறியாடிவிட்டு கோழைப் புலிகள் ஓடித் தப்பிவிட்டார்கள்.
பள்ளி வாயல் ஜனாஸாக்களாலும் இரத்த வெள்ளத்தாலும் நிரம்பி இருக்கிறது. அழு குரல்கள் ஓங்கிக் கேட்கின்றன.
நண்பர்கள் ஜவ்பர்கான், ஜுனைதீன் ஆகிய இருவரின் வாப்பா மாரும் உடல் முழுக்க துப்பாக்கி சன்னங்கள் துளைத்த நிலையில் ஷஹீதாகி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
எங்களோடு பள்ளி வாயல் படிக்கட்டில் பேசிக்கொண்டிருந்த அருமை நண்பர் ஆரிபும் ஷஹீதாகி இருக்கிறார்.
பரீனா ராத்தாவின் வீட்டில் எங்களோடு தேனீர் அருந்திவிட்டு அவ்வல் ஜமாஅத்தில் இணைந்து கொள்வதற்காக அவசரமாகச் சென்ற ஜுனைதீனின் நானா அக்பர் படு காயத்தோடு கண்களின் பகுதி சிதைவடைந்த நிலையில் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார்.
" அன்ஸார்....அன்ஸார்....என்னைத் தூக்கு....." என்று மரணத் தறுவாய் முணக்கம் ஒன்று எனக்குப் பின்னால் இருந்து கேட்கிறது. திரும்பிப் பார்க்கிறேன். என்னுடைய மாமா. கால்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களோடு எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார். அவரை தூக்கி எடுத்துக் கொண்டு பள்ளியில் இருந்து வீட்டை நோக்கிச் ஓடுகிறேன்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் புனித ஹஜ்கடமையை முடித்து விட்டு தமது சொந்த ஊரான காத்தான்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்த ஹாஜிமார்களும் அவர்களோடு வந்த உறவினர்களும் இன்னும் சில பொதுமக்களும் குருக்கள்மடத்தில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களில் பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என பலரும் அடங்குகின்றனர். புலிகளே இப்படுகொலைகளைப் புரிந்தமை வெளிப்படையான விடயமாகும்.
இந்தக் கடத்தல் சம்பவம் இன நல்லிணக்கத்திற்கு மோசமான ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருந்த நிலையில் மற்றொரு மிக மோசமான மிலேச்சத்தனமான சம்பவமாக இந்த பள்ளிவாசல் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.
கொடூர சம்பவம் இடம்பெற்ற அன்று வெள்ளிக்கிழமை இரவு புனித இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர் பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத்தாக்குதலையும் நடத்தினர். இதன் போது பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது.புலிகள் பள்ளியினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் தெரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர்.
இச்சம்பவத்தில் குடும்பத் தலைவன் உயிரிழந்ததால் அக்குடும்பமே தமது குடும்பத்தை கொண்டு செல்வதற்கு கஷ்டப்பட்டது. இளம் வயதில் வித​வைகளான பல பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள் என இதில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் பல சோக வரலாறுகள் இருக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து பல மாதங்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற சிலர் இன்றும் ஊனமுற்றவர்களாக இருக்கின்றனர். இன்னும் உடம்பில் குண்டுச் சன்னங்களுடன் வாழும் சிலரும் இருக்கின்றனர்.
இக் குண்டுத் தாக்குதலில் ஊனமுற்று வாழும் மற்றும் ஒருவர் அன்றைய சம்பவம் குறித்து இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.
"1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி எனது தாயைப் பார்ப்பதற்காக நான் தாயின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிந்திருந்தது. 58 நாட்கள் நிரம்பிய குழந்தையும் எனக்கிருந்தது.
அப்போது பள்ளிவாசலில் தொழுக்காக அதான் சொல்லப்பட்டு தொழுகை ஆரம்பமாகிய போது எனது தாய் 'தொழுகை ஆரம்பமாகி விட்டது அவசரமாக பள்ளிக்கு சென்று தொழுது விட்டு வாருங்கள்' என என்னை அனுப்பினார்.
அப் போது நான் மீரா ஜும்ஆப்பள்ளிவாசலுக்கு வந்தேன். பள்ளிவாசலின் முன்வளவில் எனக்கு தெரிந்த ஒரு நண்பர் நின்று கொண்டிருந்தார். நானும் அவரும் அவ்விடத்தில் பேசிக்கொண்டு நின்றபோது அந்த வீதியினால் ஆயுதம் தரித்த சிலர் வரிசையாக வருவதைக் கண்டேன்.
அச்சம் அடைந்த நாங்கள் அவசரமாக வுழூ செய்து கொண்டு பள்ளிக்குச் சென்று தொழுகையில் இணைந்து சுஜூது செய்யும் போது பாரிய குண்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
தொழுகையில் இருந்த பலர் சரிந்து விழுவதைக் கண்டேன். நானும் காயங்களுடன் விழுந்து விட்டேன். எனது வயிற்றுப் பகுதியில் சிறுவன் ஒருவனும் விழுந்து கிடந்ததை கண்டேன்.
சில நிமிடங்களின் பின்னர் நான் உட்பட பலத்த காயப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டோம்.
பின்னர் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டோம். அங்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டு பல மாதங்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று இன்று ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகின்றோம்.
இந்த சம்பவத்திற்கு முன்னர் சுயமாக தொழிலில் ஈடுபட்டு தொழிலில் முன்னேற்றமாக காணப்பட்ட என்னைப் போன்றவர்கள் இன்று தொழில் எதுவும் செய்ய முடியாதவனாக இருக்கின்றோம்" என்று தெரிவிக்கிறார்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என்பது இலங்கைவாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.
இந்த இரண்டு பள்ளிவாசல்களிலும் இன்றும் இதன் அடையாளங்கள் அழிக்கப்படாமல் இருக்கின்றன. ஆண்டு தோறும் ஆகஸ்ட் 3ஆம் திகதி ஷுஹதாக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த கால யுத்தம் இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் என அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது. இதில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கு இந்த பள்ளிவாசல்களில் இடம்பெற்ற இப் படுகொலைச் சம்பவமும் ஒரு மிகப் பெரிய சான்றாகும்.
- ஏ.எல்.ஜுனைதீன்