அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடைகிறதா?
ரிசாத் இன்று புதிய கட்சியின் பெயரை அறிவிப்பாரா?

மூத்த போராளி.


2016.01.17 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று குருணாகலில் அமைச்சர் ரிசாத் பத்யுதீன் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு இடம்பெறவுள்ள சூழ்நிலையில் குறித்த கேள்விகள் தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாக தற்போது இலங்கை அரசியலில் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கட்சி யாப்பின் சரத்துக்களை மீறி ஒரு போலியான பேராளர் மாநாடு ஒன்றைக் கூட்ட முற்படுகின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் அவர்கள் நேற்று முன்தினம் குற்றம் சாட்டி உள்ளமை இவ்விடத்தில் கவனிக்கத்தக்கது.
அத்துடன் கட்சியின் யாப்பை மீறுகின்றவர்களுக்கு எதிராகவும், அதற்குத் துணை போகின்றவர்களுக்கு எதிராகவும் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை மிகவும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளமையானது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு திட்டமிட்டபடி இன்று குருணாகலில் நடைபெறுமாயின் கட்சி பிளவுபடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றே தோன்றுகின்றது.
பேராளர் மாநாட்டிற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெறுகிறது. கட்சியின் போராளிகள் நாட்டின் சகல பிரதேசங்களில் இருந்துவந்து கலந்து கொள்வார்கள். எமது கட்சிக்கு துரோகம் செய்தவர்களின் அறிக்கைக்கு அல்லது மக்களினால் நிராகரிக்கப்பட்டவர்களின் குதர்க்கங்களுக்கு இல்லையேல் எமது கட்சியின் தலைமையின் உத்தரவை மீறிச் செயற்பட்டவர்களுக்கு பதில் வழங்கிக் கொண்டிருக்க நாம் தயாரில்லை என பிரதி அமைச்சர் அமீர்அலி உறுதிபட தெரிவித்துள்ளமையானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்கும் அதிகாரப்போட்டி உச்சமடைந்துள்ளதை வெளிச்சம் போட்டு மக்களுக்கு தெளிவாக பறைசாற்றியுள்ளது.
"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்" ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு என்பதை விளக்கும் நமது பண்டைய பெரியோர்களின் அனுபவ மொழி இது. ஒருவன் எதை விதைக்கிறாரோ அதுவே விளையும். அமைச்சர் ரிசாத் கடந்த பல ஆண்டுகளாக துரோகத்தையே விதைத்துப் பழகியவர். அதன் காரணமாக தற்போது அவருக்கு துரோகமே பெரு விளைச்சலாக கிடைக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தனது ஆட்சிக்காலத்தில் இலங்கையிலுள்ள பல கட்சிகளை தனது சதித் திட்டங்கள் மூலம் சுக்கு நூறாக பிளவடைச் செய்து அதில் மிகப்பெரிய வெற்றியும் கண்டார். அவரின் ஆட்சிக்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்குரலாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிளவடையச் செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஸவிற்கு அமைச்சர் ரிசாத் துணை போனமையை இந்நாடே அறியும். இறுதியில் என்ன நடந்தது பல கட்சிகளை உடைத்த மஹிந்த ராஜபக்ஸவின் கூடாரத்திற்குள்ளேயே இருந்த மைத்ரி மூலம் ஸ்ரீலங்கா சுகந்திர கட்சி பிளவுபட்டு மஹிந்த அதிகாரத்திலிருந்து நாட்டு மக்கள் மூலம் தூக்கி எறியப்பட்டார். மைத்திரி நாட்டு ஜனாதிபதியானார். இது உண்மை வரலாறு.
அதிகார மமதையிலிருந்த மஹிந்த ராஜபக்ஸவிற்கு நடந்த சம்பவத்திலிருந்து அமைச்சர் ரிசாத் படிப்பினை பெறாமையானது அவரின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய சறுக்கலை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இது இவ்வாறு இருக்க "நக்குண்டார் நாவிழந்தார்" வம்சத்தை ஒருவர் தனது முகப்புத்தகத்தில் "அணியும் செருப்பு சிறியது என்பதற்காக கால் கட்டை என்று கவலைப்படுவதா" என தலைப்பிட்டு ஆக்கம் ஒன்றை பிரசுரித்துள்ளார். இதன் சாராம்சமானது பிரச்சினையை பேசித்தீர்க்க வேண்டுமாம். காய்ச்சலும், தலையிடியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்.
இப்போது ரிசாத்திட்கு துரோகத்தின் வலி என்னவென்று புரிந்திருக்கும். உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை மீற முடியாது அல்லவா ? இதேநேரம் கிழக்கிலங்கையை சேர்ந்த முக்கிய ஆரம்பகால கட்சி பிரபலங்களான கட்சியின் செயலாளர் நாயகம், பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் மற்றும் சுபைர் ஆகியோர் கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்று மாநாடு நடைபெருவதற்கு ஒப்பான பிரச்சினை முன்பும் நடைபெற்றது. கட்சியின் யாப்பை மீறி கூட்டம் நடாத்துவதற்கு உரியகோரம்இல்லாமல் கட்சியின் அதி உயர்பீட அங்கத்தவர்கள் அல்லாதவர்களை கொண்டுவந்து கையொப்பம் வைக்க வைத்து, தேர்தல் ஆணையாளருக்கு அமைச்சர் ரிசாத் போலியாக கடிதம் எழுதியிருந்தமை தேர்தல் ஆணையாளருக்கு தெரிய வந்த போது, தேர்தல் ஆணையாளரிடம் முறையாக வாங்கிக்கட்டி மூக்குடைபட்டதும் நாம் மறந்து விடவில்லை.
மேலும் பேராளர் மாநாடு நடைபெறும் மாவட்டத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் வென்று தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளமை இவ்விடத்தில் சில சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ரிசாத் அமைச்சர் ஊடாக முஸ்லிம்களின் ஆதரவை பெற்று மீண்டும் மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர திட்டம் உள்ளதாகவும், பசில் ராஜபக்ச மற்றும் அமைச்சர் ரிசாத் அவர்களுக்கிடையில் இரகசிய புரிந்துணர்வு பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் மத்தியில் பேச்சுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருப்பினும் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அமைச்சர் ரிசாத்தை நீக்குவாரா வை.எல்.எஸ்?ரிசாத் இன்று புதிய கட்சியின் பெயரை அறிவிப்பாரா? அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உடைகிறதா? என்ற கேள்விகளுக்கான விடைகள் இன்னும் ஓரிரு தினங்களுக்குள் தெரியவரும்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top