வவுனியா வைத்தியசாலையில் அவசர விபத்துகள் பிரிவு
மக்கள் பயன்பாட்டிற்காக இன்று கையளிப்பு
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று கையளித்தார்.
இரண்டாவது சுகாதாரத்துறை மேம்பாட்டு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் குறித்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று (14) பிற்பகல் 3.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன், இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவுக்கான அடிக்கலையும் நட்டு வைத்தனர்.
குறித்த இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவு, நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியமர்த்துதல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன், நெதர்லாந்து நாட்டின் துணைத் தூதுவர் ஈவா வான் வுர்சம், வவுனியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரன், வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதி, பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் பல அரசாங்க அதிகாரிகள், அரசியல்வாதிகள், வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.



0 comments:
Post a Comment