Saturday, May 31, 2014

இடைநீக்கம் செய்யப்பட்ட டில்லி பல்கலைக்கழக அலுவலர்களுக்கு மீண்டும் பணி: அமைச்சர் ஸ்மிருதி இரானி கோரிக்கை

இடைநீக்கம் செய்யப்பட்ட டில்லி பல்கலைக்கழக

அலுவலர்களுக்கு மீண்டும் பணி:

அமைச்சர் ஸ்மிருதி இரானி கோரிக்கை

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டில்லி பல்கலைக்கழக அலுவலர்கள் 5 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று அதன் துணை வேந்தருக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கோரிக்கை விடுத்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி குறித்த விவரத்தை கசியவிட்டதாககூறி டில்லிப் பல்கலைக்கழக அலுவலர்கள் ஐந்து பேரை பல்கலைக்கழ நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், அலுவலர்கள் பணியிடை நீக்கத்திற்கான காரணத்தை வெளிப்படையாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து டுவிட்டர் சமூக வலைப்பக்கத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், "ஸ்மிருதி இரானியின் கல்வித்தகுதி வெளியிட்டதாக கூறி டில்லிப் பல்கலைக்கழக அலுவலர்கள் 5 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதான் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் வெளிப்படைத்தன்மையா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தமது டுவிட்டர் சமூக வலைப்பக்கத்தில் நேற்று சனிக்கிழமை மேற்கொண்ட பதிவில், "பொது வாழ்வில் ஈடுபடுவோர் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது அவசியம். அந்த வகையில் எனது கல்வித் தகுதி குறித்த தகவல் வெளியானதில் தவறு ஏதும் இல்லை. டில்லிப் பல்கலைக்கழகம் தன்னாட்சிபெற்ற கல்வி நிலையமாகும். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று டில்லிப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நான் வலியுறுத்தியுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மிருதி இரானியின் இக்கருத்தை டில்லிப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
முன்னதாக, "கடந்த ஆண்டு டில்லிப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.. படிப்புக்கு ஸ்மிருதி இரானி விண்ணப்பித்திருந்தார்.
எனினும், அவர் எந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை' என்ற தகவலை கசியவிட்டதாக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

அலுவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்படவில்லை:

-துணை வேந்தர்

ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி விவகாரத்தை கசியவிட்டதாக டில்லி பல்கலைக்கழக திறந்தவெளி கல்வி மையத்தைச் சேர்ந்த 5 அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தினேஷ் சிங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து துணைவேந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
"டில்லி பல்கலைக்கழக திறந்தவெளி கல்வி மையத்தைச் சேர்ந்த 5 அலுவலர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் தவறானது. பல்கலைக்கழகம் சார்பில் எந்த ஊழியரையும் பணியிடைநீக்கம் செய்யவில்லை. அதே போல, திறந்தவெளி கல்வி மையத்தில் படிப்பவரின் விவரம் வெளியானதாகக் கூறப்படும் தகவலும் தவறானது. திறந்தவெளி கல்வி மையம் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது. எனவே, இச்செய்திகளுக்கு டில்லி பல்கலைக்கழகம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் திறந்தவெளி கல்வி மையத்தில் நிகழாமல் இருக்கும் என்று டில்லிப் பல்கலைக்கழகம் உறுதி அளிக்கிறது'' என்று அச்செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


No comments:

Post a Comment