Sunday, November 2, 2014

பாகிஸ்தான் எல்லையில் தற்கொலைத் தாக்குதல் 55 பேர் பலி!



பாகிஸ்தான் எல்லையில் தற்கொலைத் தாக்குதல்

55 பேர் பலி!

பாகிஸ்தான் வாகா எல்லையில் மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 55 பேர் உடல் சிதறி பலியாயினர். இந்தியா, பாகிஸ்தான் இடையே சாலை வழி எல்லையான வாகா பகுதியில் தினமும் இரு நாட்டு வீரர்களும் மாலை 6 மணி அளவில் தேசியக் கொடியை இறக்குவது வழக்கம்.
நேற்று இந்நிகழ்ச்சி முடிவடைந்த சிறிது நேரத்தில், பாகிஸ்தான் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர வெடிகுண்டு வெடித்தது. அப்பகுதியில் இருந்த குழந்தைகள், பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 55 பேர் உடல் சிதறி பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் இருந்த கடைகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. உடனடியாக, பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து மீட்புபணியில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாகூரில் உள்ள அனைத்து மருத்துவமனையிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக வந்து இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் வந்த செய்தியின்படி இந்தத் தாக்குதலுக்கு, பெஷாவரில் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஆண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தி 78 பேரைக் கொன்ற அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஜந்துல்லா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வசிரிஸ்தான், ஜார்ப்--அஜப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
20 வயது இளைஞர் ஒருவர், 25 கிலோ வரை வெடி பொருள்களை தனது உடலில் கட்டிவந்து வெடிக்கச் செய்ததும் தெரிய வந்துள்ளது

வாகாவில் நடந்துள்ள இச்சம்பவம் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

தற்கொலைத் தாக்குதலில் காயமடைந்த சிறுமி.

No comments:

Post a Comment