Saturday, November 29, 2014

பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ சுட்டுக்கொலை



பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர்

காலித் மக்மூத் சூம்ரோ சுட்டுக்கொலை


பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஜாமியத் உலமா இஸ்லாம் (பாஜி) கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் டாக்டர் காலித் மக்மூத் சூம்ரோ. சிந்து மாகாணத்தின், லர்கானா பகுதியை சேர்ந்த இவர், 2006-12 காலகட்டத்தில் பாகிஸ்தான் பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். சன்னி பிரிவின் முக்கிய தலைவராகவும் விளங்கினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கராச்சியில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள சுக்குர் என்ற இடத்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் அங்குள்ள மசூதி ஒன்றுக்கு சென்று தொழுகை நடத்தி முடித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த மசூதி வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 2 ஆசாமிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து தப்பிவிட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் குறித்து, அந்த பகுதியின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தன்வீர் ஹுஸைன், செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், “ஆயுதம் தாங்கிய 2 ஆசாமிகள் மசூதி வளாகத்துக்குள் புகுந்து, 11 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் 4 குண்டுகள் காலித் சூம்ரோவை தாக்கி உள்ளன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார்என்று தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment