Friday, February 27, 2015

மருதானை டீன்ஸ் வீதி சுப்பர் மார்க்கட்டின் அவலநிலை அரசியல்வாதிகளே! இது உங்களின் கவனத்துக்கு

மருதானை டீன்ஸ் வீதி சுப்பர் மார்க்கட்டின் அவலநிலை
அரசியல்வாதிகளே! இது உங்களின் கவனத்துக்கு



கொழும்பு மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள சுப்பர் மார்க்கட்டின் அவல நிலை குறித்து பொது மக்களும் அங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில்  தற்போது அமைச்சராக இருக்கும் கருஜயசூரிய அவர்கள் கொழும்பு மேயராக இருந்த போது  சிறிசேன குரே அவர்களால் இச் சுப்பர் மார்க்கட் திறந்து வைக்கப்பட்டதாக அங்கிருக்கும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பல வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்ட இம்மார்க்கட் தற்போது சரியான பராமரிப்பின்றி அழிந்து போகின்ற நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக மக்களால் குறை தெரிவிக்கப்படுகின்றது.
இம்மார்க்கட் சரியான அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக காகங்கள் மார்க்கட்டுக்குள் கூட்டம் கூட்டமாக பறந்து வந்து அங்குள்ள அனைத்து இடங்களிலும் தங்கி அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இது மாத்திரமல்லாமல் கட்டாக்காலி நாய்களும் பூனைகளும் இம்மார்க்கட்டுக்குள்ளேயே உட்புகுந்து அங்குள்ள கோழிக் கழிவுகளை உண்பதையும் கலாட்டா செய்து கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
இம்மார்க்கட்டில் உள்ள கட்டடங்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் கம்பிகள் துருப்பிடித்து அழிந்து கொண்டிருக்கின்றன. சுவர்கள் எல்லாம் அழுக்குப் பிடித்து கறுத்துப் போய் உள்ளன. துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு இடமாக இந்த சுப்பர் மார்க்கட் மாறியிருக்கின்றது
எல்லாவத்திற்கும் மேலாக இச்சுப்பர் மார்க்கட்டை மக்கள் எளிதில் கண்டுகொள்வதற்கு வசதியாக  பெயர் பலகை கூட இங்கு வைக்கப்படவில்லை.

கொழும்பு மாநகர சபை மேயர் அல் – ஹாஜ் முஸம்மில், ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர்களான மரிக்கார், முஜிபுர்ரஹ்மான். பைரூஸ் ஹாஜியார் ஆகியோர் இச்சுப்பர் மார்க்கட்டை நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment