Wednesday, April 29, 2015

நேபாள பூகம்பத்தில் இடிபாடுகளில் இருந்து 5,500 உடல்கள் மீட்பு

நேபாள பூகம்பத்தில்
இடிபாடுகளில் இருந்து 5,500 உடல்கள் மீட்பு

நேபாள பூகம்பத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, இரவு பகலாக நடந்து வருகிறது. பூகம்பத்தில் உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டும் என்று, பிரதமர் சுஷில் கொய்ராலா அறிவித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று வரைக்கும் இடிபாடுகளுக்குள்  இருந்து 5,500  சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. மீட்பு பணி இன்னும் முடிவடையாததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று  கருதப்படுகிறது.
இதற்கிடையே, உரிய நிவாரண பொருட்கள் வழங்கப்படாததால், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த பொதுமக்கள்  போராட்டத்தில் குதித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டதுடன், சில இடங்களில் தண்ணீர் பாட்டில்களையும், உணவு பொருட்களையும்  சூறையாடினர் எனவும் கூறப்படுகின்றது.
நிலநடுக்கம் குறித்து, பஸ்லாங் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், போஜ் குமார் தபா கூறுகையில், “நான் வீட்டுக்கு வந்தபோது, அங்கு  எதுவுமே இல்லை. கர்ப்பிணியான என் மனைவியும், 5 வயது மகளும் இறந்து கிடந்தனர். மீட்பு பணியை மேற்கொள்ள அரசு தரப்பில் இருந்து எவருமே  வரவில்லை. பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள்தான், இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்என்று தெரிவித்துள்ளார்.
காத்மாண்டுவை சேர்ந்த ரிஷிகாந்த் (28) என்பவர், கடந்த சனிக்கிழமை பூகம்ப இடிபாடுக்குள் சிக்கிக் கொண்டார். அவ்வப்போது அவர் அபயக்குரல்  எழுப்பினார். அது யாருடைய காதுக்கும் எட்டவில்லை. உண்பதற்கோ, குடிப்பதற்கோ எதுவும் கிடைக்காததால், தனது சிறுநீரைக் குடித்து, இரவு பகலை  கழித்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம், மீட்பு படையினர் அவரை கண்டுகொண்டனர். 5 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அவரை மீட்டனர்.  

நேபாளத்தில் உள்ள 75 மாவட்டங்களில் 39 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரம் வீடுகள்  முழுவதுமாகவும், 5,30,000 வீடுகள் பகுதிகளாகவும் சேதம் அடைந்துள்ளன. லட்சக்கணக்கான மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி பரிதவித்து வருகிறார்கள்  என்று, ஐநா சபை கூறியுள்ளது.



No comments:

Post a Comment