Wednesday, April 1, 2015

நிந்தவூர் பற்றி ஒரு பார்வை

நிந்தவூர் பற்றி ஒரு பார்வை

முஹம்மட் ஜெலீல்


நிந்தவூர் கிராமமானது அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தின் கல்முனை நகரத்திற்கு தெற்கே 8 கி. மீ. தூரத்தில் அமையப்பெற்றுள்ள கிராமமாகும். இதன் எல்லைகளாக வடக்கே வெட்டாறும் தெற்கே கழியோடை ஆறும் கிழக்கே இந்து சமுத்திர கடற்பரப்பும் மேற்கே வயல் நிலங்களோடு இணைந்ததாக சம்மாந்துறை பிரதேசமும் காணப்படுகிறது. நிந்தவூர் பிரதேசத்தின் மொத்தப் பரப்பு 40.031 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும்.
நிருவாகப் பிரதேசமாகப் பார்க்கும் பொழுது, நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவானது 25 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் 2010 / 2012ற்கான அண்மைய சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் 30,645 பேர்களை மொத்தச் சனத்தொகையாகக் கொண்டுள்ளது. நிந்தவூரானது பொத்துவில் தொகுதியிலும் திகாமடுள்ள தேர்தல் மாவட்டத்திலும் அமையப் பெற்றுள்ளது.
இக்கிராமமானது இயற்கை எழில்களினாலும், பச்சை நிற வயல் நிலங்கள், தென்னந் தோப்புகள், குடியிருப்புகள் மற்றும் சிறு கைத்தொழில் சாலைகளினாலும் சூழப்பட்ட அழகிய கிராமமாகும். இக்கிராம மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். அத்துடன் விவசாயத்தோடு இணைந்ததாக மீன்பிடி, சிறு கைத்தொழில் போன்ற வாழ்வாதார துறைகளில் தொழில் புரிபவர்களும் கூடுதலாக காணப்படுவதோடு இவர்கள் இக்கிராமத்தின் முன்னேற்றத்திற்காக தங்களது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர்.
நிந்தவூரில் பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என பல காணப்படுகின்றன. அவையாவன: பிரதேச செயலகம், பிரதேச சபை, மாவட்ட வைத்தியசால, மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை, தாய் சேய் பராமரிப்பு நியைம், பிரதேச கல்விக் காரியாலயம், பாடசாலைகள், அரபிக் கல்லூரி, விவசாய விஸ்தரிப்பு நிலையம், அரச மற்றும் தனியார் வங்கிகள், பிரதான மற்றும் உப தபால் அலுவலகங்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலயம், மின்சார சபை உப காரியாலயம், தொலைத் தொடர்பு பரிவர்த்தனை உப அலுவலகம் மற்றும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், தனியார் சர்வதேச பாடசாலை, நெசவு நிலையம், சமுர்த்தி வங்கிகள் போன்ற இன்னோரன்ன நிறுவனங்களும் காணப்படுவதோடு இவைகள் மூலமாக இக்கிராமம் நற்பெயர் பெற்றுக் கொண்டிருக்கின்றது.


No comments:

Post a Comment