Tuesday, October 27, 2015

பாகிஸ்தான், ஆப்கன் நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 340-ஆக அதிகரிப்பு (படங்கள் இணைப்பு)

பாகிஸ்தான், ஆப்கன் நிலநடுக்கம்
பலி எண்ணிக்கை 340-ஆக அதிகரிப்பு

(படங்கள் இணைப்பு)

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 340-க்கும் மேலாக அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
 பாகிஸ்தானில் பலியானோர் எண்ணிக்கை 250-ஆக அதிகரித்தது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அதிக அளவு உயிரிழப்பு நேரிட்டது. அங்கு 214 பேர் பலியானதாக மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 நிலநடுக்கத்தால் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
 பிற்பகல் 2.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் 7 பின்னதிர்வுகள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
 வீடுகளுக்குள் இருக்க அஞ்சிய ஆயிரக்கணக்கானோரும், தங்களது இருப்பிடங்களை இழந்தோரும் இரவு முழுவதும் வெட்டவெளியில் கடும் குளிரில் உறங்கினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சித்ரால் மாவட்டப் பகுதியில் பொதுமக்களுக்கு 2,000 கூடாரங்கள், போர்வைகள், தரை விரிப்புகள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 நிலநடுக்க பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பாகிஸ்தான் ராணுவம் பல மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது.
 நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால், ராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காரகோரம் பகுதி முடக்கப்பட்டுள்ளது.
 45 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 27 இடங்களை ராணுவ வீரர்கள் சரி செய்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் ராணுவ மருத்துவமனைகளில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது.
 பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவே மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்று புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90-க்கும் மேல் அதிகரித்தது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 ஆப்கானிஸ்தானின் வட கிழக்கில் உள்ள படாக்ஷான் மாகாணம், ஜுர்ம் என்ற இடத்தில், பூமிக்கு 213.5 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.




















No comments:

Post a Comment