Thursday, October 1, 2015

மாட்டிறைச்சி வதந்தியால் முதியவர் அடித்துக் கொல்லப்பட்டது ஒரு விபத்து இந்திய மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை

மாட்டிறைச்சி வதந்தியால் முதியவர்
அடித்துக் கொல்லப்பட்டது ஒரு விபத்து

இந்திய மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை

இந்திய உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி பகுதியில், பசு மாட்டைக் கொன்றதாகக் கூறி, இந்து மத கும்பலால் தாக்கப்பட்டதில், 50 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் இந்தியாவில் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதை ஒரு விபத்து என்று அந்நாட்டு மத்திய மந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
தாத்ரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு குடும்பத்தினர் பசு மாட்டைக் கொன்று சமைத்து சாப்பிட்டதாக செய்தி பரவியது. இதனால், ஆத்திரமடைந்த இந்து மத கும்பல், திடீரென வன்முறையில் இறங்கியது. அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் நுழைந்த இந்த கும்பல், பசுவை கொன்று சாப்பிட்டதாக கூறி அந்த குடும்பத் தலைவர் இக்லாக் மற்றும் அவரது மகன் டானிஷை வெளியில் இழுத்துப் போட்டு சரமாரியாக தாக்கியது. இதில், இக்லா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
இந்நிலையில் இதுதொடர்பாக, டில்லியில் நேற்று மத்திய கலாச்சார மந்திரி மகேஷ் சர்மா பேசுகையில், “உயிரிழந்த இக்லாக் என்ற முதியவரின் குடும்பம், தாத்ரி கிராமத்தில் வசித்து வருகிறது. வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த கிராமத்துக்கு வெளியே வசித்து வருகின்றனர். அவர்களிடையே இதற்கு முன்பு மோதல் ஏதும் நடைபெறவில்லை. இந்த சம்பவம் ஒரு விபத்து, இதற்கு மதசாயம் பூச வேண்டாம்.” என்று கூறியுள்ளார்.
இவரது இந்தப் பேச்சுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு விபத்து எனக் கூறிய மந்திரி மகேஷ் சர்மாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. மனிதத் தன்மையற்ற கருத்தை மகேஷ் சர்மா தெரிவித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டவரின் மகள்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்

No comments:

Post a Comment