Saturday, February 27, 2016

ஆப்கன் சிறுவனுக்கு கையெழுத்திட்ட சட்டைகளை அனுப்பினார் மெஸ்ஸி

ஆப்கன் சிறுவனுக்கு கையெழுத்திட்ட

சட்டைகளை அனுப்பினார் மெஸ்ஸி

ஆப்கானிஸ்தான் சிறுவன் அஹமதிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட சட்டைகளையும், கால்பந்தையும் அனுப்பியுள்ளார்.
கால்பந்து விளையாட்டில் சிறுவன் அஹமதிக்கு அதிக ஆர்வம். ஆர்வ மிகுதியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையில் உள்ள வடிவத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பையை ஆப்கன் சிறுவன் முர்தசா அஹமதி அணிந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் இணையவாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இது மெஸ்ஸிக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில், ஆப்கன் சிறுவன் அஹமதிக்கு, மெஸ்ஸி தான் கையெழுத்திட்ட மேல்சட்டைகளை அனுப்பியிருக்கிறார். அந்தச் சட்டையுடன் ஒரு கால்பந்தையும் அனுப்பியுள்ளார். அது காபுல் கால்பந்து கூட்டமைப்பு அலுவலகத்தில் உள்ளது.
மெஸ்ஸி அனுப்பிய சட்டையுடன் அஹமதி இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
இதற்கிடையில், சிறுவனை எப்படியாவது மெஸ்ஸியை சந்திக்க வைக்க வேண்டும் என அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



இது தொடர்பாக (Feb 2, 2016)  மக்கள் விருப்பம் பதிவேற்றியிருந்த செய்தி

தனது பெயர் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பையை அணிந்திருந்த
5 வயது ஆப்கான் சிறுவனை சந்திக்க விரும்பும் மெஸ்சி

ஆப்கானிஸ்தானில் இரண்டு விளையாட்டுக்கள்தான் பிரபலம். ஒன்று கிரிக்கெட், இன்னொன்று கால்பந்து.
காபூல் அருகில் இருக்கும் காஸ்னி மாகாணத்தை சேர்ந்தவன் 5 வயது ஏழை சிறுவன் மூர்த்தாசா அஹ்மதி. இவனுக்கு அர்ஜென்டினாவை சேர்ந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்சி என்றால் உயிர். இவனது 15 வயது சகோதரனும் கால்பந்து ரசிகன்தான்.
மூர்த்தாசா அஹ்மதிக்கு அவனது சகோதரன் மளிகை பொருட்கள் வாங்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பையை கால்பந்து ஜெர்சியை போல் மாற்றி அணிவித்துள்ளான். மேலும் பிளாஸ்டிக் பை மீது, ’மெஸ்சி 10’ என்று மார்கர் பேனாவால் எழுதியுள்ளான். இந்த ஜெர்சியை அணிந்திருக்கும் தம்பியை புகைப்படம் எடுத்து கடந்த மாதம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளான்.
விளையாட்டாக எடுக்கப்பட்ட இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் இருந்த கால்பந்து ரசிகர்களின் இதயங்களை நொறுங்கச் செய்யும் புகைப்படமாக மாறியது. தற்போது அது மெஸ்ஸியையும் எட்டியுள்ளது. அந்த போட்டோவை பார்த்து நெகிழ்ந்து போன மெஸ்சி, சிறுவன் மூர்த்தாசா அஹ்மதியை சந்திக்க விரும்புவதாக ஆப்கான் கால்பந்து சங்கத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்த இன்ப அதிர்ச்சியால் திக்குமுக்காடிப் போய் உள்ள ஆப்கான் கால்பந்து சங்கத்தினர், எங்கு, எப்போது சந்திப்பை வைத்துக்கொள்வது என்பது பற்றி மெஸ்சியுடன் பேசிவருகிறார்கள்.

மூர்த்தாசா அஹ்மதியின் தந்தை தன்னால் மகனுக்கு புதிய ஜெர்சி வாங்கி கொடுக்க முடியவில்லை என்றும், தற்போது அவன் வைத்து விளையாடிவரும் கால்பந்து கூட பஞ்சர் ஆனதுதான் என்றும் கூறியுள்ளார்.





கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தில் உதவி முகாமையாளரான பெண் வெட்டிக் கொலை!

கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தில்

 பெண் வெட்டிக் கொலை!

கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள சர்வோதய அபிவிருத்தி நிதிக் கம்பனியின் உதவி முகாமையாளரான பெண்ணொருவர் இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று 27 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் 2.30 மணிக்குமிடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
குளோரி வீதி நற்பிட்டிமுனை, கல்முனையைச் சேர்ந்த ராஜேஸ்வரன் சுலக்ஸனா (வயது 33) என்ற தாய் ஒருவரே இவ்வாறு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வழமை போன்று இன்று காரியாலயத்துக்கு சென்று கடமையாற்றிக் கொண்டிருக்கும் போதே இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவருடன் கடமையிலிருந்த மற்றொரு வெளிக்கள உத்தியோகத்தர் பகல் உணவுக்காக வெளியில் சென்று மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது இந்த உதவி முகாமையாளர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.









கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள அரசியல்வாதிகளின் தயவை நாடும் அனுர சேனநாயக்க? சிங்கள இணையத்தளம் தெரிவிப்பு

கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ள

அரசியல்வாதிகளின் தயவை நாடும் அனுர சேனநாயக்க?

சிங்கள இணையத்தளம் தெரிவிப்பு


முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகளின் தயவைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் என. சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் நிசாந்த பீரிஸ் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இக்கொலையை மறைத்து அதனை விபத்து மரணமாக சித்தரிப்பதில் பெரும் பங்காற்றிய முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவும் இதன் மூலம் கைது செய்யப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது..
இதனையடுத்து அவர் தான் கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் அரசியல்வாதிகளின் தயவைப் பெற்றுக் கொள்ளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அந்த  சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து தன் மீது கருணைப் பார்வையை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் மன்றாடிவருவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜிதவுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரின் புதல்வரும், எம்.பியுமான சதுர சேனாரத்ன ஊடகங்களுக்கு தெரிவிப்பு!

அமைச்சர் ராஜிதவுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக

அமைச்சரின் புதல்வரும், எம்.பியுமான சதுர சேனாரத்ன

ஊடகங்களுக்கு தெரிவிப்பு!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நேற்று இருதய அடைப்பை நீக்கும் சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன இருதயத்துக்கு குருதியை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சுகவீனமுற்றிருந்தார்.
இதனையடுத்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அமைச்சர் ராஜிதவுக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் ராஜிதவின் சத்திரசிகிச்சை நேற்று காலை மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை அமைச்சரின் மூத்த புதல்வனும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சையின் பின்னர் அமைச்சரின் உடல்நிலை விரைவில் தேறிவிடும் என்றும் இரண்டொரு வாரங்களில் அவர் நாடுதிரும்பக் கூடியதாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன  மேலும் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியை பார்த்தபடி இறந்தபோன பெண்! சடலமாக 42 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!!

தொலைக்காட்சியை பார்த்தபடி இறந்தபோன பெண்!

சடலமாக 42 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!!

தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் அமர்ந்தபடி இருந்த பெண்ணின் சடலம் 42 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட சம்பவம் ஓன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான க்ரோஷியாவின் தலைநகர் ஜாக்ரிப்பில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து தெரியவருவதாவது,
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு  வீடு பல ஆண்டுகளாக பூட்டியப்ப கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த வீட்டை திறந்துப்பார்க்க மற்ற குடியிருப்புவாசிகள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து வீட்டை திறந்தபோது தொலைக்காட்சியின் முன் அமர்ந்தபடி ஒரு பெண்ணின் சடலத்தை பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிஸுக்கு தகவல் அளித்துள்ளனர்.
சடலத்தை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் மேற்கொண்ட விசாரணையில் இறந்துகிடந்த பெண்ணின் பெயர் ஹெட்விக்கா கோலிக் என்பதும் கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது.
அண்டைவீட்டினரும் அப்பெண் வேறு வீட்டுக்கு மாறி சென்று விட்டாக நினைத்துள்ளனர். அதனால் அவர் குறித்து யாரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையாம்.

இந்நிலையில் நான்கு சாப்தங்களுக்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Friday, February 26, 2016

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு அருகில் தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு அருகில்
தற்கொலை படை தாக்குதல்: 11 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளுநர் மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டு இராணுவக் கமாண்டர் (Afghan militia commander) உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 40 பேர் படுகாயம் அடைஹ்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் உள்ள ஆசதாபாத் என்ற நகரில் ஆளுநரின் மாளிகை அமைந்துள்ளது.
இந்த மாளிகைக்கு அருகில் சற்று முன்னர் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தற்கொலை படை தாக்குதலாக கருதப்படும் இந்த சம்பவத்தில் 11பேர் வரை பலியாகியுள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் அப்பாவி மக்கள் பலத்த காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

எனினும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஒரே கரு முட்டையில் பிறந்த கறுப்பு–வெள்ளை நிற இரட்டை குழந்தைகள் அறிவியலில் ஏற்பட்டிருக்கும் அதிசயம்!

ஒரே கரு முட்டையில் பிறந்த
கறுப்புவெள்ளை நிற இரட்டை குழந்தைகள்

அறிவியலில் ஏற்பட்டிருக்கும் அதிசயம்!


இங்கிலாந்தின் முதல் கறுப்பு மற்றும் வெள்ளை நிற இரட்டையர்கள் என்ற பெருமையை அமெலியா, ஜாஸ்மின் என்ற ஒரு வயது பெண் குழந்தைகள்  பெற்றுள்ளனர். இது அறிவியலில் ஏற்பட்டிருக்கும் அதிசயம் எனக் கருதப்படுகின்றது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் லிப்பி ஆப்பிள்பி  வயது(37). இவருக்கு கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் துர்காம் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2 குழந்தைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தன.
ஆனால் பிறந்த இரட்டையரில் ஒரு குழந்தை கறுப்பு நிறத்திலும், மற்றொரு குழந்தை வெள்ளை நிறத்திலும் இருந்தன. தோல் மட்டுமின்றி கண்களின் நிறமும் இருவருக்கும் மாறுபட்டு இருந்தது.
இதனால் டாக்டர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இந்த இரட்டை குழந்தைகள் ஒரே கருமுட்டையில் பிறந்துள்ளன. இக்குழந்தைகளின் தாய் லிப்பியும், தந்தை தபாட்ஷ்வா மட்ஷிம் பமுடோவும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்.
அப்படி இருக்கும் போது ஒரே கரு முட்டையில் உருவான குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் பிறந்து இருப்பது அறிவியலில் நடந்த அதிசயமாக கருதப்படுகிறது.

நச்சுக் கொடியை ஆய்வு செய்ததில் இந்த இரட்டை குழந்தைகள் ஒரே உயிரணுவில் பிறந்தவை அல்ல என்றும், 100 சதவீதம் அடையாளம் காணக் கூடிய இரட்டையர்கள் என்றும் தெரிய வந்தது. கரு முட்டை வளர்ச்சியின் போது ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக உடல் மற்றும் கண்களின் நிறம் மாறுபட்டதாக கருதப்படுகிறது. இவர்கள் இங்கிலாந்தின் முதல் கறுப்பு மற்றும் வெள்ளை நிற இரட்டையர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். தற்போது இவர்களுக்கு ஒரு வயது ஆகிறது. அக்குழந்தைக்கு அமெலியா, ஜாஸ்மின் என பெயரிட்டுள்ளனராம்.