Tuesday, May 31, 2016

சேட்டை செய்த சிறுவனை கரடிகள் அதிகமுள்ள காட்டில் விட்ட பெற்றோர்!

சேட்டை செய்த சிறுவனை கரடிகள் அதிகமுள்ள
 காட்டில் விட்ட பெற்றோர்!




சேட்டை செய்ததற்காக, பெற்றோரால், கரடிகள் அதிகமுள்ள காட்டில் விடப்பட்ட, 7 வயது சிறுவனை தேடும் பணி, ஜப்பானில் தீவிரமாக நடக்கிறது.
ஜப்பானின் வடக்கு பகுதியில், ஓக்காய்டோவில் உள்ள வனப் பகுதிக்கு அருகே உள்ள பூங்காவுக்கு, தன் மகள் மற்றும் மகனுடன், ஒரு தம்பதி சென்றிருந்தனர். அப்போது, யாமடோ தனுாகா என்ற அந்த சிறுவன், சேட்டை செய்துள்ளான். ஆத்திரமடைந்த அவனுடைய பெற்றோர், காரில் வீடு திரும்பும்போது, வனப் பகுதியில் அவனை இறக்கி விட்டுள்ளனர்.
 சிறிது துாரம் சென்று அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, சிறுவனை காணவில்லை. உடனடியாக, பொலிஸில் புகார் கொடுத்தனர்.

விசாரணையின்போது, சேட்டை செய்ததால் தண்டனை கொடுக்க நினைத்து, இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியுள்ளனர். அதை தொடர்ந்து பொலிஸார்,   மற்றும் வனத்துறையினர் என, 180க்கும் மேற்பட்டோர் அந்த வனப் பகுதியில் தேடி வருகின்றனர்.
https://youtu.be/-nxP_hSKPUs

உலகின் மிக நீளமான சுரங்க புகையிரதப் பாதை: சுவிட்சர்லாந்தில் இன்று திறக்கப்படுகிறது!

உலகின் மிக நீளமான சுரங்க புகையிரதப் பாதை:
சுவிட்சர்லாந்தில் இன்று திறக்கப்படுகிறது!

         




சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி புகையிரதப் பாதையின் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன் 1ம் திகதி) திறக்கப்பட உள்ளது. இதற்காக கோலாகலமான திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுரங்கப்பாதைக்கான வடிவமைப்பு முதன் முதலில் 1947-ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கர்ல் எட்வேர்டு கார்னர் வெளியிட்டார்.
காட்தர்டு பேஸ் Gotthard Base Tunnel சுரங்கம் என்ற பெயரிடப்பட்ட இந்த சுரங்க வழி சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே மிக நீளமான சுரங்கவழி
இந்த ஆண்டில் தொடங்கிய திட்டப்பணிகள் 69 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஜப்பான் நாட்டில் உள்ள Seikan என்ற சுரங்க வழி ரயில் பாதை(53 கி.மீ) தான் உலகின் மிக நீளமான சுரங்க வழி புகையிரதப் பாதையாக இருந்தது.
தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் தயாராகியுள்ள இந்த சுரங்க வழி புகையிரதப் பாதை அந்த பெருமைக்குரிய பெயரை பெற்றுள்ளது.
2,400 பணியாளர்களை கொண்டு சுமார் 12 பில்லியன் பிராங்க் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த புகையிரதப் பாதை ஐரோப்பிய நாடுகளில் ஒரு மிக்கியமான பாதையாக கருதப்படுகிறது.
சுவிஸின் Uri மாகாணத்தில் உள்ள Erstfeld என்ற பகுதியில் தொடங்கும் இந்த சுரங்க வழி புகையிரதப் பாதை, Ticino மாகாணத்தில் உள்ள Bodio என்ற பகுதியில் நிறைவடைகிறது.
இன்று 1ம் திகதி நடைபெறவுள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழா நிகழ்ச்சியில் ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல், பிரான்ஸ் ஜனாதிபதியான பிராங்கோயிஸ் ஹாலண்டே, இத்தாலி பிரதமரான மேட்டோ ரென்ஸி ஆகிய தலைவர்களுடன் சுவிஸ் நாட்டு முக்கிய அரசியல்வாதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இன்று 1ம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கான சேவை அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்களவர்களுக்கு எதிரானதா முதலமைச்சர் விவகாரம் ?



சிங்களவர்களுக்கு எதிரானதா முதலமைச்சர் விவகாரம் ?



இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கிவிடக் கூடாது என்றும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும் ஒரு தரப்பு விரும்புகின்றது.மறுபுறம்,இனவாதத்தைக் கொண்டே அரசியல் செய்வதற்கு முயற்சிக்கின்றது மற்றொரு தரப்பு. இந்த நாடு மிக மோசமானவற்றைச் சந்தித்ததற்கு இந்த இனவாதம்தான் காரணம்.இந்த இனவாதத்தை அதிகமான மக்கள் விரும்பவில்லை என்பது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெளிவாகத் தெரிந்தது.
இனவாதத்தின் ஊற்றான-அதை மாத்திரம் வைத்து அரசியல் செய்யும் மஹிந்தவின் ஆட்சியை இந்த நாட்டு மக்கள் கவிழ்த்ததற்குக் காரணம் அவரது இனவாதம் இந்த நாட்டை அழித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.இருந்தும்,அவர் அரசியல் செய்வதற்கு இதை விட்டால் வேறு வழியும் இல்லை.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மஹிந்தவின் தரப்பால் இனவாதம் பரப்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.
தமிழர்களுக்குப் பிரச்சினைகள் எழும்போது-அந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்போது-அவர்களின் காணிகள் விடுவிக்கப்படும்போது இனவாதம் கிளப்பப்படுகின்றது.
அதேபோல்,முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதையும் விட்டுவைப்பதில்லை.அந்த வகையில்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத் கடற்படை அதிகாரி ஒருவருக்கு ஏசிய விவகாரம் இன்று இனவாதமாக மாற்றப்பட்டுள்ளதைக் காணலாம்.
முதலமைச்சர் கடற்படை அதிகாரிக்கு இவ்வாறு ஏசிய விடயத்துக்கும் இனவாதத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.ஆனால்,திட்டமிட்ட அடிப்படையில் அது இனவாதமாக மாற்றப்படுகின்றது.இது ஓர் அரசியல்வாதிக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இடையிலான பிரச்சினை சிங்கள-முஸ்லிம் மக்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல.முதலமைச்சர் அநாகரீகமாக நடந்துகொண்டிருந்தால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும்தான்.
முதலமைச்சர் நடந்துகொண்ட விதத்தில் எங்காவது இனவாதம் இருக்கின்றதா?அந்தப் படை அதிகாரி ஒரு சிங்களவர் என்பதாலா முதலமைச்சர் அவ்வாறு நடந்துகொண்டார்?இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வைத்துத்தான் அது இனவாத செயற்பாடா அல்லது இருவருக்கு இடையிலான பிரச்சினையா என்று முடிவெடுக்க முடியும்.
இதை முதலமைச்சர் திட்டமிட்டுச் செய்யவில்லை என்பதை நாம் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.களத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தின் எதிரொலிதான் முதலமைச்சரின் அந்த செயற்பாடாகும்.முதலமைச்சர் ஏசுவது போன்ற காட்சியை வைத்துத்தான் இப்போது இனவாதம் பரப்பப்படுகின்றது.அதில் இனவாதாரீதியிலான எந்தக் கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதை அவதானிக்கலாம்.அவர் திரும்பத் திரும்பப் பேசுவதெல்லாம் protocol,protocol என்றுதான்.அந்த protocol பற்றி அந்த அதிகாரிக்கு எதுவும் தெரியாது என்றுதான் முதலமைச்சர் அதில் சொல்கிறார்.
protocol என்பது அரசியல்வாதிகள்  மற்றும் இராஜதந்திரிகளை பதவி நிலையை அடிப்படையாக வைத்து-வகைப்படுத்தி அந்தப் பதவி நிலைக்கு ஏற்ப மரியாதை செலுத்துவதாகும்.அந்த protocol அந்த அதிகாரிக்குத் தெரியவில்லை என்றுதான் முதலைமைச்சர் அந்தக் காட்சியில் கூறுகின்றார்.
பதவி நிலையை அடிப்படையாகக் கொண்டு முதலமைச்சர் கவனிக்கப்படவில்லை-மரியாதை கொடுக்கப்படவில்லை என்பது அந்தக் காட்சியைப் பார்க்கும்போது எமக்குப் புரிகின்றது.தான் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டேன் என்று முதலமைச்சர் பின்பு கூறுவது மேலதிக விளக்கங்களுக்காகும்.முதலமைச்சர் அவ்வாறு கூறாமலேயே என்ன நடந்திருக்கின்றது என்பதை அந்தக் காட்சியைப் பார்த்து மிக இலகுவாகப் புரிந்துகொள்ள முடிகின்றது.
ஆகவே,முதலமைச்சரின் அந்த வார்த்தைப் பிரயோக்கத்தின்போது எந்தவோர் இடத்திலும் இனவாதக் கருத்துக்களைக் காண முடியவில்லை;மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தையும் காண முடியவில்லை.அவர் எல்லோர் முன்னிலையிலும் அந்த அதிகாரியை  ஏசினார் என்பதை மாத்திரம்தான்  குற்றச்சாட்டாக முன்வைக்க முடியும்.
உண்மை இவ்வாறு இருக்கும்போது,அது இப்போது இனவாதமாக மாற்றப்பட்டுள்ளது.மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட பௌத்த தேரர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.அவர்களுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு உண்டு?அதுபோக,அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் நேரடியாக முஸ்லிம்களையே ஏசுகின்றனர்.
மட்டக்களப்பில் முதலமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி மிகவும் மோசமாக முஸ்லிம்களை திட்டித் தீர்த்த காட்சிகள் பதிவாகியுள்ளன.அத்தோடு,சிங்கள ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் முஸ்லிம்கள் மீது இனவாதத்தைக் கக்குவதைக் காணலாம்.
இவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி.இலங்கை வரலாற்றில் படையினருக்கும் பொலிசாருக்கும் ஞானசார தேரர் ஏசியது போன்று எவராவது எசியதுண்டா?எலும்புத் துண்டுகளுக்காக அலைகின்ற நாய்கள் என்று பொலிசாரை ஏசியதை மறக்க முடியுமா?.பொலிசார் மீதும் படையினர் மீதும் அப்போது வராத பாசமும் மதிப்பும் இவர்களுக்கு இப்போது எங்கிருந்து வந்தது?சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் ஏசினால் அது சரி.சிங்கள இனத்தைச் சாராத ஒருவர் செய்தால் அது இனவாதம் என்றா சொல்ல வருகின்றீர்கள்?ஞானசாரவைப் போன்ற மிக மோசமான வார்த்தைகளை  முதலமைச்சர் பாவிக்கவுமில்லை;சிங்கள இனத்தைத் தாக்கும்விதத்தில் நடந்துகொள்ளவுமில்லை.
நிலைமை இப்படி இருக்கும்போது இப்போதுதான் படையினர் மீது இந்த தேரர்களுக்கும் சிங்கள் ஊடகங்களுக்கும் பாசம் வந்திருக்கின்றது.பொது பல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்திருந்தபோது அவற்றை ஊக்குவிக்கும் விதத்தில் செயற்பட்ட ஊடகங்களும் தேரர்க்களும்தான் இந்த விவகாரத்திலும் தலையிட்டு இதை இனவாதமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
இது திட்டமிட்ட இனவாதச் செயல் என்பது இதன் மூலம் மிகத் தெளிவாகத் தெறிகின்றது.இனவாதத்தை மாத்திரம் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் உள்ளார்கள் என்பது நிச்சயம்.
படையினரை வைத்து அரசியல் செய்யும் தரப்பு இந்த விவகாரத்தை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றது;முதலமைச்சரின் செயற்பாட்டை இனவாதச் செயற்பாடாகக் காட்டுவதற்கு முற்படுகின்றது.ஆனால்,அந்தச் சம்பவத்தை நடுநிலையாக வைத்து ஆராய்ந்து பார்த்தால் அது ஓர் அரசியல்வாதிக்கும் படை அதிகாரிக்கும் இடையிலான சிறியதொரு பிரச்சினையே அன்றி இரண்டு இனங்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
[எம்.ஐ..முபாறக்]

கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீதின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா

கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீதின்
இஸ்லாமிய தகவல் களஞ்சியம்

நூல் வெளியீட்டு விழா

(எம்.எஸ்.எம்.சாஹிர்)

ஓய்வு பெற்ற ஆசிரியை கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களின்இஸ்லாமிய தகவல் களஞ்சியம்நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பு -09 தெமட்டகொட, வை.எம்.எம். பேரவையில் கலாநிதி .எம். அஸீஸ் மண்டபத்தில் நடை பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில், புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில்  இடம்பெறும் இவ்விழாவில், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல் -ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். ஸமீல்(நளீமி), பேராதனை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மௌலவி .எல்.எம். இப்றாஹீம்(எம்.), அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவரும் ஜம்மியத்துல் ஷபாப்பின் உதவிப் பணிப்பாளருமான தேசமான்ய மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம்(கபூரி), அகில இலங்கை வை.எம்.எம். தேசியத் தலைவர் அல்- ஹாஜ் சாதிக் சலீம்(ஜே.பி), ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவரும் தினகரன் ஆலோசகருமான எம்..எம்.நிலாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிறப்பு அதிதிகளாக மலேசியத் தூதுவராலய விஸா அதிகாரி மர்யம் அம்ஹர் ஷெரீப், ஜாமிஆ நளீமியா நிர்வாக சபை உறுப்பினர் அல்- ஹாஜ் எம்.இஸட்.எம்.ஸவாஹிர், வை.டபிள்யு.எம்.. மாவனல்லைக் கிளை தலைவி ஹாஜியானி ஆயிஷா அஸீஸ் மஹ்ரூப், வை.டபிள்யு.எம். தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில், வை.டபிள்யு.எம். பொருளாளர் தேசமான்ய பவாஸா தாஹா, அஷ்ஷபா ஹஜ் உம்ரா சேர்விஸ் பணிப்பாளர் தேசகீர்த்தி ஹாஜியானி இனாயா பாரூக்கோல் கேட்டர்ஸ் பிரைவட் லிமிடட்  உரிமையாளர் அல் -ஹாஜ்  சப்ரி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்தோடு விழாவில் வரவேற்புரையை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.அமீர் ஹுசைன்(ஜே.பி), கருத்துரையை கலாபூஷணம் வைத்தியக் கலாநிதி தாஸிம் அஹமது, சிறப்பதிகள் உரையை மௌலவி .எல்.எம்.இப்றாஹீம்(எம்.) மற்றும் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம்(கபூரி), வாழ்த்துரையை மணிப்புலவர் மருதூர் . மஜீத், கவி வாழ்த்து நவமணி சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினர் காவ்யாபிமானி தாஜுல் உலூம் கலைவாதி கலீல் மற்றும் கவிதாயினி நூருல் அய்ன் நஜ்முல் ஹுசைன், நூல் அறிமுக உரை ஓட்டமாவடி அரபாத், துஆப் பிரார்த்தனை கொழும்பு மாவட்ட முன்னாள் இஸ்லாம் பாட ஆலோசகர் மௌலவி எம்..எம். இப்லால்(பாரி)யும் நிகழ்ச்சித் தொகுப்பை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர்களான கியாஸ் . புஹாரி மற்றும் பா.மலரம்பிகை, நன்றியுரையை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் எம்.எஸ்.எம்.சாஹிர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நூல் நூலாசிரியரின் 6ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரையும் அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.



ஆளுனர் பதவியிலிருந்து என்னை நீக்க முதலமைச்சரினால் ஒரு போதும் முடியாது! – ஆளுனர் ஒஸ்டின் பெர்னான்டோ

ஆளுனர் பதவியிலிருந்து என்னை நீக்க
முதலமைச்சரினால் ஒரு போதும் முடியாது!

– ஆளுனர் ஒஸ்டின் பெர்னான்டோ


என்னை ஆளுனர் பதவியிலிருந்து நீக்குவதற்கு முதலமைச்சரினால் முடியாது என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து  மேலும் தெரிவிக்கையில்,
மாகாண ஆளுனர் பதவியிலிருந்து தம்மை நீக்குவதற்கு, மாகாண முதலமச்சர் ஸீர்  அஹமட்டிற்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. என்னைப் பற்றி என்னைவிட அதிகாரம் குறைந்தவர்களினால் தீர்மானம் எடுக்க முடியாது.
ஆளுனர் பதவிக்கு மேல் அதிகாரம் படைத்த ஜனாதிபதியே இது குறித்து தீர்மானிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் உண்டு.எனினும் குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

.

புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது அரசு மிகத் தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன


புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது

அரசு மிகத் தெளிவான தீர்மானங்களை மேற்கொள்ளும்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

மதுசார மற்றும் புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது அரசு மிகத் தெளிவானதும் நேரடியானதுமான தீர்மானங்களை மேற்கொள்ளும் என ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  அவர்கள் வலியுறுத்தினார்.
இன்று குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தில் 35% வீதம் மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றிற்கு செலவிடப்படுவதுடன் இது நாட்டில் வறுமை நிலை அதிகரிப்பதற்கும் மக்களின் சுகாதாரம் குன்றுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  அவர்கள், இது தொடர்பாக அரசு மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.
இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று 31 ஆம் திகதி  முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற புகைத்தல் எதிர்ப்பு தின வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் புகைத்தலுக்கு எதிராக நாம் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்நாட்டில் புகை பிடிக்கும் ஆண்களின் தொகை சுமார் 5% வீதத்தினால் குறைவடைந்துள்ளதுடன், இந்நிலைமையை மேலும் விருத்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  அவர்கள் குறிப்பிட்டார்.
வர்த்தக துறையின் தந்திரோபாயங்கள் மற்றும் மக்களை கவரும் விதமான விளம்பரங்களினால் எமது இளைஞர் சமுதாயம் வழி தவறி செல்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  அவர்கள், இவற்றை தோற்கடிப்பதற்காக கைகோர்ப்பது அனைவரதும் பொறுப்பாகுமெனத் தெரிவித்தார்.
எமது நாட்டின் பெயரை உள்ளடக்கியதாக இலங்கை புகையிலை கம்பனி செயற்பட்டபோதும் எமது நாடு இதன் பங்காளராக செயற்படவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  அவர்கள், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவிதமான வருமான மார்க்கங்களுக்காகவும் அரசு பணியாற்ற மாட்டதென வலியுறுத்தினார்.
அன்று சிகரெட் பக்கட்டில் சுகாதார எச்சரிக்கையை 80% வீதமாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டதன் காரணமாக அலரி மாளிகையில் கதிரைகளில் அமர்ந்திருந்த புகையிலை கம்பனிகளின் பணிப்பாளர்கள் முன்னிலையில் விளக்கமளிப்பதற்கு நேர்ந்த வரலாற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  அவர்கள், இதனை நாட்டு மக்கள் அவதானத்துடன் நோக்கியதன் காரணமாக தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்துடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சின்னங்களை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  அவர்கள் வழங்கிவைத்தார்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சுகாதார பிரதி அமைச்சர் பைஸல் காசீம், இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பிரணாந்துபுள்ளே, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன், சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்கிரம, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.