Wednesday, June 29, 2016

அலட்சிய முகம்! வெறுத்த பார்வை!!



அலட்சிய முகம்! வெறுத்த பார்வை!!


தேர்தல் காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைபற்றி வாய்கிழியப் பேசியவர்கள் இன்று புனித ரமழான் மாதத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றில் ஒரே மேசையில் நேருக் நேர் அமர்ந்திருந்தும் அலட்சிய முகத்துடனும் வெறுத்த பார்வைகளுடனும் வீற்றிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இவர்கள் முஸ்லிம்களின் மொத்த வாக்குகளைப் பெற்று தமக்கிடையே  பதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக மாத்திரம்தான் சமூகத்தின் ஒற்றுமைபற்றி மேடைக்கு மேடை பேசுகிறார்களே தவிர உள்ளத்தில் ஈமானிய அடிப்படையில் அப்பேச்சுக்கள் இல்லை என்பதை இவர்களின் இச்செயல்பாடு நிருபித்துக்காட்டுகின்றது என நடுநிலையாகச் சிந்திப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் கடந்த 27 ஆம் திகதி திங்கட்கிழமை மருதானை பூக்கர் வரவேற்பு மண்டபத்தில்  ஏற்பாடு செய்யப்பட்ட  இப்தார் நிகழ்விலேயே முஸ்லிம் சமூகத்தின் தேசிய தலைமைத்துவம் மற்றும் பிரதேச தலைமைத்துவங்களின் ஒற்றுமையை அங்கிருந்தவர்களால்காணக்கூடியதாகஇருந்ததாகத்தெரிவிக்கப்படுகின்றது
இந்நிகழ்வில். பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கலந்து கொண்டிருந்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் நகரத் திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், முன்னாள் அமைச்சர் பஸீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹசனலி, மேல்மாகாணசபை உறுப்பினர்களான பாயிஸ், அர்சாத் மற்றும் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.டி.ஏ.எஸ் பிரேமச்சந்திர, துறைமுக அதிகார சபையின் மேலதிகாரிகள் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் சிரேஷ்ட உப தலைவர் எம்.எம்.எஸ். இல்ஹாம் மௌலானா, செயலாளர், யூ.எல் ஜௌபர், பொருளாளர் எம்.ஹக்கம் மற்றும், நிர்வாக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
  




முஸ்லிம் ஆளுனர் நியமனம் நிச்சயம் இடம்பெற வேண்டும் முன்னாள் எம்.பி அஸ்வர் கோரிக்கை

முஸ்லிம் ஆளுனர் நியமனம்
நிச்சயம் இடம்பெற வேண்டும்
முன்னாள் எம்.பி அஸ்வர் கோரிக்கை
(எம்.எஸ்.எம்.சாஹிர்)

ஒரு முஸ்லிம் ஆளுனர் நிச்சயமாக நியமிக்க வேண்டும் இல்லாவிட்டால் அது பெரும் குற்றமாகவும் குறையாகவும் முஸ்லிம்கள் சமுதாயத்திலே காணப்படும் என முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது,
நோன்பு திறக்கும் வைபவமொன்றுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க பேருவளை சென்றிருந்த போது, ஒரு முஸ்லிம் ஆளுனரை நியமிக்க வேண்டும் என்று அங்குள்ள தலைவர்கள் வேண்டிக் கொண்டுள்ளார்கள்.  இது நிச்சயம் நடக்க வேண்டும். ஏனென்றால், மாகாண சபைகள் உருவாகிய பொழுது, தென் மாகாணத்துக்கு முதல் ஆளுனராக எம்.ஏ. பாக்கீர் மாக்கார் நியமனம் பெற்றார். மேல் மாகாணத்துக்கு செய்யத் மர்ஹும் அலவி மௌலானா நியமனம் பெற்றார். அவர் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு யாரும் ஒரு முஸ்லிம் ஆளுனரை நியமிக்கவில்லை. இதுவும் அரசியல் ரீதியிலே முஸ்லிம் சம்பந்தமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தி, ஒர் ஏக்கத்தை மற்றும் ஏமாற்றத்தை முஸ்லிம்கள் மத்தியிலே எற்படுத்தக் கூடியது. ஒரு முஸ்லிம் ஆளுனர் நிச்சயமாக நியமிக்க வேண்டும் இல்லாவிட்டால் அது பெரும் குற்றமாகவும் குறையாகவும் முஸ்லிம்கள் சமுதாயத்திலே காணப்படும். 
எனவே, முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து  இந்த  விடயத்தை ஜனாதிபதி மட்டத்திலே பேசி இவைகளுக்கு ஒரு முடிவு கட்ட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று நான் சமூகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.


துண்டு துண்டாகுமா பிரிட்டன்?



துண்டு துண்டாகுமா பிரிட்டன்?

ஓரிரு வருடங்களாக முழு உலகின் கவனமும் திரும்பி இருந்தது ஐ.எஸ் பயங்கரவாதிகளின் மீதுதான்.ஆனால்,அவர்கள் தற்காலிகமாக மறக்கப்பட்டு இப்போது உலகின் கவனம் திரும்பி இருப்பது பிரிட்டனின் மீதுதான்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது என்ற அதிர்ச்சிக்குரிய முடிவை அந்த நாடு எடுத்திருப்பதுதான் இதற்கு காரணம்.
பிரிட்டன் மக்கள் ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார்கள் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இந்த முடிவு அமைந்துள்ளது.இந்த முடிவால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிதல் என்ற ஒரு பாதகத்தன்மையை மாத்திரம் எதிர்கொள்ளவில்லை.அந்த முடிவால் பல பக்க விளைவுகளையும்தான் எதிர்கொள்ளப்  போகின்றது.
முதலில் பிரிட்டன் மக்கள் ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார்கள் என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது.கட்டுக்கடங்காமல் போகும் குடியேற்றவாசிகளின்  ஊடுருவல்தான் இதற்கு முதல் காரணம்.ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகினால் மாத்திரம்தான்  இதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற வழி இருந்ததால்தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
புது மணப் பெண்களாக அல்லது புது மாப்பிள்ளைகளாக வருடம் தோறும் 30,000 பேர் பிரிட்டனுக்குள்  பின் வழியாக  நுழைகின்றனர் என்று புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட ஏற்பாடுகளே இதற்குக் காரணமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினால் மாத்திரமே இந்தக் குடிவரவைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை இருக்கின்றது.
ஆனால்,ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளை உறவினர்களாகக் கொண்டவர்களுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்படுகின்றது.இவர்கள் மூன்றாம் தரப்பு நாடுகளின் பிரஜைகள் என அறியப்படுவதோடு டேவிட் கேமேரோன் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டது முதல் இவ்வாறான 140,921 பேர் பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால்தான் பிரிட்டன் மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களித்தனர்.ஆனால்,இந்த முடிவால் ஏற்படப் போகும் பல பாதகமான விளைவுகள் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.தொழில் இழப்பு மற்றும் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட மேலும் பல பாதகமான விளைவுகளை பிரிட்டன் எதிர்கொள்ளக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே நின்று முன்னேற முடியும் என்ற பிரிட்டன் மக்களின் தன்நம்பிக்கையை இது காட்டுகிறதா அல்லது உணர்ச்சிக்கு இடங்கொடுத்துவிட்டார்களா என்ற கேள்வியும் இங்கு  எழுகின்றது.
பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றொரு தரப்பும் வெளியேறக் கூடாது என்றொரு தரப்பும் கடந்த நான்கு மாதங்களாக பிரசாரங்களை மேற்கொண்டு வந்தன.பிரிட்டன் வெளியேறுவதை எதிர்த்த தரப்பு அது வெளியேறினால் ஏற்படப் போகும் ஆபத்துக்களைப் பட்டியல்படுத்தி மக்களைத் தெளிவுபடுத்தி வந்தது.அதில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் தொழில் இழப்பு புள்ளி விவரங்களுடன் முன்வைக்கப்பட்டன.
மறுபுறம்,பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று கூறிய தரப்பு பொருளாதார வீழ்ச்சியை விடவும் குடியேற்றவாசிகள் ஊடுருவலையே மிகப் பெரிய ஆபத்தாகக் காட்டியது.கிட்டத்தட்ட அவர்கள் இனவாதத்தையே விதைத்து வந்தனர்.
இறுதியில் பிரிட்டன் மக்கள் இனவாதத்துக்கே அடிபணிந்துள்ளனர்.ஆனால்,இந்த முடிவு பிரிட்டனைத் துண்டு துண்டாக உடைத்து பல பக்க விளைவுகளைக் கொண்டு வரக்கூடியது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
ஸ்கொட்லாந்து,அயர்லாந்து
பிரிவதற்கு முயற்சி
===========================
பிரிட்டன் என்பது ஸ்கொட்லாந்து,அயர்லாந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றைக் கொண்ட பெரும் நாடாகும்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்  ஆகியவற்றின் மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களித்துள்ள அதேவேளை,ஸ்கொட்லாந்து,வட அயர்லாந்து  மற்றும் லண்டன் மக்கள் பிரிட்டன் விலகக்கூடாது என்றே வாக்களித்துள்ளனர்.
இந்த இரண்டு வெவ்வேறு நிலைப்பாடுதான் இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை அந்த இரண்டு நாடுகளும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வதற்கான நிலைப்பாடாக அந்த நாடுகளின் அரசுகள் பார்க்கின்றன.ஸ்கொட்லாந்து இந்த விடயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது.தாம் பிரிந்து செல்வதற்கு சந்தர்ப்பம் ஒன்று  கிடைக்காதா என்று காத்துக் கிடக்கும் ஸ்கொட்லாந்து அரசுக்கு இந்த நிலைமை பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஸ்கொட்லாந்து பிரிந்து செல்வதற்காக 2014 ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அந்த நாட்டு மக்கள் தொடர்ந்தும் பிரிட்டனுடன் இணைந்திருக்கவே வாக்களித்திருந்தனர்.ஆனால்,இந்த முறைத் தேர்தலில் 60 வீதமான ஸ்கொட்லாந்து மக்கள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் மக்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்ததால் ஸ்கொட்லாந்து மக்கள் பழைய நிலைப்பாட்டில் இருந்து  மாறிவிட்டனர் என்றும் அவர்கள் ஸ்கொட்லாந்து தனி நாடாகுவதை ஆதரிக்கின்றனர் என்றும் ஸ்கொட்லாந்து அரசு முடிவு செய்துள்ளது.
இந்தச் சூழ்நிலையை சாதகமாகக் கொண்டு ஸ்கொட்லாந்து பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்வதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து அரசு தயாராகி வருகின்றது.அந்த நாட்டின் முதலமைச்சர் நிகோலா ஸ்டேஜன் இந்த விவகாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்.தேர்தலுக்கான ஏற்பாடுகளை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டார்.

மறுபுறம், இந்தத் தேர்தலில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்று லண்டன் மக்களும் வாக்களித்துள்ளதால் லண்டன் சுயாதீன பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும்;அதற்காக இப்போதே விண்ணப்பிக்க வேண்டும் என்று லண்டன் மக்கள் கோரிக்கை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.
 இந்தக் கோரிக்கையை உள்ளடக்கிய மஹஜரில் லண்டன் மக்கள் 65 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு லண்டன் மேயர் சாதிக் கானிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு லண்டனும்  ஸ்கொட்லாந்தும் வட அயர்லாந்தும் பிரிட்டனில் இருந்து பிரிந்து சுயாதீனமாகச் செயற்படும் முயற்சியில் இறங்கியுள்ளதால்  பிரிட்டன் பெரும் தலையிடியை இப்போது எதிர்நோக்கத் தொடங்கியுள்ளது.பிரச்சினைகள் இவ்வாறெல்லாம் தோன்றும் என்று பிரிட்டன் மக்கள்  நினைத்திருக்கவில்லை.

கெமெரோனின் பதவி விலகல்
===========================
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்தாலும் சரி அதனுடன் இணைந்துள்ள ஏனைய நாடுகள் பிரிட்டனில் இருந்து பிரிந்தாலும் சரி பிரிட்டன் எல்லாத் துறைகளிலும் கணிசமான அளவு பலமிழந்துவிடும் என்பது நிச்சயம்.
இவ்வாறான ஒரு மோசமான நிலைமை தனது தலைமையின் கீழ் ஏற்படக்கூடாது என்று விரும்பிய பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமெரோன் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் பிரதமர் பதிவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.பிரிட்டன் தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதற்கு வாக்களிக்குமாறு கெமெரோன் விடுத்த கோரிக்கையை மக்கள் நிராகரித்ததால் அவர் விரக்தியடைந்துள்ளார்.
பிரிட்டன் இனி என்ன பாடுபடப் போகின்றது என்று இப்போது முழு உலகமும் உற்றுநோக்கத் தொடங்கியுள்ளது.அடுத்து வருகின்ற பிரதமர் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கடுமையாகப் போராட வேண்டி வரும்.இதேவேளை,வாக்களிப்பு நிராகரிக்கப்பட்டு மீண்டும் புதிதாக வாக்கெடுப்பு நடத்தப்பட  வேண்டும் என்ற கோரிக்கையும் பிரிட்டனுக்குள்  இப்போது எழுந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகுது என்று.

[எம்.ஐ.முபாறக்]



துருக்கி விமான நிலையத்தில் தாக்குதல்

துருக்கி விமான நிலையத்தில் தாக்குதல்

துருக்கி விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஏராளமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள Ataturk விமான நிலையத்தில் திடீரென்று இரண்டு இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.
இதில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 140 க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல பேர் இந்த தாக்குதல் சம்பவத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகமாகலாம் என கூறப்படுகிறது.
மேலும் கார் நிறுத்தும் இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவமும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயுததாரிகளான 4 பேர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியில் இருக்கும் மிகப்பெரிய விமான நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.




















Tuesday, June 28, 2016

இன்னும் சில மணிநேரத்தில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்

இன்னும் சில மணிநேரத்தில்
மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர்


மத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை இன்னும் சில மணிநேரத்தில் நியமிக்கவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
இன்று பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருக்கும் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைய இருப்பதை முன்னிட்டே மேற்படி ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், இன்னும் சில மணித்தியாலங்கில் அவர் இது தொடர்பான முடிவை எடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த விபரம் தொடர்பான பதிவினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்திலும் பதிவிட்டள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்கா இன்று 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்

சந்திரிக்கா இன்று 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
இவரது பிறந்த நாள் நிகழ்வானது அநுராதபுரம் ஜயஸ்ரீ மகாபோதியில் சமய வழிப்பாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் ஹொரகொல்லயில் இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் இலங்கையின் 5வது ஜனாதிபதி என்பதுடன் 1994-2005 ஆம் ஆண்டு வரை இலங்கையை ஆட்சி செய்த முதல் பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது

சந்திகளில் காணக் கிடைத்த அழகிய முன்மாதிரிமிக்க போஸ்டர்கள்..!

சந்திகளில் காணக் கிடைத்த அழகிய

முன்மாதிரிமிக்க போஸ்டர்கள்..!


அல் குர்ஆனில் ஆடை பற்றி..:
ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது.’ (அல்குர்ஆன் 07:26)

நபிகளாரின் எச்சரிக்கை, ஆடை குறித்து..:

நபியவர்கள் கூறினார்கள், ‘இரண்டு கூட்டத்தினர் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களை இதுவரை நான் பார்த்ததில்லை. அவர்களில் ஒருசாரார் மாட்டு வால்களைப் போயன்ற சாட்டைகளைக் கையில் வைத்திருப்பார்கள். அவற்றால் மக்களை அடிப்பார்கள். இன்னொரு சாரார் பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். அவர்கள் ஒய்யாரமாக நடப்பார்கள். மற்றவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பார்கள். அவர்களுடைய தலை ஒட்டகத்தின் திமில் களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லமாட்டார்கள். சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்-4316) 

ஒலுவிலிலிருந்து அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு ஓர் திறந்த மடல் !

ஒலுவிலிலிருந்து அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கு
ஓர் திறந்த மடல்

ஒலுவிலின் நிலைமை மாறுமா ?

தலைவர் ஹக்கீம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்!
பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம்!!

கெளரவ அமைச்சர் ஹக்கீம் அவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்
மறைந்த மாமனிதர் சொன்னதை செய்யும் செய்வதை சொல்லும் எல்லோருடைய மனதிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மர்ஹும் அஸ்ரப் அவர்களால் வழி நடத்தப்பட்ட ஒரு கட்சிதான் முஸ்லிம் காங்கிரஸ்.
அவருக்கு பிறகு அந்த கட்சியை வழி நடாத்தும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையினால்! நீங்களும் அன்றிருந்து இன்று வரை தலைவராகவும் அமைச்சராகவும் பல ஆண்டுகளாக இருந்து சில கட்சித்தாவல் செய்தும் பல அமைச்சர் பதவியும் பெற்று தலைமையை அலங்கரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.
விமர்சனங்கள் பல இடங்களில் இருந்து வந்தாலும் அதுதான் உண்மை!
"அரசியல் நகர்வுகளை எல்லாம் வல்ல அல்லாஹ்தான் நன்கறிந்தவனாக இருக்கிறான்" தலைவரின் விருப்பம் மக்களின் வேண்டுகோள் அதிகமாக இருந்ததன் காரணத்தால் நீங்கள் மறைந்த தலைவரின் இடத்தில் இருக்க முடிந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)
!!ஆட்சி அதிகாரம் கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் நாடியபடிதான் நடக்கும்!!
அதே நேரம் உங்களுக்கு தெரியும் மர்ஹும் அஸ்ரப் அவர்களால் அதிகமாக நேசிக்கப்பட்ட அவருடைய இதயம் என்று சொல்ல கூடிய ஒரு பகுதிதான் கிழக்கு மாகாணம்.
அதிலும் ஒலுவில் ஊர் சற்று அதிகமாக பார்க்கப்பட்ட ஊர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை அவரின் முயற்சியின் கட்டமாக அவரின் நினைவாக.
ஒலுவில் துறைமுகம்,பல்கலைக்கழகம்,அவருக்காக கட்டப்பட்ட வீடு என்று இன்றும் காணப்படுகிறது. இதனால் ஒலுவில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை! மாறாக இழந்ததுதான் மிச்சம் அது ஒருபுறமிருக்க! இருக்கிறது என்பதுதான் எல்லோரும் அறிந்த உண்மை.
அன்றிலிருந்து இன்றுவரை ஒலுவிலைப் பொறுத்தவரை அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸைத்தான் ஆதரித்து வந்துள்ளார்கள் அது அந்த மாமனிதரின் உண்மையான வீரத்தினாலும் மக்களை நேசிக்கும் அன்பினாலும்.
ஆனால் அன்று இருந்தத்தையும் இன்று உங்கள் காலத்தில் இருக்கின்றதையும் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
காரணம் வருங்காலத்தில் ஒலுவில் என்ற ஒரு ஊர் இருக்குமா? என்பதை கூட செல்ல முடியவில்லை!!
ஒரு பக்கத்தில் துறைமுகத்துக்கு நிலங்கள் எடுக்கப்பட்டது அதற்குரிய நக்ஷ்டயீடு மக்களுக்கு இன்னமும் ஒழுங்கான முறையில் கிடைக்கவில்லை.மறுபக்கத்தில் பல்கலைக்கழகத்துக்கு நிலங்கள் அடைக்கப்பட்டது அதில் எந்த தொழில் வாய்ப்பும் கிடைத்ததாக தெரியவில்லை. ஒரு புறத்தில் பெரும்பான்மை சமூகத்தால் நிலங்கள் பறிக்கப்பட்டது மக்கள் துரத்தப்பட்டார்கள் அவர்களுக்கு ஒரு துண்டு காணிகூட மீட்டுக்கொடுக்கவில்லை.
இலவு காத்த கிளி போல் நம்பிகொண்டிருக்கிறார்கள் மக்கள் இன்று கிடைக்கும் நாளை நடக்கும் என்று. நடந்ததாகவும் தெரியவில்லை கொடுப்பதாகவும் நம்பிக்கை இல்லை??
போதாக்குறைக்கு மிஞ்சியுள்ள நிலத்தையும் இயற்கையின் சீற்றத்தால் கடலோடு கடலாக உள்வாங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அதற்காக சில கற்களை போட்டு ஏதே ஒரு கண்துடைப்பாக பாதியில் விடப்பட்டுள்ளது.
வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் ஒரு அழகான வீதி எவ்வாறு இருந்தது என்று எங்களை விடவும் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நன்றாக தொரியும் அதன் அருமை ஆனால் இப்போது அது இருந்த இடமுமில்லை ஏன்??
இயற்கையின் அழிவை யாரும் தடுக்கமுடியாதுதான்!அனால் இயற்கை அழித்துச்சென்றதை சீர் செய்யலாம் இல்லையா அதுவும் இதுவரை செய்யாமல் இருப்பது ஏன்??
ஒலுவிலூருக்கு நடுவே ஒரு அழகான வளைந்த பாம்பு செல்லுவது போல் ஆறு சென்றது அது இப்போது கவனிப்பாரற்று ( வயிற்றில் இருக்கும் குழந்தையை நம்பி வெளியால் இருக்கும் குழந்தையை இல்லாமலாக்கியது போல்)
சும்மா கிடந்த ஆற்றை தோண்டி பாதியில் விடப்பட்டுள்ளது இப்போது துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது இதை பார்பதற்கோ கேட்பதற்கோ யாருமில்லை
எத்தனையோ உறுப்பினர்கள் இருந்தும்.
ஆனால் சாணக்கிய தலைவர் ஊருக்கு வருவதானால் வீதிகளை அலங்கரிக்கவும் பட்டாசி சுடுவதற்கும், பாடல் போடுவதற்கும் ஆட்கள் வைத்திருக்கிறீர்கள்!! ஆனால் ஊரில் உள்ள குறைகளை கண்டுகொள்ள எடுத்துச் சொல்லக் கூட யாருமில்லை அனாதையாக்கப்பட்டுள்ளது ஒலுவில். ஏன் இந்த நிலமை இந்த ஊருக்கு??
நீங்கள் ஒதுக்கும் நிதி போதாதா?
இல்லை ஒவ்வொரு தடவையும் வந்து வெறும் வாய் பேச்சில் மட்டும்தானா வீறாப்பு? இல்லை நீங்கள் ஒதுக்கும் நிதி உங்களை உற்சாகப்படுத்தும் வரவேற்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டும்தானா?
அப்படியென்றால் பொதுமக்களுக்கு ஊருக்கு ஒன்றும் உருப்படியாக செய்யாமல் இருப்பதன் அர்த்தம்தான் என்ன?
இப்படியல்லாம் நினைக்க தோணுது அல்லவா?
பணம் இருந்தால் எதுவும் செய்யலாம் என்ற நிலமைதான் இன்று காணப்படுகிறது.நீங்களும் பணத்தை உங்கள் ஆட்களின் மூலம் மக்களுக்கு கொடுத்து வாக்குகளை பணத்தின் மூலம் வாங்குகிறீர்கள் என்றுதான் நினைக்க தோணுகிறது!
காரணம் அந்த அளவுக்கு ஒலுவில் அபிவிருத்தியில் மிகவும் மோசமாக முறையில் பின் தங்கியுள்ளது அதனால்தான் மனம் நொந்து நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன்!
இதற்கெல்லாம் பதில் செல்ல வேண்டியது உங்கள் பொறுப்புத்தான்.
ஏன் என்றால் காலா காலம் உங்கள் தலைமையில் உள்ள "முஸ்லிம் காங்கிரஸ்"தான் வேதவாக்கு போல் நினைத்து ஆதரிக்கிறார்கள்.
நீங்கள் அதை செய்வீர்கள் இதை செய்வீர்கள் என்று கடைசியில் ஆப்புதான் மக்களுக்கு.
அந்த வகையில் ஒலுவிலும் விதிவிலக்கல்ல ஏமாற்றப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் இதுதான் உண்மை.
ஆனால் நீங்கள் கண்டுகொள்வதே இல்லை!ஓட்டு மட்டும்தான் உங்கள் இலக்கு போல அதனால்தான் நீங்கள் ஊருக்கு உருபடியாக ஒன்றும் செய்யாமல் உங்கள் உயர்பீட ஆதரவாளர்களை உறுப்பினர்களை திருப்திபடுத்தி நீங்கள் இலாபம் அடைகிறீர்கள்!
இனியாவது நீங்கள் இவ்வளவு நாளாக நம்பி அள்ளி அள்ளி போட்ட மக்களுக்கு கிள்ளியாவது கொடுப்பீர்களா? வெறுமனே வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசாமல்!!
வேறு ஊர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒலுவில் அபிவிருத்தி என்ற விடயத்தில் மிகவும் மோசமாகத்தான் காணப்படுகிறது.
வேறு ஊர்களுக்கு அபிவிருத்தியை செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை அங்கு செய்வதில் ஒரு மூன்று வீதமாவது
ஒலுவிலுக்கும் கிடைக்க வேண்டும் அதுதான் மக்களின் எதிர்பார்பு உங்களின் கடமையும் கூட!
வெறுமனமே ஓட்டு மட்டும் போட்டு உங்களை பாராளுமன்றம் அனுப்பி விட்டு நீங்கள் செல்வதையல்லாம் பார்த்துக்கொண்டு உங்களை திறந்த வாகனத்தில் கூட்டி வந்து ஊரை சுத்தி கையை தூக்கி காட்டினால் மட்டும் போதாது தலைவர் அவர்களே.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றின் பங்காளியாக இருந்து பாராளுமன்ற பிரதிநிதிகளும் கிடைத்து இந்த நாட்டின் நல்லாட்சியின் பங்காளியாக நீங்களும் இருப்பதற்கு இந்த மக்கள் வழிவகுத்துள்ளார்கள்.
அந்தவகையில் உங்களுக்கு அமைச்சுப்பதவியும்(நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்)கிடைத்து கடமைகளையும் பொறுப்பேற்று கொண்டிர்கள் அல்ஹம்துலில்லாஹ்.
"ஆட்சி அதிகாரம் கொடுப்பதும் எடுப்பதும் இறைவன் நாடிய படிதான் நடக்கும்"
கெளரவ தலைவர் அவர்களே நடந்தது நடந்தவையாக இருக்கட்டும்.நடக்கப் போவதாவது நல்லவையாக அமையட்டும்!
இந்த நல்லாட்சியிலாவது ஒலுவில்பிரதேசத்தை அன்று (அஸ்ரப்) காலத்தில் இருந்தது போல் உருவாக்கி கொடுப்பீர்களா ?
எடுத்த அமைச்சுக்களால் ஏதும் அபிவிருத்திகள் அல்லது மக்கள் இழந்த வளங்களையாவது சீர் செய்து தருவீர்களா?
இளைஞர்களுக்கு ஏதும் தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பீர்களா?
துறைமுகத்துக்கு இழந்த காணிகளுக்கு உரிய நக்ஷ்டயீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பீர்களா?
மீனவர்களின் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடலரிப்பை நிரந்தரமாக தடை செய்து எங்கள் மண்ணை எங்களிடம் மீட்டுத்தருவீர்களா?
அந்த அழகான ஆற்றை உரியமுறைபடி வழமைபோல் ஓடி கடலை சங்கமித்து துர்நாற்றத்தை இல்லாமல் ஆக்குவதற்கு கண்திறப்பீர்களா?
கட்சி வேறுபாடின்றி தேர்தல் தந்திரத்தை காட்டாமல் மக்களை அரவணைத்து அபிவிருத்தி மேற்கொள்வீர்களா?
என்பதை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.
இந்த ஒலுவிலில் உங்கள் பெயர் இனியும் நிலைத்திருப்பதா?இல்லையா? என்பதற்கு கிடைத்திருக்கும் ஒரு சந்தர்ப்பம் இதுதான். இது கடைசியாகவும் இருக்கலாம் ஆரம்பமாகவும் அமையலாம்.
அது நீங்கள் எடுக்கும் மக்களை அரவணைக்கும் முயற்சியில்தான் உள்ளது மக்கள் என்று சொன்னது உங்களை நம்பி வாக்குகளை அள்ளி அள்ளி போட்ட மக்கள் அதை மறந்துவிடாதீர்கள் இது ஒன்றும் எச்சரிகை இல்லை மக்களின் உண்மையான ஆதங்கம் காத்துகொண்டிருக்கிறேம் இன்ஸா அல்லாஹ்.
உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். கட்சிக்காக பாடுபட்ட மக்களுக்காக ஊருக்காக உரிய முறைப்படி அபிவிருத்திகள் சென்றடைய வேண்டும் என்பதுதான் இதன் விளக்கம்.
பதவி,தலைமை,பட்டம் என்பன அமானிதம் நிச்சயம் இறைவனிடம் பதில் செல்ல வேண்டிவரும் மக்களை ஏமாற்றலாம் அல்லாவை ஏமாற்றலாமா ??

ஒலுவில் ஜெலில்