Monday, August 1, 2016

தமிழ்-முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டியவை எவை?


தமிழ்-முஸ்லிம்கள் பேசித் தீர்க்க வேண்டியவை எவை?

தமிழ்-முஸ்லிம் மக்களுக்குப் பெரும் ஆபத்தாக விளங்கி வந்த மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும் தமக்கு இருக்கின்ற பிரச்சினைகள் அனைத்தையும் புதிய அரசின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதற்கான முயற்சியில்  இன்று அந்த மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அரசால் கொண்டு வரப்படவுள்ள அரசியல் தீர்வு தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு பொறிமுறையாக இருக்க வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர்.இந்த வருடத்துக்குள் அரசியல் தீர்வு  வழங்கப்படும் என அரசு அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 இந்த அரசியல்தீர்வு வருவதற்கு  முன்னதாகவே அது  எவ்வாறு அமைய வேண்டும்;அதில் தமிழர்களுக்கான பங்கு என்ன;முஸ்லிம்களுக்கான பங்கு என்ன என்ற  முடிவுக்கு இரண்டு இனங்களும் அவசரமாக வர வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரம் மற்றும் வடக்கு-கிழக்கு மீளிணைப்பு போன்றவைதான் இரண்டு இனங்களும் பேசி முடிவெடுக்க வேண்டிய பிரச்சினைகளுள் முதன்மையான பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. இவை  தொடர்பில் இரண்டு இனங்களும் பேசி எட்டப்படும் முடிவுகள்தான் அரசியல் தீர்வுப் பொதியில்  உள்ளடக்கப்பட்ட வேண்டும்.அவ்வாறானதோர்  அரசியல் தீர்வுதான்  நீண்ட ஆயுளைக் கொண்டதாக அமையும்.
அதிலும்,குறிப்பாக,வடக்கு-கிழக்கு மீளிணைப்பு என்பது மிகவும் சிக்கலான விடயம். அது தமிழ்-முஸ்லிம் மக்களிடையே சிக்கலை ஏற்படுத்தக்கூடிய விடயம்.இந்த விவகாரத்தில் இருக்கின்ற அவநம்பிக்கை மற்றும் புரிந்துணர்வின்மை போன்றவைதான் இந்தச் சிக்கலுக்கே காரணமாகும்.
வடக்கு-கிழக்கு மீளிணைப்பை தமிழர்கள் உறுதியாகக் கோருகின்றபோதிலும்,முஸ்லிம்கள் அது தொடர்பில் மாறுபட்ட நிலைப்பாட்டிலேயே  உள்ளனர். அதாவது,கிழக்கு முஸ்லிம்கள் மீளிணைப்பை விரும்பவில்லை.தங்களின் அரசியல் செல்வாக்குப் பாதிக்கப்படும் என்ற அச்சமே இதற்கு காரணம்.
முஸ்லிம்களின் சனத் தொகை விகிதம் குறைந்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற வாய்ப்பை இழப்பது உள்ளிட்ட பல அரசியல் அனுகூலங்களை தாம் இழக்க வேண்டி வரும் என்று முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.இந்த அச்சத்தைப் போக்குவதற்கு-இது தொடர்பில் தெளிவை ஏற்படுத்துவதற்கு இதுவரை எவருமே நடவடிக்கைகளை எடுக்காததால் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல் உள்ளது.
இதைமணத்தில் வைத்துக் கொண்டுதான் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பேசித் தீர்க்கவேண்டிய பல விடயங்கள் உள்ளன என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அமரர் மு.சிவசிதம்பரத்தின் 93ஆவது பிறந்ததின நினைவு நிகழ்வு கரவெட்டி தச்சை ஐங்கரன் முன்பள்ளி மண்டபத்தில்  இடம்பெற்றபோது அதில் சிறப்புரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இரண்டு இனங்களும் பேசித் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளபோதும்,அவற்றுள் மிக முக்கியமானவை வடக்கு-கிழக்கு மீளிணைப்பும் காணிப் பிரச்சினையும்தான்.இந்தப்பிரச்சினைகளுக்கு ஒரு முடிவைக் காணாமல் அரசியல் தீர்வொன்றைக் கொண்டு வருவது அர்த்தமற்ற செயலாகவே அமையும்.
அவரவர் பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட வேண்டும்;அவற்றுக்கான தீர்வுகள் முன்மொழியப்பட வேண்டும்.பிரச்சினையைச் சுமந்து வாழ்கின்ற மக்கள்தான் தீர்வை அடையாளம் காண வேண்டும்.இல்லாவிட்டால் பிரச்சினைக்குப் பொருந்தாத தீர்வை அரசு என்ற வெளியாட்கள் திணிக்கும் நிலை ஏற்படும்.
அவ்வாறு திணிக்கப்பட்டால் அது இரண்டு இனங்களுக்குமே பாதகமாக அமையலாம்அதுபோக,இரண்டு இனங்களும் வரலாற்று நெடுகிலும் மனக்கசப்புடன்-வேற்றுமையுடன் வாழும் நிலையும்  ஏற்படலாம்.அவ்வாறு நடந்தால் அது அரசியல் தீர்வாக அமையாது;இருக்கின்ற பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும் ஒரு பொரிமுறையாகவே அது பார்க்கப்படும்.
தமிழ்-முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தயாரிக்காத -வெளி ஆட்களால் தரப்படும் அரசியல் தீர்வு எதிர்காலத்தில் எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை சற்றுத் தூரநோக்கோடு சிந்தித்துப் பார்த்தால் அந்தப் பாதிப்பைத் தடுப்பதற்கான முயற்சிகளில் இந்த இரண்டு இனங்களும் இப்போதே ஒன்றிணைந்து இறங்கும்.
அரசியல் தீர்வு என்பது மேற்படி இரண்டு இனங்களும் ஒன்றிணைந்து எடுக்கும்  இனக்காப்படுகளின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்ற உண்மையை இவர்கள் ஏற்றுக்கொண்டாலும் நடைமுறையில் இவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவதாகத் தெரியவில்லை.கொள்கையளவில் மாத்திரம் நிற்கின்றது.
ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் அழைப்பு விடுப்பது மாத்திரம் போதாது. அழைப்பு விடுப்பதை விடுத்து ஒன்றிணைந்து களத்தில் குதித்தால்தான் அரசியல் தீர்வை பொருத்தமான தீர்வாக மாற்றியமைக்க முடியும்.இது தொடர்பில் தமிழ் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் அண்மையில் சந்தித்துப் பேசியதோடு சரி.அதன் பின் எதுவும் நடக்கவில்லை.
இந்த இரண்டு கட்சிகளும் களத்தில் குதித்தால்தான் தீர்வு விடயத்தில் தமிழ்-முஸ்லிம்  மக்களை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வர முடியும்;தீர்வை சாத்தியமானதாக்க முடியும்.முக்கியமாக சர்ச்சைக்குரிய -தமிழ்-முஸ்லிம் உறவைக் கேள்விக் குறியாக்குகின்ற வடக்கு-கிழக்கு மீளிணைப்பு தொடர்பில் ஒரு தீர்மானத்துக்கு வர முடியும்.
ஆகவே,அமைச்சர் ஹக்கீம் கூறுவதுபோல்,பேசித் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் அனைத்தும் தெரிவு செய்யப்பட்டு பேசிச்சுக்கள் உடனே தொடங்கப்பட்ட வேண்டும்.அரசால் வழங்கப்படப் போகும் அரசியல் தீர்வை தங்களுக்கு சாதகமான தீர்வாகப்பெறுவதற்கு நாம் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும்.

 [எம்..முபாறக் ]

No comments:

Post a Comment