Thursday, April 27, 2017

மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ். – கூட்டமைப்பு இணைந்து செயற்படும்


மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை விவகாரத்தில்

முஸ்லிம் காங்கிரஸ். – கூட்டமைப்பு இணைந்து செயற்படும்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)



இறக்காமம் மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதைத் தடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இணைந்து செயற்படத்தீர்மானித்துள்ளன. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நேற்று முந்தினம் இரவு (26) கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் ஆழமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாயக்கல்லி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய உயர் மட்ட நடவடிக்கைகள் குறித்தும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன இணைந்து ஜனாதிபதியை சந்திப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு குறித்த பிரதேசத்தில் பௌத்த விகாரை அமைப்பது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயலாகும்.


குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாணசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்துவதற்கு உயர் அதிகாரிகள் இடைஞ்சலாக இருக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment