Monday, April 30, 2018

குண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள் 8 ஊடகவியலாளர்கள் உட்பட் உட்பட 29பேர் பலி


குண்டுத் தாக்குதலில் 11 குழந்தைகள்
8 ஊடகவியலாளர்கள் உட்பட் உட்பட 29 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 11 குழந்தைகள், எட்டு ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் குறைந்தது 45 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து ஊடகவியலாளர்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாவது குண்டுத் தாக்குதல் தொடர்பில் அறிக்கையிடுவதற்காக குறித்த இடத்தில் கூடிய ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. 
குறித்த தாக்குதலில் மதச் சார்பு பாடசாலை ஒன்றில் பயிலும் 11 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளரைப் போல் வந்த ஒருவன் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 21 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒருவர் பிரபல செய்தி நிறுவனமான ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் நிறுவனத்தை சேர்ந்த புகைப்பட நிபுணர் ஷா மராய் என்பதும் உள்நாட்டை சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவரும் இந்த தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
காயமடைந்த சுமார் 30 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தமது நாட்டில், ஒரே தாக்குதலில் இத்தனை ஊடகவியலாளர்கள் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென, ஆப்கான் ஊடகவியலாளர் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருவாரத்திற்கு முன்னதாக காபுலில் வாக்காளர் பதிவு நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.









பச்சைமிளகாய் விலையில் பாரிய வீழ்ச்சி


பச்சைமிளகாய் விலையில்
பாரிய வீழ்ச்சி



கிழக்கில் பச்சைமிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது.
இதனால், ஈடுசெய்முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் மொத்த விலை 20 ரூபாவாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இவ் விலை தொடரச்சியாக இருந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 கடந்த வருட இறுதி மாதத்தில் ஒரு கிலோ பச்சைமிளகாயின் மொத்தவிலை 800 ரூபா தொடக்கம்1000 ரூபா வரை உயர்ச்சியடைந்து காணப்பட்டிருந்தது.
சாதாரணமாக இம்மாதத்திலே ஒரு கிலோ பச்சைமிளகாயின் விலை 250 ரூபா தொடக்கம் 280 ரூபா வரை செல்வது வழமையாக இருந்து வந்தது, ஆனால் இந் நிலை தற்போது தலைகீழாக மாறி பச்சைமிளகாயின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஏழு நட்சத்திர சொகுசு வீட்டுத்தொகுதி சீனாவின் முன்னணி நிறுவனம் கைச்சாத்து


இலங்கையில் ஏழு நட்சத்திர சொகுசு வீட்டுத்தொகுதி
சீனாவின் முன்னணி நிறுவனம் கைச்சாத்து



இலங்கையில் ஏழு நட்சத்திர சொகுசு வீட்டுத்தொகுதி கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான உடன்படிக்கையொன்றில் சீனாவின் முன்னணி நிறுவனம் ஒன்று கைச்சாத்திட்டுள்ளது.
சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனமே இலங்கையுடன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
கொழும்பு 4 இல் 300 மில்லியன் ரூபா முதலீட்டில் இந்த கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
50 மாடிகளைக் கொண்ட இந்த இரட்டைக் கோபுரக் கட்டடம், 584 அலகுகளைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sunday, April 29, 2018

அவர் இன்று இப்படிச் சொல்கிறார்! இவர் ஏற்கனவே அப்படிச் சொல்லிவிட்டார்!!


அவர் இன்று இப்படிச் சொல்கிறார்!
இவர் ஏற்கனவே அப்படிச் சொல்லிவிட்டார்!!



முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே ப்ரச்சினைக்குத் தீர்வாக அமையும்.
இப்படிச் சொல்கிறார் இரா- சம்பந்தன்  

தமிழர்களின் அபிலாஷைகளுக்கு குறுக்கே முஸ்லிம்கள் நிற்கக்கூடாது.
ஏற்கனவே இப்படிச் சொல்லிவிட்டார் - ஹக்கீம்


குயில்களும் கூதலும் - எஸ். முத்துமீரான்


குயில்களும் கூதலும்


####################




வெள்ளாப்பில் கூவுகின்ற குயில்களெல்லாம்,
விரக்தியுடன் வாயடைத்து இருப்பதென்ன?
களிப்பூட்டி குரலெழுப்பும் குயில்களின்று,
கவலையுடன் சோர்வடைந்து கிடப்பதென்ன?
துளிர்விட்டு மலர்சொரியும் மரங்களிலே
கிளை விட்டு கிளை தாவி குதூகலிக்கும்
குயில்களெல்லாம், கிளைகளுக்குள் மறைந்திருந்து
விடியலை வெறுத்தொதுக்கி தூங்கி அழும்
வேதனையின் சோதனைக்கு, யார்பொறுப்போ?
கூதலில் உடல் சுருங்கி வாடுகின்ற,
குயில்களெல்லாம் சோகத்தால் அமைதியாக,
ஆண்டவனைத் துதித்து, நல்ல
அருள் வேண்டி துதிக்கிறதோ? கூதல் மாற
பூந்தாது இல்லாமல் குயில்களெல்லாம்
புண்ணான புழுக்களையும் பூச்சியையும்
புசித்ததினால் குரலெல்லாம் புண்ணாகிப் போய் விட்டதினால்
புவிமீது கூவாமல் போனதுவோ?
கான க் குயில்களெல்லாம் கடும் பசியால் வாடியின்று
வானத்தைப் பார்த்து வாடி வதங்குவது,
ஞாலத்தில் இறைதந்த, நல்ல படிப்பாமோ?
வாழ்க்கையில் குயில்களுக்கு, வல்லோனளித்த இந்த
வளமான குரல் வளத்தை, மீண்டுமளிக்க
கூ தலை நீக்கி, குதூகலத்தை தந்துவிடு.
- எஸ். முத்துமீரான்

முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக நீதியான தீர்வு காண அழைப்பு


முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக
நீதியான தீர்வு காண அழைப்பு



திருகோணமலை - ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூயில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளும் அதன் பின்னர் நிகழ்ந்து வரும் சம்பவங்களும் கவலையளிக்கின்றன என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் NFGG வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய விடயம் இரண்டு சமூகங்களுக்கிடையிலான விரிசலாக மாறிவிடக் கூடாது. இந்த விடயத்தில் ஒவ்வொருவரும் தமது பொறுப்பினை தத்தமது சமூகங்களின் பக்கம் நில்லாது நீதியின் பக்கம் நின்று அணுக வேண்டும்.

இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் நிலைப்பாடு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் தனித்துவமான ஆடை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையும் அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் மிகவும் கவலையளிக்கின்றன.

சகலருக்குமான புதிய இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் ஒவ்வொரு சமூகத்தவர்களினதும் கலாச்சார தனித்துவங்களை மதித்து பரஸ்பர அனுசரிப்புகளோடு எல்லோரும் நடந்து கொள்ள வேண்டிய தருணத்தில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையினையும் தருகின்றன.

பாடசாலை மட்டத்தில் நிர்வாக ரீதியாக கையாளப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்க வேண்டிய இவ்விடயம் இனவாத பிரதிபலிப்புகளைக் கொண்ட உடனடி ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டமையினை எந்த வகையிலும் எற்றுக்கொள்ள முடியாது.

மட்டுமன்றி, முஸ்லிம் ஆசிரியையின் கணவரினால் அதிபர் மிரட்டப்பட்டார் என்ற ஒரு பிரதான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவசரமான இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவ்வாறு எவரும் தன்னை மிரட்டவில்லை என அந்த அதிபர் தற்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சினை திட்டமிடப்பட்ட வகையில் தீய நோக்கம் கொண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பூதாகரமான ஒன்றாக மாற்றப்பட்டுள்ளதாகவே நம்ப வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தான் விரும்பும் ஒழுங்கில் ஆடை அணிவதற்கான சுதந்திரத்தினை இந்த நாட்டின் யாப்பு உத்தரவாதப்படுத்தியுள்ளது. அது போலவே குறித்த இந்தப் பாடசாலை மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசாங்கப் பாடசாலையாகும்.

இதற்கென கல்வித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபங்கள் இருக்கின்றன. இதன் பிரகாரம் சீரான உடைகளை அணிந்து வர வேண்டும் என ஆசிரியர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதே தவிர இதைத்தான் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை.

இதனை அனுசரிக்கும் வகையில் சகல அரசாங்கப் பாடசாலைகளும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது கடமையாகும்.

முஸ்லிம் கலாச்சார தனித்துவங்களைப் பேணும் பாடசாலைகள் அனைத்தும் பிற மத ஆசிரியைகளின் ஆடை விடயத்தில் எவ்வாறு சட்டத்தையும் அடுத்தவர்களின் கலாச்சார தனித்துவங்களையும் மதித்து நடந்து கொள்கிறன என்பதனை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் இந்த விடயமானது ஒரு பாடசாலையின் உள்விவகாரமாகவும், நிருவாகத்துடன் தொடர்பான நடவடிக்கையாகவும் சொல்லப்பட்டாலும், அடிப்படை உரிமை மீறலாகவே இது அமைந்துள்ளது.

எந்தவொரு பிரஜையினதும் அடிப்படை மற்றும் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட உரிமைகள் அனைவராலும் மதிக்கப்பட வேண்டும்.

ஒரு தரப்பின் தனித்துவத்தை, இன்னொரு தரப்பினர் மீது திணிப்பது கலாச்சார அத்துமீறலாகவே கருதப்பட வேண்டும்.

இலங்கையின் பன்மைத்துவத்தை மதித்து, பல்லினக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கொண்டுள்ளோம்.

சக சமூகத்தினரதும், பிரஜைகளதும் சுயாதீனத்தை மதித்து நடக்க வேண்டிய தேவை முன்பை விடவும் சம காலத்தில் மிக அதிகமாக உணரப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் தலையிட்டு, சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கிறது

நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிப்பு


நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை

ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை எனத் தெரிவிப்பு



புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன.
புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியல் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐதேகவினால் வழங்கப்படவுள்ளது.
இந்த அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறு விலகிச் சென்றவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் சாத்தியங்கள் இல்லை என்றும், அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளனர் என்றும் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


போலி நாணயங்களுடன் 4 இளைஞர்கள் கைது!


போலி நாணயங்களுடன் 4  இளைஞர்கள் கைது!



பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் போலி நாணயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்த குறித்த நான்கு பேர் 5000 ரூபாய் போலி நாணயத்தாள் பதினொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடி எரிபொருள் நிலையத்தில் தமது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பியதன் பின்னர் நாணயத்தாளை வழங்கும் பொழுது எரிபொருள் நிலைய ஊழியர் இது போலி நாணயத்தாள் என அறிந்து பொலிஸாருக்கு  தெரிவித்ததன் பேரிலேயே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் இப்படிச் சொல்கிறார் இரா.சம்பந்தன்...!


முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிவதே
பிரச்சினைக்குத் தீர்வாக அமையும்
இப்படிச் சொல்கிறார் இரா.சம்பந்தன்...!



திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கென உலகம் ஏற்றுக்கொண்ட ஒரு மரபு உண்டு. அந்த மரபுகளுக்கு ஏற்ப கருமங்கள் நடக்க வேண்டும். அவற்றை மீறாமல் பேச்சு நடத்தப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை ஸ்ரீ சண்மு இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியைமார்அபாயாஅணிவது தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று கேட்டபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது:
திருகோணமலை ஸ்ரீ சண்மு இந்து மகளிர் பாடசாலை சுமார் 150 வருட பாரம்பரிய வரலாறைக் கொண்டது. அந்த நாட்களில் திருகோணமலையில் உள்ள இந்து மகளிருக்கு ஒரு பாடசாலை தேவையென சைவ இந்துப் பெரியார்களும் நலன்விரும்பிகளும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட தனியார் பாடசாலை இது.
எனவே, அதற்கென உள்ள சம்பிரதாயங்கள் மதிக்கப்படவேண்டும் எனப் பெற்றோரும் பாடசாலை சமூகமும் விரும்புகின்றது. அந்தப் பாடசாலைக்கென உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பாரம்பரியம் மரபுகளுக்கு ஏற்ப செயற்பட வேண்டும். இந்த விடயங்கள் பேசப்பட்டு நிதானமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

எத்தனையோ சகாப்தங்களாக இருக்கும் நடைமுறையை திடீரென மாற்றிவிட முடியாது. எனவே, பேசி சில விடயங்களுக்குத் தீர்வை நாம் காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Saturday, April 28, 2018

ஹபாயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து விஜயா பாஸ்கரன் - பட்டது போதும்...........


ஹபாயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்து
விஜயா பாஸ்கரன்
பட்டது போதும்...........




நான் ஒரு இந்து.சைவன்.எங்களையே பாடசாலைக்கு வரவிடாமல் தடுத்த வரலாறு உண்டு.ஒரு ஒடுக்கப்பட்ட சாதி மாணவனை படிக்கச் சேர்த்ததால் பாடாசாலையே பகிஸ்கரித்த வரலாறுஉங்களுடையது.வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம்,வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் வரலாறுகள் அதுதான்.1972 வரை புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியில் இந்து மத ஒடுக்கப்பட்ட சமூக மக்களை படிக்க அனுமதிக்கவில்லை.இதுதான் உங்கள் இந்து கலாச்சாரம்.நாகரீகம்.அதன் மறுவடிவமே இந்த ஆர்ப்பாட்டம்.
முப்பது வருட யுத்தம் இந்த மண்ணில் பல்லாயிர கணக்கான உயிர்களை பலியெடுத்துவிட்டது.அது எந்த இனத்தையும் விட்டு வைக்கவில்லை.அந்த யுத்தம் சாதி,மதம்,பணக்காரன்,பதவியில் இருந்தவன் எவனையும் விட்டு வைக்கவில்லை.

2009 மே 17 இல் முடிவுக்கு வந்தது.உரிமை கேட்டு போராடி இறுதில் உயிர்களையாவது காப்பாற்ற முடியாமல் திண்டாடினோம்.ஏதோ ஒரு வழியாக நாங்களாவது எஞ்சியுள்ளோம்.இனியும் சாதி,மத,இன, குரோதங்கள் வேண்டாம்.

திருகோணமலை பாடசாலை ஒன்றில் இஸ்லாமிய எதிர்பு தொடக்கியுள்ளார்கள்.நிச்சயமாக பாமர மக்கள் எவரேனும் இதை செய்ய மாட்டார்கள்.அவர்களுக்கு வாழ்க்கையோடு போராடவே நேரம்இல்லை.

பாடசாலை சீருடைகள் தமிழ் அல்லது இந்து கலாச்சாரமா? பான்ட் இசைக் கருவிகள் தமிழர் வாத்தியமா?ஆண்கள் யாரும் வேட்டி கட்டி பாடசாலைக்கு வருவதில்லை.அப்படி இருக்க ஏன் இந்த விதண்டவாத நியாயங்கள்.போராட்டங்கள்?

இது வெறும் சமூகத்துக்கு பயன்ற்ற படித்தவர்களின் செயற்பாடு என்பதே உண்மை.பாடசாலை என்பது பொதுவான ஒன்று.அதுவும் அரசாங்க பாடசாலை.இது எந்த மதம் இனத்துக்கும் சொந்தம் அல்ல.யாரும் படிக்கலாம்.படிக்கப் போகலாம்.

பேராசிரியர் சிவத்தம்பி படித்தது மருதானை ஷாகிரா கல்லூரி.மைத்திரிபால சேனநாயக்கா படித்தது யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி.கே.பி.ரத்னாயக்கா படித்தது பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி.மூதூர் மஜீத் படித்தது யாழ் இந்துக் கல்லூரி.செல்வநாயகம் படித்தது கொழும்பு சென் தோமஸ் கல்லூரி.பாடசாலைகள் எந்த மனிதருக்கோ இனத்துக்கோ மதத்துக்கோ சொந்தம் அல்ல.இந்திய அணு விஞ்ஞானி அப்துல் கலாம் படித்தது திருச்சி சென் ஜோசப் கல்லூரி.

அப்துல் கலாம்,.ஆர்.ரகுமான் எல்லாம் உலகப் புகழ் பெற்றவுடன் மதம் மறந்து தமிழன் என கொண்டாடுகிறோம்.ஆனால் சாதாரண இஸ்லாமிய மக்களை ஏற்கமுடியவில்லை.உணர்வுகளை மதிக்க விரும்பவில்லை.எங்களது பண்புகளை இனவாத கண்ணோட்டத்தால் தாழ்த்துகிறோம்.வேண்டாம் திருந்துங்கடா.

திருகோணமலையில் தமிழர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது.அவை எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை.இது ஒரு பிரச்சினையா?சைவ கோவிலுக்குள் வந்து பௌத்த இராணுவம் தேர் இழுக்கிறது .ஆனால் இந்து மதம் சார்ந்த பக்தியுள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தவன் கயிற்றை தொடவே முடியாது.என்ன இந்து,சைவ,தமிழ் பண்பாடு? திருந்தவே மாட்டீர்களா?

முடிந்தால் கன்னியா சைவக் கோவிலை உடைத்து புத்தர் சிலைகள் முளைத்துள்ளன.குச்சவெளி கரடி மலை அருகே உள்ள சைவக் கோவிலை உடைத்து விகாரை எழுந்துள்ளது.முடிந்தால் அங்கே உங்கள்் உரிமையை நிலை நிறுத்துங்கள்.முடியாது.அதிகாரம் உள்ளவர்களோடு மோதும் துணிவு இல்லை.அதிகாரமே இல்லாத அப்பாவி சம மத உறவுகளோடு மட்டும் மோதுவீர்கள்.வீரத்தை காட்டுவீர்கள்.

அவர்கள் சகோதரர்கள்.எங்கள் தாய் மொழி ஒன்றே.மதம் ட்டுமே வேறு.கிறிஸ்தவர்களம் வேறு மதம்தான்.அவர்களோடு உறவாட முடியும் என,றால் இஸ்லாமியர்களோடு ஏன் உறவாட முடியாது.ஆசிரிய நியமனம் இஸ்லாமிய பாடசாலைகளில் கிடைத்தால் நிராகரிக்க முடியுமா? அப்படி செல்பவர்களை தடுக்க முடியுமா?கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்பதை பெருமையாக நினைப்பவர்களே இந்த கலாச்சார இந்து,சைவ,தமிழர்கள்.

நான் ஒரு இந்து.சைவன்.எங்களையே பாடசாலைக்கு வரவிடாமல் தடுத்த வரலாறு உண்டு.ஒரு ஒடுக்கப்பட்ட சாதி மாணவனை படிக்கச் சேர்த்ததால் பாடாசாலையே பகிஸ்கரித்த வரலாறுஉங்களுடையது.வண்ணை வைத்தீஸ்வரா வித்தியாலயம்,வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் வரலாறுகள் அதுதான்.1972 வரை புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரியில் இந்து மத ஒடுக்கப்பட்ட சமூக மக்களை படிக்க அனுமதிக்கவில்லை.இதுதான் உங்கள் இந்து கலாச்சாரம்.நாகரீகம்.அதன் மறுவடிவமே இந்த ஆர்ப்பாட்டம்.
கல்வியிறிவில் முன்னேறியபோதும் பக்குவப்படாத மனிதர்களாக இருக்கிறோம்.வேண்டாம் இந்த முரண்பாடுகள்.ஏழைகளை மாணவர்களை பலிக்கடா ஆக்கவேண்டாம்.
 பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்க வேண்டாம்.உங்களுக்கு அரசியல் பிழைப்பு.மக்களுக்கு இழப்பு.
Vijaya Baskaran   
Madduvil mahavithyalayam